By Village Missionary Movement
Friday, 19-Feb-2021இன்றைய தியானம்(Tamil) 19-02-2021
ஏன் துன்பப்படுத்துகிறாய்?
“...சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்...” - அப். 9:4
ஒரு குறிப்பிட்ட ஊரில், கடவுளே இல்லை என்று கூறும் நாத்திகர் ஒருவர் இருந்தார். அவர் கிறிஸ்தவர்களை தவறாகவும், அவர்களின் செயல்பாடுகளை தரக்குறைவாகவும் அவதூறாகவும் கூறி வந்தார். இந்நிலையில் அவர் திடீரென்று ஒரு நாள் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு கை, கால் செயல்பட முடியாமல் போனது. தன் நிலை எண்ணி வேதனைப்பட்டார். தான் முன்பு போல் எழுந்து செயல்பட முடியவில்லையே என தவித்தார். மருத்துவத்திற்காக பணமெல்லாம் செலவானதே ஒழிய சுகம் கிடைக்கவில்லை. இனி உங்கள் முயற்சி தான் வேண்டும் என மருத்துவர் கூறி அனுப்பினார். அப்போது ஒரு தேவ ஊழியர் அவரிடம் சென்று கிறிஸ்துவின் அன்பை கூறி ஜெபித்து வந்தார். இயலாமையினால் அதை ஏற்றுக் கொண்டார். தேவனை விசுவாசித்தார். கிறிஸ்தவர்களுக்கு விரோதமாக செய்தவைகள் எல்லாம் கிறிஸ்துவுக்கு விரோதமாக செய்தவைகள் என உணர்ந்து மனஸ்தாபப்பட்டு தேவ அன்பிற்கு தன்னை அர்ப்பணித்தார். அவர் பெலவீனங்கள் படிப்படியாக மாறின. பூரண சுகம் பெற்றதும் அநேகருக்கு இந்த சாட்சியைக் கூறி தேவனை மகிமைப்படுத்தினார்.
வேதத்திலும் சவுல் என்னும் வாலிபன் வீடுகள்தோறும் நுழைந்து கிறிஸ்தவர்களை இழுத்துக் கொண்டு போய் காவலில் போடுவித்தான். இழுத்து கொண்டு போய் என சொல்லும்போது அவர்களைக் கட்டாயப்படுத்தி, துன்பப்படுத்தினான். இது ஒரு பகுதியில் மாத்திரமல்லாது, தன் தேசமுழுவதும் இவ்வாறு கிறிஸ்தவர்களை சிறையிலடைக்க அதிகாரிகளிடம் அனுமதி பெற்றுக் கொண்டு தமஸ்கு செல்லும்போது தேவன் சவுலை சந்தித்து “சவுலே, சவுலே நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய் என்றார்.” சவுல் ஆண்டவரே நீர் யார் எனக் கேட்டான். அதற்கு தேவன் நீ துன்பப்படுத்துகிற இயேசு நானே என்றார். உடனே அவன் நடுங்கி திகைத்து தன்னை அர்ப்பணிக்கிறான். அனனியா மூலம் தான் செய்ய வேண்டிய காரியங்களை அறிந்து உடனே சபைகளில் சென்று கிறிஸ்துவின் அன்பை, தன்னை கிறிஸ்து சந்தித்த சாட்சியை அறிவித்தான்.
ஆம், அன்பர்களே! தேவனால் படைக்கப்பட்ட எவரையும் நாம் கஷ்டப்படுத்தினால் அது தேவனையே துன்பப்படுத்துவதற்கு சமம். ஆகவே யாரையும் அற்பமாக எண்ணி, யாரையும் வார்த்தையினால் செயலினால் காயப்படுத்தாதீர்கள். உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களை, உங்களுக்குக் கீழ் பணி செய்யும் நண்பர்களை, உங்கள் உற்றார், உறவினர்களை ஏதோ ஒரு விதத்தில் துன்பப்படுத்துகிறீர்களா? நீங்கள் அவர்களை அல்ல அவர்களைப் படைத்த தேவனையே துன்பப்படுத்துகிறீர்கள் என்பதை மறவாதீர்கள். ஆயினும் அன்புள்ள தேவன் தன்னை துன்பப்படுத்திய சவுலை, நாத்திகரை நேசித்து அவர்களை தேடி வந்தது போல உங்களருகிலும் நிற்கிறார். உங்கள் தவறுகளை அவரிடம் அறிக்கை செய்து, தேவனோடு ஒப்புரவாகி தேவ பெலனோடு அவர்களை நேசித்து வாழுங்கள்.
- C. பால் ஜெபஸ்டின்ராஜ்
ஜெபக்குறிப்பு:
மோட்சப் பயணம் தின தியான நூலின் ஆயத்தவேலையில் ஈடுபடும் ஊழியர்கள் தேவ ஞானத்தினால் நிரப்பப்பட ஜெபியுங்கள்.
இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app:
தமிழில் பெற - +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.vmmorg.template.msmapp
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250