By Village Missionary Movement
Thursday, 01-Dec-2022இன்றைய தியானம்(Tamil) 02-12-2022 (Christmas Special)
வியாதியஸ்தர்களை விசாரிப்பதில் அர்த்தமுள்ள கிறிஸ்துமஸ்
“…வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; காவலிலிருந்தேன், என்னைப் பார்க்க வந்தீர்கள் என்பார்” – மத்தேயு 25:36
நான் பணிபுரிந்து கொண்டிருந்த மருத்துவமனையில் , வயதான ஒருவர் மூச்சுத்திணறலால் மிகவும் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தார். தினமும் காலையில் அவரிடம் சென்று “தாத்தா சாப்பிட்டீர்களா? உங்களுக்கு என்ன வேண்டும்?“ என்று கேட்டவுடன் ஒரு சிறுகுழந்தை போல அழகாக , அன்போடு பதிலளிப்பார். திடீரென ஒருநாள் இரவு அவருக்கு மூச்சுத் திணறல் அதிகமாக ஏற்பட்டபோது அவர் என்னை அழைத்துச் சொன்ன ஒரு காரியம் என் இருதயத்தை உடைத்து விட்டது. “தயவுசெய்து என்னை கொன்று விடுங்கள். என்னால் நோயின் வேதனையைவிட இந்தத் தனிமையின் வேதனையை அநுபவிக்க முடியவில்லை “ தயவு செய்து என்னை கொன்று விடுங்கள் என்னால் நோயின் வேதனையை விட , இந்த தனிமையின் வேதனையை அனுபவிக்க முடியவில்லை“ என்று கண்கலங்கி கூறினார். கொரோனா காலகட்டங்களில் இப்படி பலர் மருத்துவமனையில் தனிமையாகவும் , பயத்தோடும் வாழ்க்கையே வெறுத்துவிடும் நிலைக்கு தள்ளப்பட்டதன் காரணம் வியாதி அல்ல தனிமையே!
இயேசுகிறிஸ்து வாழ்ந்த காலத்தில் 38 வருடமாய் வியாதியோடு மட்டுமல்லாமல் குடும்பத்தாரால் கைவிடப்பட்டு தன்னை அந்த பெதஸ்தா என்ற குளத்தில் கொண்டுபோய் விடக்கூட யாருமில்லையே என்ற தனிமை உணர்வில் பரிதாப நிலையோடு காத்திருந்த ஒரு மனிதனை இயேசு சந்தித்து என்ன சொன்னார் என்று கவனித்தீர்களா? “சொஸ்தமாக வேண்டுமென்று விரும்புகிறாயா?“ என்று அந்த வியாதிப்பட்டிருந்தவனுடைய விருப்பத்தைக் கேட்கிறார். நெடுநாளாய்க் காத்திருந்த அவனுடைய விருப்பத்தை கேட்ட இயேசு, அந்த விருப்பத்தை நிறைவேற்றும்படியாக அவனை சுகமாக்குகிறார். அவன் அதை அநேகருக்கு அறிவிக்கிறான் என்று வேதத்தில் பார்க்கிறோம்.
இதைப் படித்துக் கொண்டிருக்கிற கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே! அந்த முதியவரைப் போல விசாரிப்பற்று நெடுங்காலமாய் வியாதியோடு காத்திருக்கும் மக்கள் நம்மைச் சுற்றியுள்ள மருத்துவமனைகளில், தெருக்களில், சாலையோரங்களில் பரிதாபமாக அமர்ந்திருப்பதை நாம் பார்த்திருப்போம், இப்படிப்பட்டவர்களுக்காக இந்த கிறிஸ்துமஸ் நாட்களில் நாம் என்ன செய்யப் போகிறோம்? இயேசுகிறிஸ்துவைப் போல வியாதியஸ்தர்களை விசாரித்து, அவர்களின் விருப்பங்களைக் கேட்டு அதை நிறைவேற்றும் விதமாக ஒரு அர்த்தமுள்ள கிறிஸ்துமஸை கொண்டாடப் போகிறோமா? அல்லது வெறும் இனிப்புகளைச் சாப்பிட்டு நாம் மட்டும் மகிழ்ந்து வெறும் கொண்டாட்டமாக கழிக்கப் போகிறோமா? சற்று சிந்தித்துப் பார்த்து அர்த்தமுள்ள ஒரு கிறிஸ்தவராக வாழ்ந்து, அர்த்தமுள்ள கிறிஸ்துமஸை கொண்டாடி தேவாதி தேவனை மகிழச் செய்வோமாக. அல்லேலூயா!
- Dr. விசாலி
ஜெபக்குறிப்பு:
800 க்கும் மேற்பட்ட நமது ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு கிறிஸ்துமஸ் கால தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250