By Village Missionary Movement
Thursday, 17-Nov-2022இன்றைய தியானம்(Tamil) 18-11-2022
மனிதன் மாறினால் உலகம் மாறும்
“…உன் பேர் இனி யாக்கோபு என்னப்படாமல் இஸ்ரவேல் என்னப்படும்; தேவனோடும் மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே என்றார்” - ஆதியாகமம் 32:28
போதகர் ஒருவர் தனது ஆலய ஆராதனைக்கான பிரசங்கத்தை ஆயத்தம் செய்து கொண்டிருந்தார். அவருடைய 6 வயது மகன் அந்த அறையில் வந்து விளையாடிக்கொண்டும், சத்தம் போட்டுக்கொண்டும் இருந்தான். இது போதகருக்கு மிகவும் கஷ்டத்தைக் கொடுத்தது. எனவே என்ன செய்யலாமென்று யோசித்து அவர் மேஜையில் உலகப்படம் ஒன்று இருந்தது. அதைப் பல்வேறு துண்டுகளாகக் கிழித்து அவனிடம் கொடுத்து இதை ஒன்று சேர்த்துக்கொண்டு வா உனக்குப் பரிசு தருகிறேன் என்று அனுப்பி விட்டார். அவன் போய் 2 நிமிடத்தில் உலகப் படத்தை சரியாகப் பொருத்திக் கொண்டு வந்துவிட்டான். எப்படி உன்னால் இவ்வளவு சீக்கிரம் செய்ய முடிந்தது என்று கேட்டார். உலகப் படத்தின் பகுதிகளை ஒன்றிணைக்கும் போது அதன் பின்புறத்தில் மனிதனின் உருவம் கொண்ட படம் இருந்தது. ஆகவே இதை ஒரு பேப்பர் மீது வைத்து மனித முகத்தை இணைத்து பேப்பரைத் திருப்பினால் உலகப் படம் வந்துவிட்டது என்றான். மனிதனை ஒழுங்காக்கி விட்டால் உலகமும் ஒழுங்காகி விடும் என்றான். அதை அவர் அந்த நாளின் செய்தியாக மாற்றினார்.
இதைப் போலவே யாக்கோபு தன்னுடைய வாழ்விலே எல்லாம் சரியாக நடப்பதைப் போல் நினைத்துக் கொண்டிருந்தான். தன்னுடைய சகோதரனை ஏமாற்றியிருந்தான், தகப்பனாரை ஏமற்றியிருந்தான், இதன் விளைவு யாக்கோபு மாமனாரால் ஏமாற்றப்பட்டான். பின் தன் சொந்த தேசத்திற்கு திரும்புகிற போது யாப்போக்கு நதிகரையில் தேவனைச் சந்திக்கிறான். மனைவிகள், பிள்ளைகள், ஆடுமாடுகள் ஆஸ்திகள் இருந்தாலும் இன்னும் மாற்றமடையாமல் இருந்த தன்னுடைய சகோதரன் ஏசாவைக் குறித்து பயம் நிறைந்தவனாய் காணப்பட்டான். பிந்தித் தனித்திருந்து தேவனோடு போராடுகிறான். தன்னுடைய பழைய சுபாவங்களை, எண்ணங்களை விட்டுவிடும்படி தேவன் சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன். மாற்றம் பெற்ற யாக்கோபு இஸ்ரவேலாக மாறுகிறான். தேவனால் ஆசீர்வதிக்கப்படுகிறான். தன் சகோதரனும் பகையை மறந்தே போகிறான்.
இதை வாசிக்கின்ற அன்பு சகோதரனே! நீங்கள் தேவனுடைய பார்வையில் சரியாயிருக்கிறீர்களா? குறைவுள்ளவர்களாயிருந்தாலும் குறைவுகளைச் சுட்டிக் காட்டி குற்றப்படுத்துகிறவர் அல்ல நம் தேவன். குறைவுகளைச் சுட்டி காட்டி குணப்படுத்துகிற தேவனாயிருக்கிறார். உங்கள் மாம்ச சுபாவங்களை மாற்றி உங்களை ஆசீர்வதிக்க தேவன் ஆயத்தமாயிருக்கிறார். மாம்ச சுபாவங்களை மாற்றி ஆசீர்வதிக்கப்பட நீங்கள் ஆயத்தமா? அல்லது நீங்கள் இன்னும் போராடிக் கொண்டேயிருக்கப் போகிறீர்களா? தீர்மானம் உங்கள் கையில்! அணைக்கும் கரங்கள் ஆவலாய் நீட்டப்பட்டிருக்கிறது.
- L. அழகர்சாமி
ஜெபக்குறிப்பு:
மருத்துவமனை ஊழியத்தின் மூலம் சந்திக்கப்படும் நோயாளிகள் ஆத்துமாவிலும், சரீரத்திலும் சுகம் பெற ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250