By Village Missionary Movement
Wednesday, 26-Oct-2022இன்றைய தியானம்(Tamil) 27-10-2022
தேற்றும் தெய்வம்
“அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால் உங்கள் கவலைகளையெல்லாம் அவர் மேல் வைத்துவிடுங்கள்” - 1பேதுரு 5:7
ஒரு சிறு பிள்ளை விளையாடிக் கொண்டிருந்தபோது கீழே விழுந்து அவளது விரலில் அடிபட்டுவிட்டது. அவள் விரலில் வேதனையோடு அழுதுகொண்டே தனது அப்பாவிடம் ஓடி வந்தாள். அப்பா மடிக்கணினியில் வேலை செய்து கொண்டிருந்தார். “அப்பா எனது விரலில் அடிபட்டுவிட்டது, எனக்கு வலிக்கிறது மருந்து போட்டு விடுங்கள்“ என்று சிறுபிள்ளை அழுதாள். அப்பா நிமிர்ந்து பார்த்து, “நான் இப்போது வேலையாயிருக்கிறேன் போ, என்னால் இப்போது ஒன்றும் செய்யமுடியாது“ என்றார். சிறுபிள்ளை மிகவும் ஏங்கி “அப்பா நீங்கள் எனக்கு மருந்து போடவில்லை என்றாலும் பரவாயில்லை, நீங்கள் எனக்கு சில ஆறுதலான வார்த்தைகளையாவது கூறி இருக்கலாமே?“ என்று அழுதாள். அப்பா அவள் தலையைத் தடவிக்கொடுத்து ஆறுதலான வார்த்தைகளைக் கூறி விரலுக்கு மருந்து போட்டுவிட்டார்.
வேதாகமத்தில் 1பேதுரு 5:7 –ல் “அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர் மேல் வைத்து விடுங்கள் “ என்று சொல்லியிருக்கிறதை வாசிக்கிறோம். அநேக நேரம் சூழ்நிலைகள் நம்மை நெருக்கும் போது, கவலைகள் நம்மை நெருக்கும்போது நமக்கு யாராவது ஆறுதல் சொல்ல மாட்டார்களா, விசாரிக்க மாட்டார்களா? என நாம் ஏங்குகிறோம். ஆனால் நம்மை விசாரிக்க ஒருவர் இருக்கிறார். அவர் உங்களை அன்புடன் விசாரிகிறவர். அவர்தான் நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்து “அவர்மேல் உங்கள் கவலைகளையெல்லாம் வைத்துவிடுங்கள்“ என்று வேதம் கூறுகிறது. மனிதர்கள் மாறிப்போகலாம், பெற்றோர் கூட கைவிடலாம், ஆனால் அவர் ஒருபோதும் நம்மைக் கைவிடுவதில்லை. அவர் எப்போதும் நமது பட்சத்தில் இருக்கிறார். நீங்கள் அவரை நோக்கி “அப்பா, பிதாவே” என்று கூப்பிடும்போது அவர் உங்களுக்கு பதிலளிப்பார்.
பிரியமானவர்களே! இன்றும் கூட` நாம் நம் மீது அன்புகூர மனிதர்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கலாம். ஆனால் தேவன், “என் மகன், என் மகள், என் மீது அன்பு செலுத்தமாட்டர்களா?“ என்று காத்துக் கொண்டிருக்கிறார். திக்கற்றவர்களுக்கு அவரே சகாயர், தாயும், தகப்பனுமாய் இருக்கிறவர் அவரே. அவர் நம்மேல் வைத்திருக்கிற அன்பின் ஆழமும், அகலமும், நீளமும், உயரமும் இன்னதென்று நம்மால் அறிய முடியாது. அவர் நம்மேல் வைத்திருக்கிற தமது அன்பை, தம் உயிரையே தந்து விளங்கப்பண்ணினார் என்று நாம் வேதத்தில் வாசிக்கிறோம். உங்களை நேசிக்கும் அவர் மீது அன்பு செலுத்துங்கள். உங்கள் வாழ்க்கை சந்தோஷமாக மாறும் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
- M. எப்ஸிபா
ஜெபக்குறிப்பு:
நாம் செய்து வரும் வசனப் போஸ்டர் ஊழியத்தின் மூலம் வீடுகளில் ஒட்டப்பட்டுள்ள வசனத்தை வாசிப்போர் இருதயத்தில் தேவன் கிரியை செய்ய ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250