By Village Missionary Movement
Tuesday, 08-Nov-2022இன்றைய தியானம்(Tamil) 09-11-2022
சுயபுத்தி
“உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிரு...‘’ – நீதிமொழிகள் 3:5
முன்னொரு காலத்தில் வயதான குரு ஒருவரிடம் ராஜ வம்சத்தை சேர்ந்த அநேகர் பயிற்சிபெற்று தங்கள் நாட்டை திறம்பட ஆட்சி செய்து வந்தனர். குருவிற்கு ஒரே ஒரு மகன் இருந்தான். தன் ஒரே மகனது எதிர்காலத்தைக் குறித்து கவலையுற்ற குரு, தன்னிடம் பயிற்சி பெற்ற பக்கத்து நாட்டு அரசனிடம் மகனை அனுப்பி வைத்தார். அவனிடம் சிறிய மூட்டை ஒன்றையும் கொடுத்து அரசனிடம் கொடுக்குமாறு கூறினார். போகும் வழியில் தந்தை தன்னிடம் கொடுத்த மூட்டையில் என்ன இருக்கும் என்பதை அறிய விரும்பிய மகன் மூட்டையைத் திறந்து பார்த்து அதிர்ச்சியடைந்தான். அதில் பிரம்பும், மரத்தாலான வாளும், நைந்து போன பழைய துணியும் இருந்தது. இந்தப் பொருட்களை எப்படி இராஜாவுக்கு அளிப்பது என்று நினைத்து தன் திறமையைப் பயன்படுத்தி பொருட்களை செய்தான். அரண்மனை வாயிலை அடைந்தான்.
புதிய பொருட்களை காவலாளியிடம் கொடுத்தனுப்பினான். ராஜாவிடமிருந்து எந்தவொரு பதிலும் இல்லை. பல மணி நேரங்கள் காத்திருந்த பின்பு வேறு வழியில்லாதவனாய் தன் தந்தை கொடுத்தனுப்பிய மூட்டையை காவலாளியிடம் கொடுத்தனுப்பினான். சில நிமிடங்களில் ராஜாவே அரண்மனை வாசலுக்கு வந்து அவனை கட்டியணைத்து அரண்மனைக்குள் அழைத்துச் சென்றான். ராஜா அவனிடம் மூட்டையில் இருந்த பொருட்களை சுட்டிக் காட்டி ‘’இந்த பிரம்புதான் நான் தவறு செய்த போது என்னை நல்வழிப்படுத்தியது. என்னுடைய கரங்கள் இந்த வாளில் தான் பயிற்சிபெற்றன. ஒரு முறை நான் புதை குழியில் சிக்கிய போது இந்த துணியை வீசித் தான் என் குரு என்னைக் காப்பாற்றினார். இவையெல்லாம் எனக்கு விலையுயர்ந்த பொக்கிஷங்கள்’’என்று கூறிவிட்டு, ’’இந்தப் பொருட்களை முதலிலே நீ கொடுத்து அனுப்பியிருந்தால் எப்பொழுதோ அரண்மனைக்குள் நுழைந்திருக்கலாம்’’ என்று கூறினார். நன்மதிப்பைப் பெற வேண்டும் என்பதற்காக தன் சுய திறமையைப் பயன்படுத்தி காலத்தை விரயமாக்கியதைக் குறித்து கவலையுற்றான்.
பரிசுத்த வேதாகமத்தில் லூக்கா 5 : 2-11 ல் பேதுருவைக் குறித்து நாம் தியானிக்கலாம். பேதுரு மீன் பிடிப்பதில் திறமைசாலியான மனிதன். அதற்குரிய எல்லா நுணுக்கங்களையும் அறிந்தவன். இரவு முழுவதும் பிரயாசப்பட்டும் எதுவும் அகப்படாத சூழ்நிலையில் சோர்ந்து போய் வலைகளை அலசிக்கொண்டிருந்தான். அப்பொழுது இயேசுகிறிஸ்து பேதுருவின் படகில் ஏறி அமர்கிறார். ‘’ஆழத்திலே தள்ளிக் கொண்டுபோய் மீன் பிடிக்கும்படி உங்கள் வலைகளைப் போடுங்கள்’’ என்று கூறியபோது தன்னுடைய அறிவுக்கெட்டின காரியங்களை சொல்லாமல் “உம்முடைய வார்த்தையின் படியே வலையைப் போடுகிறேன்’’ என்று அவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து செயல்படும்போது வலை கிழிந்து போகத்தக்கதாக மிகுதியான மீன்களைப் பிடித்தான்.
ஆம், தேவப்பிள்ளைகளே! படிப்பிலோ, வேலைக்காரியங்களிலோ, ஊழியத்திலோ, நம்சொந்தத் திறமைகளையோ அல்லது மனிதர்களையோ நம்பி கிறிஸ்துவை மறந்து அநேக நேரங்களில் தோல்வியை சந்தித்து இருக்கலாம். நம்மிலுள்ள சுயம் என்கிற மாம்சீகமான காரியம் கிறிஸ்துவை மறைத்து நமக்குக் கிடைக்கும் ஆசீர்வாதங்களை இழக்கச் செய்கிறது. நம் வாழ்வின் எல்லா சூழ்நிலைகளிலும் சுய பெலனைச் சார்ந்திராமல் கர்த்தருடைய பெலனைச் சார்ந்து அவருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து காரியங்களைச் செய்ய தீர்மானிப்போம். பரமதகப்பன் நமக்காக ஆயத்தமாக வைத்திருக்கும் ஆசீர்வாதங்களைச் சுதந்தரித்து ஜெயமாய் வாழுவோம். அல்லேலூயா!
- Mrs. ஜெபக்கனி சேகர்
ஜெபக்குறிப்பு
நாலுபேர் கொண்ட செயல்படும் நபர்களை தேவன் எல்லாப் பணித்தளங்களிலும் எழுப்பித் தர ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250