By Village Missionary Movement
Monday, 05-Dec-2022இன்றைய தியானம்(Tamil) 06-12-2022 (Christmas Special)
விருந்தோம்பல்
“அந்நியரை உபசரிக்க மறவாதிருங்கள்; அதினாலே சிலர் அறியாமல் தேவதூதரையும் உபசரித்ததுண்டு” - எபிரெயர்13:2
பழங்காலத்தில் கிராமப்புறங்களில் கட்டப்பட்ட வீடுகள் எல்லாம் திண்ணைகளோடு கட்டப்பட்டு இருக்கும். இதன் நோக்கம் என்னவென்றால், வழிப்போக்கர் சோர்வுறும்போது இந்த திண்ணையில் அமர்ந்து சற்று நேரம் இளைப்பாறிச் செல்வதற்காக. பழைய ஏற்பாட்டுக் காலத்திலும் நமது முற்பிதாக்களுக்கு ஒரு பழக்கம் இருந்தது. இந்தப் பழக்கத்திற்கு பெயர்தான் விருந்தோம்பல். விருந்தோம்பல் என்பது வீட்டிற்கு வருபவர்களை உபசரிப்பது! ஆனால் சமீப நாட்களாக விருந்தோம்பல் என்பது நமது உறவினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் என்ற குறுகிய வட்டத்திற்குள் மட்டும்தான் கடைபிடிக்கப்படுகின்றது.
இன்றைய வேதபகுதியில் ஆபிரகாமைக் குறித்து வாசித்தோம். அவர் பகலின் உஷ்ண வேளையிலே கூடார வாசலண்டை உட்கார்ந்திருந்த பொழுது
3 நபர்களைக் காண்கிறார். கண்ட உடனே எதிர்கொண்டு ஓடி தரைமட்டும் குனிந்து வரவேற்று அவர்கள் பசியாறுவதற்கு உணவு சமைத்து எடுத்துக்கொண்டு வந்து அவர்கள் முன்பாக வைத்து சாப்பிட்டு முடிக்கும்வரை அவர்களருகே நின்று கொண்டிருப்பதைக் காண்கிறோம். அவர்கள் தேவதூதர்கள் என்றே தெரியாத சூழ்நிலையிலும் அவர்களை உபசரித்தார். அவர்கள் மூலம் கர்த்தர் ஆபிரகாமோடே நடக்கப் போகிற காரியங்களைக் குறித்து இடைபடுகிறார்.
லூக்கா 16:19-31 வரை மற்றுமொரு சம்பவத்தைக் குறித்து வாசிக்கிறோம். தன் வீட்டு வாசலருகே கிடந்த லாசருவை விசாரிக்காமல், அவனுக்கு ஒருவேளை ஆகாரம் கூட கொடுக்காத ஐசுவரியவானுடைய ஆத்துமா பாதாளத்திலே வேதனைப்படுவதைக் காண்கிறோம். ஆம், விதவைகளையும், திக்கற்ற பிள்ளைகளையும் விசாரிக்க வேண்டும். உதவிக்காக உங்களைத் தேடி வரும் நபர்களையும், தேவையுள்ள ஜனங்களையும் கண்டும் காணாமல் செல்லாதிருங்கள். அவர்களை அலட்சியமாய் எண்ணாதிருங்கள். கிறிஸ்துவின் மனதுருக்கம் உள்ளவர்கள் அவருடைய நாமத்திலே நற்கிரியைகளைச் செய்கிறார்கள். ஏழைகளுக்கு உதவுவதும், வாரியிறைப்பதும் ஒருபோதும் ஒரு மனுஷனைத் தாழ்விற்குள் கொண்டு செல்லாது. உயர உயர உயர்த்த வழி நடத்தும் படிக்கற்களாய்தான் அமையும்.
கிறிஸ்துவில் பிரியமானவர்களே! இந்த கிறிஸ்துமஸ் நாட்களிலாவது நமக்கு அறிமுகம் இல்லாத நபர்களாயிருந்தாலும் அவர்கள் பசியோடு இருக்கிறார்கள் என்பதை அறிந்தால் நமக்குள்ளதை பகிர்ந்து கொடுப்போம். கிறிஸ்துவை அறியாத உங்களது அயலகத்தார், தெருவில் உள்ளவர்கள் மற்றும் ஒருவேளை உணவிற்காக கஷ்டப்படும் நபர்களை உங்கள் இல்லத்திற்கு வரவழைத்து அவர்களை இன்முகத்துடன் உபசரித்து, கிறிஸ்துவின் அன்பைச் சொல்லி அவர்களை கிறிஸ்துவண்டை நடத்துவோம்.
- Mrs.ஜெபக்கனி சேகர்
ஜெபக்குறிப்பு:
மிஷனெரி வீடு கட்டித்தரும் சூனேமியாள்-கள் எழும்ப ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250