By Village Missionary Movement
Wednesday, 16-Nov-2022இன்றைய தியானம்(Tamil) 17-11-2022
பஸ்ஸில் படித்த பாடம்
“தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன்.” - யாக்கோபு 5:20
ஒருமுறை பஸ்ஸில் பிரயாணம் செய்து கொண்டிருந்தேன். இடமில்லாமல் படிக்கட்டின் அருகில் நின்று கொண்டு என் பேக்கை படிக்கட்டில் வைத்திருந்தேன். அதைக் கவனித்த ஒரு பெரியவர் என்னைக் கூப்பிட்டு,
உங்கள் பையை பஸ்ஸின் உட்பக்கத்தில் வையுங்கள். அது வெளியே விழப்போகிறது என்றார். நான் இதற்கு முன் அவரைப் பார்த்தது கூட இல்லை. ஆனாலும் மனிதாபிமான அடிப்படையில் அவரது செயல் இருந்தது. யாரென்று தெரியாதவனாய் நான் இருந்தாலும் அவரது கரிசனை வெளிப்பட்டது. உடனே என் உள்ளத்தில் ஏற்பட்ட உணர்வு, என்னைச் சுற்றி அழிந்து கொண்டிருப்போரை மீட்க நான் இதைப் போல ஏதாவது செய்கிறேனா? என சிந்தித்தேன்.
இன்றைக்கும் நம்முடைய கண்களுக்கு முன்பாக எத்தனையோ நபர்கள் அழிந்து கொண்டிருக்கிறார்கள். குடி, விபச்சாரம், வேசித்தனம், போதை இப்படி பல பாவங்களில் சிக்கி அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். அவர்களின் மீது கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட நம்முடைய பார்வை எப்படி இருக்கிறது? மரணத்திற்கு பிறகுள்ள வாழ்வு, நியாயத்தீர்ப்பு, நித்திய ஜீவன், நரகம் இவற்றையெல்லாம் அறிந்த நாம் அவர்களுக்காக என்ன செய்திருக்கிறோம்? அவர்கள் காப்பாற்றப்பட வேண்டுமே என்ற கரிசனை உண்டா?
இயேசுகிறிஸ்து உலகத்திலிருந்தபோது ஒரு உவமையை சொன்னார். ஒரு மனிதன் எருசலேமிலிருந்து எரிகோவிற்கு போகும் வழியில் கள்ளர் கையில் அகப்பட்டான். அவர்கள் அவன் வஸ்திரங்களை உரிந்து அவனைக் காயப்படுத்தி குற்றுயிராக விட்டுப் போனார்கள். அந்த வழியாய் ஆசாரியன் வருகிறார். காயப்பட்டவனை பார்த்துவிட்டு பக்கமாய் விலகி செல்கிறார். லேவியன் வருகிறார். அவரும் அப்படியே செல்கிறார். ஆனால் அவ்வழியே வந்த சமாரியன் காயப்பட்டவனைக் கண்டு மனதுருகி, காயத்தில் எண்ணெய் போட்டு கட்டி, தன் வாகனத்தில் ஏற்றி சத்திரத்தில் கொண்டுபோய் விடுகிறார். ஆம், இந்த உவமை நமக்கு சொல்லும் மற்றுமொரு சத்தியமென்ன? நித்திய மரணத்தை நோக்கி சென்று கொண்டிருப்போர் மேல் மனதுருகி காயம் கட்டி தேவனிடம் வழிநடத்துவதே ஆத்துமா ஆதாயம். அதை செய்வது நமது கடமை!
யாரென்றே தெரியாத ஒரு முதியவரை என்னுடைய பொருளின் மீது அக்கறை கொள்ளச் செய்தது மனிதாபிமானம் என்று சொல்வோமானால், கிறிஸ்தவர்கள் என சொல்லிக்கொள்ளும் நம்முடைய உள்ளத்தில் ஆத்துமபாரம் இல்லாமல் போனது என்ன? தேவனை நேசிக்கிற ஒருவனால் ஆத்தும ஆதாயம் செய்யாமல் இருக்க முடியாது. சுவிசேஷம் அறிவிப்பது நமது கடமை! அறிவிக்காவிட்டால் நமக்கு ஐயோ! எனவே ஆத்துமாக்களை ஆதாயம் செய்வோம். நரக வாழ்க்கையிலிருந்து ஜனங்களை திருப்பி இயேசுவினண்டை வழி நடத்துவோம்.
- Bro. வில்லியம்ஸ்
ஜெபக்குறிப்பு:
100 கைப்பிரதிகளை தினமும் நம் மிஷனெரிகள் கொடுத்து வருகின்றனர். இதை பெற்றுக் கொள்வோர் இயேசுவை அறிய ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250