By Village Missionary Movement
Friday, 25-Nov-2022இன்றைய தியானம்(Tamil) 26-11-2022
சாக்கு போக்கு
“அவர்களெல்லாரும் போக்குச்சொல்லத் தொடங்கினார்கள். ஒருவன்: ஒரு வயலைக் கொண்டேன், நான் அகத்தியமாய்ப் போய், அதைப் பார்க்க வேண்டும், என்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்” – லூக்கா 14:18
இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் அலுவலகத்தில், அவருக்கு உதவியாளராக பணிபுரிந்த ஒருவர் சாக்குப்போக்கு சொல்வதில் மிகவும் திறமையானவர். பிரதமர் அலுவலகத்தில் சர்ச்சில் குறித்தநேரத்தில் காணப்பட்டாலும், அவரது உதவியாளர் அநேக நேரங்களில் தாமதமாகவே வருவார். தாமதமாக வந்ததற்கு சரியான காரணம் ஒன்றையும் சேர்த்தே கொண்டு வருவார். ஒரு முறை வின்ஸ்டன் சர்ச்சில் தன் உதவியாளரை அழைத்தார். ஆனால் அங்கு அவர் இல்லை. வழக்கம் போல் தாமதமாக வந்தார். ஏன் தாமதம் என்று கேட்டார். “ஐயா, என்னை மன்னிக்கவேண்டும். என் கைக்கடிகாரம் சற்று தாமதமாக ஒடுகிறதை இப்பொழுதுதான் கவனித்தேன்” என்று சொன்னாராம். சர்ச்சில் உடனடியாக, “ஒன்று கைக்கடிகாரத்தை நீ மாற்று அல்லது நான் உன்னை மாற்ற வேண்டியதாய் இருக்கும். முடிவை நீயே பார்த்துகொள்” என்று சொன்னார். அதன்பின்பு அந்த உதவியாளர் சாக்குப்போக்கு சொல்வதை நிறுத்திவிட்டு, குறித்த நேரத்திற்கு வர ஆரம்பித்தார்.
பரிசுத்த வேதாகமத்திலும் சாக்குப் போக்கு சொன்ன நபர்களை ஆங்காங்கு அனேக இடங்களில் காணலாம். ஆதாம், ஏவாள், சவுல், எப்பிராயீம் கோத்திரத்தார் இப்படி ஒரு பெரிய பட்டியல் பைபிளில் காணப்படுகிறது. இப்படி சாக்குப்போக்கு சொல்கிறவர்ககள் பொய் பேசுவதற்கு சற்றும் தயங்கமாட்டார்கள். அவர்களால் பொய் பேச முடிகிறதினால் தான், தாராளமாக சாக்குப்போக்கும் சொல்ல முடிகிறது. எங்கே பொய்யும், சாக்குப் போக்கும் காணப்படுகிறதோ, அங்கெல்லாம் பிசாசின் கிரியையும் கூடவே இருக்கிறது.
சாக்குப் போக்கு எனும் சுபாவத்தின் மற்றொரு முகம் சோம்பேறித்தனமாகும். சோம்பேறிகள் தான் எதற்கெடுத்தாலும் சாக்குப்போக்கு சொல்வார்கள். ஒரு வேலையை செய்ய தாமதிப்பது அல்லது மறுப்பது, இவை இரண்டுக்கும் பின்பாக இருப்பது சோம்பேறித்தனமாகும். சாக்குப் போக்கு என்பதை அவ்வளவு எளிதாக எடுத்து விடமுடியாது. இதுவும் ஒரு பாவச்செயலாகும். இன்றைய வேதபகுதியில் சாக்கு போக்கு சொன்ன மூன்று விதமான நபர்களை பற்றி வாசிக்கின்றோம். ஆண்டவர் இவர்களிடம் நீங்கள் தான் இந்த வேலையை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தவில்லை. மாறாக அவர்களை விட்டு விட்டு, மற்றவர்களிடம் தன்னுடைய வேலைகளை ஒப்படைக்கிறார். ஆண்டவருடைய ஊழியத்தை நான் மறுக்கும் பட்சத்தில் அந்த இடத்தில் சற்றும் சம்பந்தமில்லாத வேறு ஒரு நபரைக் கொண்டு வந்து, அவர்களை கர்த்தர் பயன்படுத்துகிறார். மோசே, எரேமியா போன்ற ஒன்றிரண்டு நபர்களைத் தவிர வேறு யாரிடமும் நீ தான் இந்த வேலையை செய்ய வேண்டும் என்று வற்புறுத்தியதாக நாம் பார்க்க முடியவில்லை. இந்த செய்தியின் மத்தியில் ஆண்டவர் உங்களிடத்தில் ஒரு காரியத்தை செய்யும் படி எதிர்பார்ப்பாரென்றால், உடனடியாக கீழ்ப்படிந்து செய்வதே நமக்கு ஆசீர்வாதமாக இருக்கும். ஆண்டவர் உங்களை வழிநடத்துவாராக.
- P.ஜேக்கப் சங்கர்
ஜெபக்குறிப்பு
பெங்களூர், விழுப்புரம், உசிலம்பட்டி ஆகிய பணித்தளங்களில் இன்று நடைபெற உள்ள எழுப்புதல் வாலிபர் மாலையில் கலந்து கொள்ளும் வாலிபர்களை தேவன் தம் வல்லமையினாலும் வரங்களினாலும் நிரப்பி அபிஷேகிக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250