By Village Missionary Movement
Thursday, 18-Feb-2021இன்றைய தியானம்(Tamil) 18-02-2021
ஒருமனம்
“…அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்தில் வந்திருந்தார்கள்.” – அப். 2:1
ஒரு கிராம சபையில் வாலிபர்கள் எவருமே ஆலயத்திற்கு வராத அவலநிலை இருந்தது. இச்சூழ்நிலையில் ஒரு வாலிபனை ஆண்டவர் இரட்சித்தார். அவனை மற்ற வாலிபர்கள் கொரோனா கிருமியைப் போலத்தான் பார்த்தனர், நெருங்கவேயில்லை. ஆனாலும் சில மாதங்களிலே அற்புதவிதமாக மற்றொரு வாலிபனும் இரட்சிக்கப்பட்டான். பின் இருவரும் சேர்ந்து தினமும் ஒரு குறிப்பிட்ட நேரம் ஜெபிக்க ஆரம்பித்தார்கள். நாட்கள் செல்லச் செல்ல அவர்களையும் அறியாமல் மற்ற வாலிபர்களைக் குறித்த பாரம் அழுத்தவே, இருவரும் ஒருமனப்பட்டு கண்ணீரோடு ஜெபித்தார்கள். ஆவியானவர் கிரியை செய்ய ஆரம்பித்தார். அடுத்தடுத்து அநேக வாலிபர்கள் இரட்சிக்கப்பட்டனர். சபையில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. Sunday School எடுக்க, சுவிசேஷ ஊழியத்திற்கு செல்ல வாலிபர்கள் முன்வந்தனர். பல வருடங்களாய் காணப்படாத மாற்றம் ஏற்பட காரணம், அந்த இரு வாலிபர்களின் ஒருமனப்பட்ட ஜெபமே என்பதில் சந்தேகமேயில்லை.
அப்போஸ்தலர் நடபடிகளிலே கிட்டத்தட்ட 10 முறை “ஒருமனப்பட்டு” என்ற வார்த்தையை ஆவியானவர் எழுதி வைத்துள்ளார். அதில் 6 முறை நன்மையான காரியத்திற்காகவும், 4 முறை தீமையான காரியத்திற்கும் ஒருமனம் உண்டானதை வாசிக்கலாம். எப்பொழுதெல்லாம் தேவநாம மகிமைக்கென்று அப்போஸ்தலர்கள் ஒருமனப்பட்டார்களோ அப்பொழுதெல்லாம் ஜெபம் அதிகரித்தது, இடம் அசைந்தது, வல்லமை வரங்கள் வெளிப்பட்டது, ஊழியத்திற்கு ஆட்களை அனுப்பினார்கள். இப்படி ஆவியானவர் பலமாய் கிரியை செய்தார். பெரிய எழுப்புதல் ஏற்பட்டது. அதேவேளையில் தீமையான காரியங்களுக்காக ஜனங்கள் ஒருமனப்பட்ட போதெல்லாம் ஆவியானவர் துக்கமடைந்தார். அனனியாவும் சப்பீராளும் ஒருமனப்பட்டு நில விஷயத்தில் பரிசுத்த ஆவியானவரிடம் பொய்சொல்லி துக்கமடையச் செய்தனர். யூதர்கள் ஒருமனப்பட்டு ஸ்தேவானை கல்லெறிந்த போது, ஆவியின் நிறைவால் பேசின வார்த்தைகளைக் கேட்கக்கூடாதபடி யூதர்களே கடினப்பட்டிருப்பதைக் கண்டு துக்கமடைந்தார்.
இதை வாசிக்கின்ற உங்களோடு பரிசுத்த ஆவியானவர் இடைபடுகிறார். நீங்கள் யாரோடு, எதற்காக ஒருமனப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் ஒருமனப்படும் காரியம் ஆவியானவரை பலமாய் கிரியை செய்ய வழிவகுக்கிறதா? அல்லது அவரை துக்கப்படுத்துகிறதா? அனனியா தம்பதியினரைப் போல கெளரவத்திற்காக, பெயர் புகழுக்காக சுயநலத்திற்காக ஒருமுகப்பட்டீர்கள் என்றால் உங்களுடன் இருக்கும் இருவரின் நிலையும் பரிதாபமே! மாறாக ஜெபிக்க, தேவனுக்காய் உழைக்க, கொடுக்க, ஊழியர்களை அனுப்ப ஒருமனப்பட்டீர்களென்றால், இந்திய தேசத்தின் எழுப்புதலைக் குறித்து பரலோகத்தில் எழுதப்படும் என்றால் அதில் உங்கள் பெயரும் பொன் எழுத்துக்களில் எழுதப்பட்டிருக்கும் என்பது உண்மை! ஒன்று கூடுங்கள்! ஒருமனப்படுங்கள்! உலகிற்கு ஒளிவீசுங்கள்!!
- Bro. காந்திராஜன்
ஜெபக்குறிப்பு:
மிஷனெரிகளை தாங்கும் குடும்பங்களில் இருந்து மிஷனெரிகள் எழும்ப ஜெபியுங்கள்.
இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app:
தமிழில் பெற - +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.vmmorg.template.msmapp
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250