By Village Missionary Movement
Friday, 28-Oct-2022இன்றைய தியானம்(Tamil) 29-10-2022
இயேசுவின் நாமத்தில் ஜெயம்
“என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன்“ - யோவான்14: 14
20 வயதான லூட்விக், கால்கள் உடைந்த நிலையில் படுக்கையில் நடக்கமுடியாமல் வேதனையுடன் தன் நாட்களை கடத்தி வந்தார். ஒரு நாள் வேதத்தைப் படிக்கும் போது யோவான் 14:14 அவரை அசைத்தது. மீண்டும் மீண்டும் இந்த வசனத்தை படித்துக்கொண்டே இருந்தார். தன் அம்மாவை அருகில் அழைத்து, “தேவன் எனக்கு நல்ல சுகம் தந்து என்னை எழுந்து நடக்கச் செய்வாரா? என் நாமத்தில் எதைக் கேட்டாலும் இதைச் செய்வேன் என்றாரே எனக்கு இந்த நன்மையை செய்து என்னை ஆசீர்வதிப்பாரா?” எனக் கேட்டார் தாயும் மிகுந்த விசுவாசத்துடன் தன் கரங்களை தன் மகனின் கரங்களுடன் இணைத்து ஜெபிக்கத் தொடங்கினார்.
லூட்விக் நம்பிக்கையுடன் கிறிஸ்துவை முழுவதும் நம்பத் தொடங்கினார். 3 வருடங்கள் கழிந்தன. ஒருநாள் தன் படுக்கையை விட்டு எழுந்தார், நடந்தார், ஓடினார். 24 வயது நிரம்பிய அந்த இளைஞர் கையில் வேதாகமத்துடன் இந்தோனேஷியாவிலுள்ள சுமத்திரா தீவை நோக்கி மிஷனெரியாக சென்றார். கிறிஸ்து யார் என்றே தெரியாத, “போபாக்” என்று அழைக்கப்பட்ட அந்த மக்களுக்கு, தன் வாழ்வில் அற்புதம் நடத்தி தேவ அன்பை ருசி பார்க்கச் செய்த தேவனை அறிவித்தார். பல இன்னல்கள், இடையூறுகளை பொறுமையுடன் சகித்து கிறிஸ்துவை பிரசங்கித்தார். அவர்கள் மொழியிலேயே வேதாகமத்தை மொழி பெயர்க்க ஆரம்பித்தார். 1862 லிருந்து 1876 வரை 2000 ஆத்துமாக்களை ஆதாயம் செய்தார். 1878 ம் ஆண்டு புதிய ஏற்பாட்டை போபாக் மொழியில் வெளியிட்டார். பெரும் புதையலைப் பெற்றுக் கொண்ட மகிழ்ச்சியில் மக்கள் அனுதினமும் கிறிஸ்துவுக்குள் வளர ஆரம்பித்தனர். தற்பொழுது இந்தோனேஷியாவிலுள்ள சுமத்திரா தீவில் தான் அதிக கிறிஸ்தவ மக்கள் வாழ்கின்றனர்.
எனக்கன்பானவர்களே! நாம் ஜெபிக்கும் போதெல்லாம் தேவன் அதைக் கேட்கிறார் என்பதையும் அதற்கு பதில் தருகிறார் என்பதையும் விசுவாசித்து ஜெபிக்க வேண்டும். விசுவாசமில்லாத ஜெபம் பயனற்றது. பிதாவிடம் நமக்காக கிறிஸ்து பரிந்து பேசுகிறார் என்பதை உணர்ந்து ஜெபிக்கும் போது ஆவியானவரும் நமக்காக வேண்டுதல் செய்கிறார். (ரோமர் 8: 26-27) நாம் பிதாவிடம் ஜெபிப்பதற்கு கர்த்தராகிய இயேசுவின் மூலமே தகுதி பெற்றுள்ளோம். எனவே இயேசுவின் நாமத்திலே நம் விண்ணப்பங்களை ஏறெடுத்து வெற்றி வாழ்வு வாழ்வோம். தேவகிருபை நம்மைத் தாங்குவதாக! ஆமென்.
- Mrs. சரோஜா மோகன்தாஸ்
ஜெபக்குறிப்பு:
மீடியா ஊழியத்தில் பணிபுரியும் நபர்களுக்கு தேவன் தேவையான ஞானத்தை தர ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250