By Village Missionary Movement
Tuesday, 01-Nov-2022இன்றைய தியானம்(Tamil) 02-11-2022
விருப்பத்தை நிறைவேற்றுபவர்
“மனுஷர் முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கை பண்ணுவேன்” - மத்தேயு 10:32
வேதத்திலே ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து உலகத்தில் வாழ்ந்தபோது செய்த அற்புதங்கள் பலவற்றைக் குறித்து வாசிக்கிறோம். அவற்றுள் ஒன்று அவர் எரிகோவுக்குப் போகும் வழியில், தம்மை நோக்கிக் கூப்பிட்ட குருடர்களுக்கு பார்வை அளிப்பது. இச்சம்பவத்தை நாம் வாசிக்கும்போது ஒரு சம்பவத்தைக் கவனிக்கத் தவறி விடுவோம். இயேசு அவர்களிடம், “நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டுமென்றிருக்கிறீர்கள்?” எனக் கேட்பது, அவர்கள் நடந்து வரும் பொழுதே அவர்கள் குருடர்கள் என அவர் அறிந்திருப்பார். ஆனாலும், அவர்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்கின்றார். ஆம், அவர் நம் மன விருப்பத்தை நிறைவேற்றுகின்ற தேவன். அவர் நம்முடைய சுயமாய் நம்மை நடத்த எண்ணுபவரல்ல. மாறாக நம்முடைய எண்ணங்களை, ஏக்கங்களை அறிந்து, அதற்கேற்ப நம்மை ஆசீர்வதிக்க விரும்பும் தேவன் அவர்.
மேலும் அவரின் இந்தக் கேள்விக்கு, அந்தக் குருடர்களின் பதில் கவனிக்கத்தக்கது. அவர்கள் நம்பிக்கையற்று விளையாட்டாக, அசட்டுத்தனமாக காரியங்களைக் கேட்காமல், தங்களின் தேவை என்ன என்பதை நிதானித்து அறிந்து, தாங்கள் பார்வையடையும்படி வேண்டிக் கொள்கின்றனர். அவர்கள் தேவனை பரீட்சை பார்க்காமல் எச்சரிக்கையாய் இருந்தனர். ஆனால் நாம் அநேக நேரங்களில் நம்முடைய வாழ்வில் தேவனுக்குப் பிரியமில்லாத மற்றும் நமக்குத் தேவையற்ற, தேவனை பரீட்சை பார்க்கின்ற காரியங்களை நமது ஜெபங்களில் வைக்கின்றோம். அந்தக் குருடர்கள் தேவையானதைக் கேட்டு அற்புதத்தை பெற்றுக்கொண்டனர். அவர்களின் வாழ்வில் இருந்த இருள் விலகி வெளிச்சத்தைக் கண்டனர்.
இன்று நாமும்கூட கண் சொருகிப்போன குருடர்களாய், தேவனை அறியாதவர்களாகவே அநேக நேரங்களில் இருக்கின்றோம். பாவம், வியாதி , அகந்தை, பெருமை போன்ற அநேக இருள் நம்மை மூடிக்கொண்டிருக்கின்றது. ஆனால் அந்த இருளை உணர முடியாதவாறு பரிதாபத்திற்குரிய நிலையில் நம்முடைய வாழ்க்கை நகர்கின்றது. நாம் இருளில் இருக்கின்றோம் என்பதைக்கூட உணர முடியாதவாறு பிசாசானவன் நம் மனக்கண்களை குருடாக்கி வைத்துள்ளான். எனவே நாம் முதலில், நம்மைச் சுற்றியுள்ள இருளை உணர்ந்து, தேவையானது என்ன என்பதை ஞானமாய் அறிந்து இயேசுவிடம் வந்த குருடர்களைப் போல சுற்றியுள்ள தடைகளை பொருட்படுத்தாமல் உண்மையான நோக்கத்தோடு தேவ சமூகத்தில் நம்முடைய தேவைகளைக் கேட்கும்போது நிச்சயமாகவே தேவன் நம்முடைய விருப்பங்களை
நிறைவேற்றுகிறவராய் இருக்கின்றார்.
- Mrs. புவனா தனபாலன்
ஜெபக்குறிப்பு:
நமது மிஷனெரிகளைக் கொண்டு தேசத்தில் தேவன் பெரிய எழுப்புதலைக் கட்டளையிட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250