By Village Missionary Movement
Sunday, 20-Nov-2022இன்றைய தியானம்(Tamil) 21-11-2022 (Youth Special)
வீழ்ந்தாலும் எழுவேன்
“...தேவரீர் என் பாவத்தின் தோஷத்தை மன்னித்தீர்.” – சங்கீதம் 32:5
பாவச் சேற்றிலே வீழ்ந்து கிடந்தாலும் பரிசுத்த தேவனின் கரத்தில் செயல்படும் கருவியாய் வாழ முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்தவள்தான் ராகாப். யார் இந்த ராகாப்? எரிகோ மதில் மீது மனம் போன போக்கிலே சுகபோகமாய் வாழ்ந்து வந்த வேசி என்று வேதம் நமக்கு அறிமுகப்படுத்துகிறது. வாலிப நாட்களிலே கண் கண்டபடி வாழ்ந்து எல்லாரும் பார்த்து அருவருக்கக் கூடிய பாவத்தைத்தான் ராகாப் செய்தாள்.
இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்திக் கொண்டு வந்த யோசுவா எரிகோவை இரகசியமாய் வேவு பார்க்கும்படி இரண்டு பேரை அனுப்புகிறார். அவர்கள் இந்த ராகாப் வீட்டிற்கு போய் தங்கினார்கள். இந்த செய்தி எரிகோவின் ராஜாவிற்கு தெரிய ஆள் அனுப்பி விசாரிக்கிறார். ராகாப் காட்டிக் கொடுக்காமல் அவர்களை மறைத்து வைத்து காப்பாற்றுகிறாள். உங்கள் தேவனாகிய கர்த்தரே உயர வானத்திலும் கீழே பூமியிலும் தேவனானவர் என்று தேவன் மீது தணியாத தாகம் கொண்ட ராகாபாய் மாறிவிட்டாள். கேள்விப்பட்ட அற்புதங்களை மனதில் வைத்து உண்மையான தேவனைக் கண்டு கொண்டாள்.
எரிகோ கோட்டை அழிந்து போனாலும் எங்கள் குடும்பத்தை தேவன் நிச்சயம் காப்பார் என்ற விசுவாசம் மட்டுமல்ல பாவ வாழ்க்கையை வெறுத்து பரிசுத்த வாழ்க்கை வாழ உதவி செய்வார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை அவள் உள்ளத்தில் இருந்தது. எரிகோ கோட்டை இடிந்து தரைமட்டமானபோது அந்த கோட்டை மீதுள்ள ராகாபின் வீடு மட்டும் இடிந்து விழாமல் ஜோராய் நின்றது. தன்னை நம்பி வந்த ஒருவரையும் தள்ளாத தேவன் ராகாபின் வாழ்க்கையிலே புதுமையான காரியங்களைச் செய்தார். எபிரெயர் 11:31ல் உள்ள விசுவாச வீரர்களின் பட்டியலில் ராகாப் இடம் பிடித்தாள். அதுமட்டுமல்ல மத்தேயு 1:5 இல் இயேசுகிறிஸ்து பிறக்கிற வம்ச வரலாற்றிலும் இடம்பிடித்து விட்டாள். இது எப்படி சாத்தியமாகும். ராகாபின் ஆரம்பம் பாவச் சேற்றிலே இருந்தது உண்மைதான். ஆனால் பரிசுத்த தேவனைக் கண்டு கொண்டபின் அவள் வாழ்க்கை முற்றிலும் மாறி இயேசுவை சுமந்து வரும் வரலாறு படைக்கின்ற ராகாபாய் இன்னும் பேசிக் கொண்டிருக்கிறாள்.
அருமையான கண்மணிப் பிள்ளைகளே! உங்கள் வாலிப நாட்களிலும் பாவச் சேற்றில் வீழ்ந்து எழும்ப முடியாமல் போராடிக்கொண்டிருக்கிறீர்களா? “இயேசுவை நோக்கிப்பார், அவர் உன்னை இரட்சிப்பார்” பரம குயவனிடம் உன் வாழ்க்கையைக் கொடுப்பாயானால் பலருக்கும் சாட்சியாய் உன்னை மாற்றி, அழகு பார்க்கும் தேவனாய் உனக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.
- Mrs. ஜீவா விஜய்
ஜெபக்குறிப்பு:
மே 1 அன்று நடைபெற உள்ள வாலிபர் முகாமில் பங்குபெறும் அனைத்து வாலிபர்களையும் தேவன் வல்லமையாய் எடுத்து பயன்படுத்த ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250