By Village Missionary Movement
Tuesday, 13-Dec-2022இன்றைய தியானம்(Tamil) 13-12-2022 (Christmas Special)
தினம், தினம்...
“…ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுச்சிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின.’’ – 2 கொரி.5.17
லண்டன் நகருக்கு அருகிலுள்ள ஒரு சிறிய கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ்-க்கு முந்தைய நாள் இரவு கிறிஸ்துவின் பிறப்பைக் குறித்து நாடகம் நடத்துவது வழக்கம். அக்கிராமத்தினரே அதில் நடிகர்களாக நடிப்பார்கள். அந்த ஆண்டு வாலெஸ் என்ற வாலிபன் புதிதாக நாடகத்தில் நடிக்க விரும்பி நாடக அமைப்பாளரை அனுகி நடிக்க அனுமதி கேட்டு அதிலும் மேய்ப்பனாக நடிக்க விருப்பம் தெரிவித்தான். ஆனால் நாடக அமைப்பாளரோ, “நீ நல்ல உயரமாக இருக்கிறாய், ஏன் மேய்ப்பர் பாத்திரத்தில் நடிக்க விரும்புகிறாய்” என்று கேட்டார். அதற்கு வாலெஸ், “ஐயா இயேசுவை முதலில் பார்த்த பாக்கியம் மேய்ப்பர்களுக்குக் கிடைத்தது. அதனால்தான்” என்று சொன்னான். நாடக அமைப்பாளர், “நீ சத்திரக்காரர் வேடத்தில் நடி’’ என்று சொன்னார். வாலெஸ் ஒருவாறு தலையை அசைத்தார். பயிற்சியும் முடிந்து, நாடக நாளும் வந்தது.
உள்ளூர் தேவாலயத்தில் போதகர் ஜெபித்து நாடகத்தை ஆரம்பித்து வைத்தார். வாலெஸ் சத்திரக்காரர் வேடத்தில், வரவேற்ப்பு அறையில் பணியாளர்களை வேலை வாங்குவதுபோல் நடித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் நிறைமாத கர்ப்பிணியாக எந்த நேரத்திலும் பிரசவம் ஆகலாம் என்ற நிலையில் மரியாளும், யோசேப்பும் நீண்ட தூரம் களைப்போடு இளைப்பாற இடம் கிடைக்காதா என்ற ஏக்கத்தோடு சத்திரத்திற்கு அருகில் வந்துவிட்டனர். சத்திரக்காரனான வாலெஸிடம், என் மனைவி நிறைமாத கர்ப்பிணி. எங்களுக்கு சத்திரத்தில் தங்க இடம் கிடைக்குமா’’ என்று கேட்டார். அதற்கு சத்திரக்காரன், ‘’இங்கு இடம் கிடையாது. நீங்கள் போகலாம்’’ என்று கடுமையாக பேசினார். யோசேப்பும் , மரியாளும் துக்கத்தோடு போகையில் வாலெஸ் மனம் உருகியது. ஐயோ இப்படி பேசிவிட்டேனே என்று மனதுருகினார். உடனே வாலெஸ், ‘’யோசேப்பு நீங்கள் போக வேண்டாம். என்னுடைய அறையில் தங்கிக்கொள்ளுங்கள். இயேசு என்னுடைய வீட்டில் இன்று பிறக்கட்டும்’’ என்று கூறினார். இதைப் பார்த்த நாடக அமைப்பாளார், “வாலெஸ் நீ நாடகத்தையே கெடுத்துவிட்டாய்’’ என்று கத்தினார். ஒருவாறு சமாளித்து அடுத்த காட்சிக்கு சென்றனர். நாடகமும் முடிந்தது.
இறுதியில் அக்கிராமத்தலைவன் கூறினார், “வருடாவருடம் நாம் இந்த நாடகத்தைப் பார்க்கிறோம். ஆனால் தம்பி வாலெஸ் சொன்ன வார்த்தை நம் அனைவரையும் சிந்திக்க வைத்தது. ஆம், இயேசு என் வீட்டில் பிறக்கட்டும் என்று அவர் சொன்னது எவ்வளவு அருமையானது. இன்று நம் உள்ளத்திலும் இயேசு பிறக்க நம்மை அர்ப்பணிப்போம்” என்று கூறினார். ஆம், பிரியமானவர்களே! வருடத்திற்கு ஒருமுறை மட்டும் கிறிஸ்துமஸ் கொண்டாடுவது அல்ல, இயேசு நம்மில் பிறந்து நம்முடைய வாழ்வில் கிறிஸ்து பிறந்தார் என்ற அளவில்லா சந்தோஷம் நம்மை நிரப்பட்டும். அதுவே அர்த்தமுள்ள கிறிஸ்துமஸ்.
- D. ஆல்வின் ஜேக்கப்
ஜெபக்குறிப்பு:
எழுப்புதல் வாலிபர் மாலையில் பங்குபெற்ற வாலிபர்கள் கடைசிக்கால எழுப்புதலின் ஆயுதங்களாக தேவனுடைய கரத்தில் பயன்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250