By Village Missionary Movement
Monday, 24-Oct-2022இன்றைய தியானம்(Tamil) 24-10-2022 (Youth Special)
தகப்பனின் அன்பு
“...நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக் கொண்டு, உன் வீட்டுக்குப் போ என்றார்” – மத்தேயு 9:6
அன்புக் கண்மணிகளே! நான் உங்களுக்கு ஒரு கதைசொல்ல விருப்பப்படுகிறேன். ஒரு கிராமத்தில் மேரி என்ற ஒரு வாலிபப்பெண் இருந்தாள். அவளுக்கு அம்மா இல்லாததால், அவளுடைய தந்தை அவளை மிகவும் நேசித்தார். அவள் மேற்படிப்பு படிக்க வேறு மாநிலத்திற்குச் சென்றாள். அங்கு தவறான நண்பர்களின் தொடர்பால் உலக வலையில் சிக்கினாள். தந்தையிடம் பொய் சொல்லி அதிக பணம் வாங்க ஆரம்பித்தாள். மேலும் கல்லூரி செல்லாமல், விடுதியில் தங்காமல் வெளியே சுற்ற ஆரம்பித்தாள். இது அவள் தகப்பனாருக்கு அறிவிக்கப்பட்டது. ஒருசில நாட்களில் மேரியைக் கொண்டு எந்த பயனும் இல்லை என்பதை அறிந்த, அவளது நண்பர்கள் அவளைவிட்டு விலகிச் சென்றனர். இப்போது மேரி தன் நிலையை அறிந்து மிகவும் வருந்தி தேவனிடம் மன்னிப்பு கேட்டாள். மேலும் தன் தகப்பனுக்கும் கடிதம் எழுதி மன்னிப்புக்கேட்டு ஒப்புரவானாள். அவள் தகப்பனோ அவளை மிகுந்த அன்புடன் வரவேற்று ஏற்றுக்கொண்டார்.
வேதத்திலும் கூட இப்படி ஒரு உவமையை இயேசுகிறிஸ்து கூறியுள்ளார். லூக்கா 15:12-ல் இளையகுமாரனின் இந்த உவமையை வாசிக்கின்றோம். அவன் தன் தகப்பனிடம் சொத்தில் பங்கைப்பிரித்து வாங்கிக்கொண்டு, துன்மார்க்கமாய் ஜீவனம் பண்ண தூரதேசம் போனான். அங்கு தன் ஆஸ்திகளை செலவழித்து தனிமையில் நின்றான். அப்போது தன் தகப்பன் வீட்டை நினைவுகூர்ந்து “அங்கு வேலையாட்களுக்கும் நல்ல உணவு கிடைக்கிறது. நானும் செல்வேன்” என எண்ணினான். ஆனால் அவன் தகப்பனோ, அவனைக் கண்டு கட்டித்தழுவி புது வஸ்திரங்களை அவனுக்கு உடுத்தி, விருந்தை ஆயத்தம்பண்ணி அவன் வருகையைக் கொண்டாடினார்.
அன்பு வாலிபத் தம்பி தங்கைகளே! வேதம் கூறுகிறது, “மனம் திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாயிருக்கும்” என்று. இன்றும் கூட உலக இச்சையில் சிக்கிக்கொண்டு, குற்ற உணர்வோடு போராடிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு கண்மணிக்கும் தேவன் கூறும் வார்த்தை இது. அவர் பாவத்தை வெறுப்பவர், ஆனால் பாவிகளையோ நேசிக்கிறார். நமக்காக தம் சொந்த இரத்தத்தை சிலுவையில் சிந்தி, நம்மை மீட்டுக்கொண்டார். பூமியிலே மனுஷனுடைய பாவங்களை மன்னிக்க அவர் அதிகாரமுடையவராய் இருக்கின்றார். எனவே உங்கள் பாவங்களை மனப்பூர்வமாய் உணர்ந்தவர்களாய், தேவனிடம் அறிக்கை செய்யும்போது, அவர் அதை மன்னித்து, அதிலிருந்து உங்களை விடுவிக்க வல்லவராய் இருக்கின்றார். எனவே தேவனிடம் உங்கள் வாழ்வை அர்ப்பணியுங்கள். அவர் உங்களை மீட்டுக்கொள்வார்.
- Mrs. ஷீலா ஜான்
ஜெபக்குறிப்பு:
நம்மோடு இணைந்து ஊழியம் செய்யும் தோழமை ஊழியர்களுக்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250