By Village Missionary Movement
Tuesday, 15-Nov-2022இன்றைய தியானம்(Tamil) 16-11-2022
ஆசீர்வாதமான வாழ்விற்கு
“கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப் பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ?...” -1 சாமுவேல் 15:22
கீழ்ப்படிதல் இது கிறிஸ்தவ வாழ்வில் மிக முக்கியமான காரியம். தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்த மனிதர்கள் தங்கள் சந்ததிக்கே ஆசீர்வாதமாக வாழ்ந்ததையும், கீழ்ப்படியாதவர்கள் தங்களுக்கு மாத்திரமல்ல தங்கள் சந்ததிக்கே சாபமாக மாறியதையும் வேதத்தில் காணலாம். உதாரணமாக ஆபிரகாமின் கீழ்ப்படிதலால், பூமியிலுள்ள வம்சங்களுக்குள் அவருடைய சந்ததி இன்று வரை ஆசீர்வாதமாயிருப்பதைக் காண்கிறோம். ஆகானின் கீழ்ப்படியாமையால் அவனுக்குள்ளான யாவும் தீக்கிரையாக்கப்பட்டதையும் வாசிக்கிறோம். இன்று சவுல் ராஜாவின் கீழ்ப்படியாமையால் நிகழ்ந்த காரியங்களை காண்போம்.
கர்த்தர், சாமுவேல் தீர்க்கதரிசியின் மூலமாக சவுல் ராஜாவிடம் அமலேக்கியருக்கு உண்டான யாவற்றையும் அழித்து விடும்படி கூறுகிறார். காரணம், இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வந்தபோது அமலேக்கு அவர்களுக்கு வழிமறித்த செய்கையை மனதில் வைத்திருக்கிறேன். ஆகவே அவர்களை அழித்து விடு என்று கூறினார். ஆனால் சவுலோ ஆண்டவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாமல் அமலேக்கின் ராஜாவாகிய ஆகாகை உயிரோடு வைக்கிறார், கொழுமையான ஆடுமாடுகளையும் தப்பவிடுகிறார். அற்பமான காரியத்திற்காக தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் போன சவுலை ராஜாவாக்கினது ஆண்டவருக்கு மனஸ்தாபமாகக் காணப்பட்டது. ஆம், சவுலின் சிறிய கீழ்ப்படியாமை ராஜ மேன்மையை இழக்கச் செய்தது. இன்றைக்கும் ஆண்டவர் நம்மையும் குடும்பத்திலே, வேலை பார்க்கும் இடத்திலே, சமுதாயத்திலே, திருச்சபையிலே சவுலைப் போல உயர்த்தி வைத்திருக்கலாம். ஆனால் அநேக நேரத்திலே இந்த உயர்வு தேவன் தந்தது என்பதை உணராமல் மனிதர்களை பிரியப்படுத்தும்படி தேவனுடைய வார்த்தையை பின்னுக்குத் தள்ளி மனம் விரும்பினதை செய்கிறவர்களாக இருக்கிறோமா? சிந்தித்துப் பார்ப்போம். கீழ்ப்படியாமையினால் மேன்மையை இழப்பதற்கு வெகுகாலம் ஆகாது. “நான் மனிதனையா, தேவனையா யாரை பிரியப்படுத்தப் பார்க்கிறேன்” என்ற கேள்வியை அவ்வப்போது கேட்டு தேவனுடைய வார்த்தைக்கு முதலிடம் கொடுக்க தீர்மானிப்போம்.
இதே நேரத்திலே இயேசுகிறிஸ்துவின் கீழ்ப்படிதலை நாம் சிந்தித்தே ஆக வேண்டும். “அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், ... மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தனார்”. (பிலி. 2:6-8). ஆம், திரித்துவத்தில் ஒருவரான இயேசுகிறிஸ்துவிற்கே கீழ்ப்படிதல் அத்தனை அவசியமென்றால் நமக்கு எத்தனை அதிகமாய்த் தேவை! ஆம், பிரியமானவர்களே! கீழ்ப்படிதல் நமக்கு மாத்திரமல்ல, நம் சந்ததிக்கே ஆசீர்வாதம் என்பதை மறந்து போக வேண்டாம். யோனாவின் கீழ்ப்படியாமை கடல் கொந்தளிப்பிற்கு காரணமாயிற்று. நான்தான் தவறு செய்தேன் என யோனா ஒத்துக்கொண்டதைப் போல நம்மை தேவசமூகத்தில் தாழ்த்தும்போது உங்கள் வாழ்வு ஆசீர்வாதமாயிருக்கும்
- Mrs. நிரோஷா ஆல்வின்
ஜெபக்குறிப்பு:
7000 வீட்டு ஜெபக் குழுக்களை தேவன் எழுப்பித் தர ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250