By Village Missionary Movement
Friday, 04-Nov-2022இன்றைய தியானம்(Tamil) 05-11-2022
அமைதியால் வரும் ஆசீர்வாதம்
“நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்;... உங்களை நிந்திக்கிறவர்களுக்காக... ஜெபம்பண்ணுங்கள்” - மத்தேயு 5:44
தரங்கம்பாடியில், ஓர் ஏழை விதவைக்கு நியாயம் கோரும் விஷயத்தில் ஹாசியஸ் சீகன் மேல் கோபம் கொண்டார். அவர்களது மிஷனெரி ஆர்வத்தை தணியச் செய்து, மிஷனெரிப் பணியை கைவிட்டு பின்னடையச் செய்யும் நோக்கத்தோடு பலவித இழிநிலைக்கு ஆளாக்கினார். எந்தக் காரணமுமின்றி மிக அற்பமான காரியங்களைச் சாக்குக் காண்பித்து 1708 நவம்பர் மாதம் துப்பாக்கி ஏந்திய போலீசார் சீகனின் வீட்டிற்குள் நுழைந்து, ஜெபம் பண்ணிக் கொண்டிருந்த அவரைக் கைது செய்து கவர்னர் முன் நிறுத்தினர். தவறான குற்றச்சாட்டுகளால் சீகன் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை அடித்து “நாய்“ என்றும் அழைத்தார். இதோடு திருப்தியடையாமல், வாரினால் அடிக்கப் போவதாக அவர்களை அச்சுறுத்தி வசைமொழியை வாரிக்கொட்டினார். திடமனமும் மிஷனெரி தரிசனமும் உடைய அவர் சூழ்நிலையைக் கண்டு சோர்ந்து போகவில்லை. நான்கு மாத சிறைவாசத்தில், இரண்டு ஜெர்மன் வீரர்கள் ஜன்னல் வழியாக காகிதமும், பேனாவும் சீகனுக்குக் கொடுத்து உதவ, “The God Pleasing state of a Christian”, “The God Pleasing profession of Teaching” என்னும் இரு சிறிய புத்தகங்களை அவர் எழுதினார்.
தாவீது ராஜா தன் சொந்த மகனான அப்சலோமால் விரட்டப்பட்டு மறைவான இடத்துக்கு போகிறார். அப்பொழுது சீமேயி, தாவீது ராஜாவைப் பார்த்து, தொலைந்து போ, தொலைந்து போ என்று தூஷித்து , நீ ஒரு இரத்தப்பிரியன், இப்போதும் இதோ, உன் அக்கிரமத்தில் அகப்பட்டாய் என்று சொல்லிக் கொண்டே கற்களை அவர் மேல் எறிந்தான். தாவீது மெளனமாக நடந்து போனார். அபிசாய் தாவீதை பார்த்து அந்தச் செத்த நாய் ராஜாவாகிய என் ஆண்டவனை துசிப்பானேன். நான் போய் அவன் தலையை வெட்டிப் போடட்டுமே என்றதும், என் கர்ப்பப்பிறப்பான என் குமாரனே என் பிராணனை வாங்கத் தேடும்போது, இவன் எத்தனை அதிகமாய் செய்வான். அவன் தூஷிக்கட்டும், அப்படிச் செய்ய கர்த்தர் அவனுக்குக் கட்டளையிட்டிருக்கிறார். ஒரு வேளை கர்த்தர் என் சிறுமையைப் பார்த்து இந்த நாளில் அவன் நிந்தித்த நிந்தனைக்குப் பதிலாக எனக்கு நன்மையைச் சரிக்கட்டுவார் என்றான்.(2சாமு 16: 5 – 12) தாவீது திரும்பி அரியணையை நோக்கி வரும்போது அந்த சீமேயி தாவீது ராஜாவுக்கு எதிர்கொண்டோடி ராஜாவே என்னை மன்னித்து விடும் என்று கதறினான்.
கர்த்தருக்குப் பிரியமானவர்களே! உங்களுடைய வாழ்க்கையில் பிரச்சனைகள், போராட்டங்கள், சதிகள் இப்படி அநேகம் காணப்படலாம். நீங்கள் எந்த தவறும் செய்யாத போதும் உங்களை அநேகர் தூஷிக்கலாம். அதைக் குறித்து ஒரு நாளும் கலங்க வேண்டாம். சீகனுக்கு விரோதமாய் அதிகாரிகள் எழும்பினார்கள், தூஷண வார்த்தைகளைப் பேசினார்கள். அவர் அமைதியாக இருந்தார். கடைசியில் தேவன் நன்மையாக முடியப் பண்ணினார். ராஜாவாகிய தாவீதுக்கு விரோதமாக சீமேயி எழும்பினான். ஆனால் காலம் வந்த போது நிந்தனைக்குப் பதிலாக நன்மையை சரிகட்டினார். நீங்களும் பிறர் தூற்றும் போது அமைதியாக இருந்தால் நன்மையை பெற்றுக்கொள்வீர்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.
- P. ஸ்டீவ் மேத்யூ
ஜெபக்குறிப்பு:
இம்மாதம் முழுவதும் 40 பணித்தளங்களில் “வாலிபர் மாலை” சிறப்பு நிகழ்ச்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. தேவன் இக்கூடுகைகளை ஆசீர்வதித்துத் தர ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250