By Village Missionary Movement
Monday, 19-Dec-2022இன்றைய தியானம்(Tamil) 19-12-2022 (Christmas Special)
பணித்தளங்களில் நற்செய்தி
“இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளேயும், கெட்டுப்போகிறவர்களுக்குள்ளேயும், நாங்கள் தேவனுக்குக் கிறிஸ்துவின் நற்கந்தமாயிருக்கிறோம்.” – 2 கொரி. 2:15
பெரிய பணக்கார வீட்டில், குடும்ப வறுமையின் நிமித்தமாக வேலைக்காரியாக பணிபுரிந்தாள் செல்வி. படிப்பை பாதியிலேயே நிறுத்தி வேலைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை. இயேசுவை மிகவும் நேசிக்கக்கூடியவள். ஜெபிக்காமல் எந்த ஒரு வேலையும் செய்யமாட்டாள். அவள் வேலை செய்த வீட்டிலே ஒரே ஒரு பிள்ளையாய் ரீனா என்ற வாலிபப் பெண்ணும் இருந்தாள். ரீனா எவ்வளவேனும் பெற்றோரை மதிக்காமல் தன் மனம்போல் வாழ்ந்து வந்தாள். அவளது தாய் தனது மகள் மேலுள்ள கோபத்தையெல்லாம் செல்வியின் மீதுதான் காட்டுவாள். இரக்கமில்லாமல் அவளிடம் நடந்துகொள்வாள். ஒருநாள் காலேஜ்-க்கு போய் வந்த ரீனா பயங்கர மன உளைச்சலில் காணப்பட்டு தன் கையில் கிடைத்த பொருட்களைக் கொண்டு தன்னை காயப்படுத்திக்கொண்டிருந்தாள். பெற்றோர்கள் எவ்வளவோ சமாதானப்படுத்த முயன்றும் முடியவில்லை. மிகுந்த மன வேதனை! இதைக் கண்ட செல்வி மனதிற்குள் ஜெபித்துக்கொண்டே ரீனாவிடம் சென்று அன்பாகப் பேசினாள். முதல் நாள் செல்வியின் வார்த்தையைக் கேட்க மறுத்த ரீனா ஓரிரு நாட்களில் அவள் வார்த்தைக்கு செவிகொடுக்க ஆரம்பித்தாள். இயேசுவின் அன்பைக் கேட்கக் கேட்க ரீனாவின் மன உளைச்சல் மாறி அவளுக்குள் பெரிய மாற்றம் ஏற்பட்டது. செல்வியின் செயல், சாட்சியுள்ள வாழ்வு ரீனாவின் குடும்பத்திலேயே பெரிய மாற்றத்தினைக் கொண்டுவந்தது.
இதைப்போலத்தான் வேதத்திலும்கூட 2 இராஜாக்கள் 5ம் அதிகாரத்தில் படைத்தளபதியாக நாகமான் வீட்டில் இருந்த அந்த சிறுபெண் அடிமையாக இருந்தாலும், தனக்கு கொடுக்கப்பட்ட வேலையில் மட்டும் கவனம் செலுத்தாமல் மற்றவர்கள் மீதும் கரிசனையுள்ளவளாயிருந்தாள். பொதுவாக அடிமையின் வார்த்தைக்கு யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால் நாகமான் ஒரு படைத்தளபதியாய் இருந்தும் தனது வீட்டிலுள்ள அந்த அடிமைப்பெண், அதுவும் சிறுபெண், அவள் வார்த்தையைக் கேட்பாரென்றால் அந்தப் பெண் ஆண்டவரோடு உள்ள ஐக்கியத்தில் சாட்சி வாழ்க்கையில் எப்படி இருந்திருப்பாள் பாருங்கள். அந்த வீட்டில் எவ்வளவு மாதிரியாய் நடந்திருப்பாள். அவளது அந்த வார்த்தை சீரிய நாட்டிற்கு ஒரு இரட்சிப்பையே கொண்டு வந்துவிட்டதே.
அன்பான கிறிஸ்தவர்களே! நீங்கள் எந்த இடத்தில் பணிசெய்கிறீர்களோ அதுதான் உங்களுக்குப் பணித்தளம். நீங்கள் எப்பேர்பட்ட பணியை செய்துகொண்டிருந்தாலும் அந்த இடத்தில் இயேசுவைப் பற்றி சொல்ல மறவாதிருங்கள். சொல்வதற்கு முன்பு தேவ சமுகத்தில் அதிக நேரம் காத்திருக்க வேண்டும். முன்மாதிரியாய் வாழ்ந்து காட்ட வேண்டும். அப்பொழுதுதான் நாம் சொல்லுகிற வார்த்தை மற்றவர்களுடைய இருதயத்தில் கிரியை செய்யும். எனவே தேவனோடு உள்ள உறவில் அதிக நேரம் செலவிடுவோம். பிறருக்கு இயேசுவின் அன்பைக் கூறி இந்த வருட கிறிஸ்துமஸை அர்த்தமுள்ள கிறிஸ்துமஸாக கொண்டாடுவோம்.
- Mrs. சாராள் சுபாஷ்
ஜெபக்குறிப்பு:
மீடியா ஊழியங்களுக்கு அர்ப்பணிப்புள்ள நன்றாக பணி தெரிந்த நபர்கள் ஊழியத்தில் இணைய ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
https://wa.me/+919444011864
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864