By Village Missionary Movement
Tuesday, 16-Feb-2021இன்றைய தியானம்(Tamil) 16-02-2021
தேவ வைராக்கியம்
“...பவுல்... தன் ஆவியில் மிகுந்த வைராக்கியமடைந்து,” – அப். 17:16
இங்கிலாந்தில் மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த வில்லியம்கேரி வறுமை காரணமாக பள்ளிப் படிப்பை பாதியிலே நிறுத்திவிட்டார். இவருடைய 16வது வயதில் செருப்பு தைக்கும் கடையில் வேலை செய்துகொண்டு தன்னுடைய மேஜைக்கு முன்பாக தொங்கவிடப்பட்டிருந்த இந்திய வரைபடத்தைப் பார்த்து, இயேசுவை அறியாத மக்களுக்காக மிகுந்த வைராக்கியத்துடன் கண்ணீருடன் ஜெபித்து வந்தார். 1793ம் ஆண்டு இந்தியாவிற்கு வந்து மேற்கு வங்காளத்தில் தன் ஊழியத்தைத் தொடங்கினார். வந்த கொஞ்ச நாட்களிலே இவருடைய 5 வயது மகனை இழந்தார், இவருடைய மனைவி மனநிலை பாதிக்கப்பட்டவரானார், இவரும் மலேரியா காய்ச்சலினால் மரணத்தின் விளிம்புவரை சென்றார். ஆனாலும் தேவனுக்காக வைராக்கியமாய் நின்று பாடுகளை மேற்கொண்டார். ஒரே இரவில் இவர் மொழி பெயர்த்த வேதாகமத்தின் அனைத்து பக்கங்களும் எரிந்து சாம்பலாயின. ஆனாலும் எதினிமித்தமும் தேவனுக்காக அவர் முன் வைத்த காலை பின் வைக்கவில்லை. மேற்கு வங்கத்தில் செராம்பூர் யுனிவர்சிட்டி என்ற மாபெரும் வேதாகம கல்லூரியை தொடங்கினார். இன்றும் அந்த வேதாகம கல்லூரியிலிருந்து, அநேக தேவ ஊழியர்கள் எழும்பி பிரகாசித்து வருகின்றனர்.
வேதாகமத்திலே, இயேசுகிறிஸ்துவுக்கு அடுத்தபடி அநேக பாடுகள், உபத்திரவங்கள் அடைந்தவர் பவுல் அப்போஸ்தலர் தான். பசி, பட்டினி, அடிகள், சிறைவாசம் என இவர்பட்ட பாடுகள் அதிகம். சிறைச்சாலையில் இருந்தாலும் அநேக இளம் ஊழியர்களை உருவாக்கினார், பல நிருபங்களை எழுதினார். காரணம் பெற்றுக்கொண்ட ஊழியத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற வைராக்கியமே! மேலும் அவர் ஆவியில் மிகுந்த வைராக்கியமடைந்து, தினந்தோறும் தைரியமாய் பிரசங்கம் பண்ணினார். இதனிமித்தம் அந்நாட்களில் மாபெரும் எழுப்புதல் ஏற்பட்டது.
இதை வாசித்துக் கொண்டிருக்கிற நமக்குள் எப்படிப்பட்ட வைராக்கியம் இருக்கிறது? தேவனுக்கேற்ற வைராக்கியமா? அல்லது மாம்சீக வைராக்கியமா? தேவனுக்கேற்ற வைராக்கியம் நம்மை சிறந்த ஆத்தும ஆதாயகர்களாக மாற்றும். ஆனால் சகோதரனோடு பேசாமல் வைராக்கியம் பாராட்டுவது, பகை, கோபம், மூர்க்கம் இப்படிப்பட்ட காரியங்களில் நமக்கு வைராக்கியம் இருக்குமென்றால் நம்முடைய ஆத்துமாவை கூட இழந்துவிடுவோம். ஆண்டவர் நம்மோடு பேசுகிறார். கிறிஸ்தவ வாழ்வின் தொடக்கத்தில் எத்தனையாய் தேவனுக்காக வைராக்கியமாக நின்றீர்கள். நாளடைவில் அவை மங்கி, மறைந்து போய் விட்டதோ? பாடுகளும், போராட்டங்களும் உங்களை சோர்வடையச் செய்து விட்டதோ? மேலே கண்ட இரு தேவமனிதர்களின் வாழ்வை பாருங்கள். தங்களை தெரிந்துகொண்ட தேவனுக்காக அனைத்தையும் சகித்து வைராக்கியமாய் வாழ்ந்ததினிமித்தம் இன்றுவரை அவர்கள் சீஷர்களை, ஊழியர்களை உருவாக்கிக் கொண்டே இருக்கிறார்களே! அப்படியென்றால் நாமும் தேவனுக்காக தைரியமாய் நிற்கும்போது பலன் இல்லாமல் போகுமா? நிச்சயம் உண்டு.
- Mrs. சக்தி சங்கர்ராஜன்
ஜெபக்குறிப்பு:
சிறுவர் பங்குதாரர் திட்டத்தில் இணைந்துள்ள பிள்ளைகள் பெற்றோர்களின் அர்ப்பணிப்பில் நிலைத்திருக்க ஜெபியுங்கள்.
இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app:
தமிழில் பெற - +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.vmmorg.template.msmapp
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250