Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 11-11-2022
Share:

By Village Missionary Movement

Thursday, 10-Nov-2022

இன்றைய தியானம்(Tamil) 11-11-2022

 

பிரயாசத்திற்குத் தக்க பலன்

 

‘’ஆகையால், எனக்குப் பிரியமான சகோதரரே, கர்த்தருக்குள் நீங்கள் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்று அறிந்து,… கர்த்தருடைய கிரியையிலே எப்பொழுதும் பெருகுகிறவர்களாயும் இருப்பீர்களாக.’’ – 1 கொரிந்தியர் 15:58

 

ஒரு நாள் ஞாயிறு ஆராதனைக்கு முன் அந்த சபையின் மூப்பர் வயது முதிர்ந்த போதகரை நோக்கி ‘’போதகரே உமது போதகத்திலும் ஊழியத்திலும் ஏதோ குறை இருக்கவேண்டும். இந்த வருடம் முழுவதும் இச்சபைக்கு ஒரே ஒருவர் மட்டுமே சேர்ந்துள்ளார். அதுவும் ஒரு சிறுவனே’’ என அவதூறாகப் பேசினார்.

 

அந்தப் போதகர் அன்றைய நாளில் மனமுடைந்தவராய் தனது சபை விசுவாசிகளின் முன் செய்தி கொடுத்தார். ஆராதனை முடிந்ததும் தனது ஊழியத்தை விட்டு விலக யோசித்தார். எல்லோரும் போன பின், புதிதாக வந்த சிறுவன் அவரிடம் வந்து, ‘’நான் கடினமாகக் கல்வி கற்றால் நானும் ஒரு நாளில் ஒரு பிரசங்கியாராகவோ சுவிசேஷகராகவோ வர முடியுமா?” என்று கேட்டான். போதகரின் கண்களில் நீர் ததும்ப அப்பையனைப் பார்த்து, ‘’ராபர்ட், தேவ கரத்தை நான் இப்போதே காண்கிறேன். உன்னை தேவன் ஆசீர்வதிப்பாராக. ஆம், நீ ஒரு பிரசங்கியாவாய்’’ என்றார். 

 

அநேக வருடங்களுக்குப் பின்னர் வயது சென்ற சுவிசேஷகர் ஒருவர் ஆப்பிரிக்காவில் இருந்து லண்டனுக்கு வந்தார். மக்கள் அவரைப் பற்றி இவ்வாறு பேசிக்கொண்டனர். ஆப்பிரிக்காவில் மிகக் கொடூரமான சுதேசிகளின் தலைவர்கள் உட்பட எத்தனையோ ஆத்துமாக்களை அவர் சபைக்குள் சேர்த்திருக்கிறார், அவர் பெயர் ராபர்ட் மொபட் என்பதாம்! பல வருடங்களுக்கு முன் ஸ்காட்லாந்தில் ஒரு ஞாயிறு காலை ஆலயத்தில் அப்போதகரிடம் பேசிய சிறுவன் தான் இந்த ராபர்ட் மொபட்.

 

கிறிஸ்துவில் பிரியமானவர்களே, தேவனுக்காகப் பிரயாசப்பட்டு ஊழியம் செய்து சோர்ந்து போய் உள்ளீர்களா? உங்கள் பிரயாசத்தையும் உங்கள் கிரியையும் மறந்து விடாத தேவன் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து! ‘’சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒரு கலசம் தண்ணீர் மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற் போகான்’’ (மத்10:42) என்று கூறியிருக்கிறார். நாம் செய்கின்ற வேலையில் பெரிய பலன் உடனடியாகத் தெரியாமல் இருக்கலாம் அல்லது மற்றவர்கள் பார்வையில் குறைவாக காணப்படலாம். இதைப் பார்த்து சோர்ந்து போய் விடக்கூடாது. ’’விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறவனுக்கு ஆகாரத்தையும் அளிக்கிறவர் உங்களுக்கு விதையை அளித்து, அதை பெருகப்பண்ணி, உங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச் செய்வார்’’என்ற வசனத்தின்படி நம் தேவன்உங்களை குறைவின்றி நடத்துவார். விசுவாசியுங்கள், நல்ல அறுவடையைக் காண்பீர்கள். பலனைப் பெறுவீர்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக! 

- P. ஜேக்கப் சங்கர்

 

ஜெபக்குறிப்பு: 

‘’யோசுவாவே எழும்பு ‘’ என்று வாலிபத் தம்பிகளுக்கென பிரத்தியேகமாக வெளியிடப்படும் இதழ் மூலம் வாலிபர்கள் பயன்பெற ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al