By Village Missionary Movement
Monday, 05-Dec-2022இன்றைய தியானம்(Tamil) 05-12-2022 (Christmas Special)
ஊழியத்தில் அர்த்தமுள்ள கிறிஸ்துமஸ்
“ஒருவன் எனக்கு ஊழியஞ்செய்கிறவனானால் என்னைப் பின்பற்றக்கடவன்…” - யோவான் 12:26
ஒரு “வயதான இளைஞர்” அவர். வயது 65 இருக்கும். நடையில் ஒரு கம்பீரம், காலில் செருப்பு இருக்காது. எப்பொழுதும் வேட்டி ஜிப்பா அணிந்திருப்பார். ஒரு பக்கத்தோள் மீது ஜோல்னா பைக்குள் ஒரு வேதபுத்தகம், ஒரு டம்ரின் (Tambourine), மற்றொரு தோள்மீது ஒரு ஆர்மோனியப்பெட்டி, பின்பக்க முதுகில், விரித்து அமர்வதற்கு ஒரு சாக்கு மற்றும் மாற்று ஆடை ஒரு செட். எங்கும் நடந்தே செல்வார். கிடைத்தால் மாட்டுவண்டிகளில் ஏறிக்கொள்வார். எங்கு செல்வார். கிடைத்தால் மாட்டுவண்டிகளில் ஏறிக்கொள்வார். எங்கு செல்வார்? கிராமம் கிராமமாக இயேசுகிறிஸ்துவின் நற்செய்தியை சொல்வதற்கு! அவர் ஒரு கிராமத்திற்குள் நுழைந்தவுடன் சிறுபிளைகள், “ஐ தாத்தா வந்துட்டாங்க” என்று சந்தோஷத்தோடு ஒடி வருவார்கள்.
தாத்தா மாலைப்பொழுது நடுத்தெருவில் தெருவிளக்கின் கீழ் தனது தளவாடங்களை வைத்துவிட்டு தான் வைத்திருக்கும் சாக்கை விரிப்பார். வேதபுத்தகம், ஆர்மோனியப்பெட்டியை எடுத்து வெளியே வைப்பார். சத்தமாக ஆண்டவரை துதித்துப்பாடுவார். சிறுபிள்ளைகள் கூட்டமாக அமருவார்கள். கிராமத்து ஜனங்களும் வந்து நிற்பார்கள். தாத்தாவின் பஜனை பிரசங்கம் ஆரம்பிக்கும். பிரசங்கித்துக் கொண்டிருக்கும்போதே பேய்கள் ஓடும், வியாதிகள் சுகமாகும். கூட்டம் முடியும்போது யாராவது “ஐயா எங்க வீட்ல வந்து சாப்பிட்டுப்போங்க” என்று அழைத்தால் தயக்கமில்லாமல் சாப்பிடுவார். அந்த வீட்டை ஆசீர்வதித்து விட்டு தெருவிலிருக்கும் திண்ணையில் சாக்கை விரித்து படுத்து துண்டைப் போர்த்திக்கொள்வார். அதிகாலை நாலு மணிக்கு எழும்புவார். சத்தமாக ஜெபிப்பார். அருகிலிருக்கும் ஆற்றிலோ, குளத்திலோ போய் குளிப்பார். மீண்டும் தன் பயணத்தைத் தொடந்து விடுவார். இவர்தான் அருமைநாயகம் பிரசங்கியார்.
மறுநாள் அடுத்த கிராமத்தில் பிரசங்கம் ஆரம்பிக்கும். அற்புதங்கள் நடந்தாலும் அலட்டிக்கொள்வதில்லை. “அப்பனுக்கு மகிமை” என்ற வார்த்தைகளே அவர் வாயில் வரும். மக்கள் அன்போடு அரிசி, பருப்பு, வத்தல், இப்படிப்பட்ட பொருட்களை காணிக்கையாக கொடுப்பார்கள். அதை வாங்கி அடுத்த கிராமத்தில் மிகவும் கஷ்டப்படுகிற ஜனங்களுக்கு கொடுத்துவிடுவார். அவரை நான் நேரில் பார்த்ததில்லை. எனது தாத்தா சொன்ன கதை இது. கதையல்ல நிஜம். இவர் இருந்த நாட்களில் கிராமங்களில் தினந்தோறும் கிறிஸ்துமஸ்தான். சில ஏழைகளின் வீட்டில் அவர் கொடுக்கும் பொருட்களால் கிறிஸ்துமஸ் ஆரம்பிக்கும்.
இதை வாசிக்கின்றதான அன்பான நண்பர்களே! கர்த்தருடைய ஊழியம் என்பது பிழைப்பு அல்ல, அது தேவனின் அழைப்பு. இயேசுகிறிஸ்து நம்மை உண்மையுள்ளவன் என்று எண்ணி இந்தக் கனமான ஊழியத்தில் ஏற்படுத்தியிருக்கிறார். நாம் ஆத்தும ஆதாயம் செய்யும் ஒவ்வொரு நாளும் நமக்கு கிறிஸ்துமஸ்தான். ஆம் நம் ஊழியம் அர்த்தமுள்ளதாய் இருக்குமென்றால், நாம் சந்திக்கும் நபர்களின் உள்ளங்களில் அனுதினமும் இயேசுகிறிஸ்து பிறப்பார். அல்லேலூயா!
- Bro. அனீஸ்ராஜா
ஜெபக்குறிப்பு:
நம்முடைய பங்காளர்கள் மற்றும் நாம் வழிநடத்தும் வாலிபர்கள், சிறுவர்கள் இந்த கிறிஸ்துமஸை அர்த்தமுள்ள கிறிஸ்துமஸாக அனுசரிக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250