By Village Missionary Movement
Friday, 21-Oct-2022இன்றைய தியானம்(Tamil) 21-10-2022
கனமுள்ள காவல்துறை
‘’நீ ஆயத்தப்படு, உன்னுடனே கூடின உன் எல்லாக்கூட்டத்தையும் ஆயத்தப்படுத்து; நீ அவர்களுக்குக் காவலாளனாயிரு‘’ - எசேக்கியேல் 38:7
1959-ஆம் வருடம், இந்திய எல்லைக்குள் லடாக்கிலுள்ள ‘’ஹாட்ஸ்பிரிங்’’ –ஸில், எண்ணிக்கையில் சமமற்ற வீரர்களுடனான மோதலில், பதுங்கியிருந்த சீன ராணுவத்தினரால் 10 துணிச்சலான போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டனர். இந்தப் பத்து காவலர்களின் நினைவாக, அக்டோபர் 21 அன்று காவலர் நினைவு நாளாகக் (commemoration day ) கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 2017-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, சுதந்திரம் அடைந்ததிலிருந்து இதுவரை சுமார் 34, 844 காவலர்கள் இன்னுயிர் நீத்திருக்கின்றனர். அவர்களையெல்லாம் நினைவுகூரும் விதமாய், ‘’வீரத்தின் சுவர்’’ என்னும் 30 அடி கிரானைட் சிற்ப நினைவுத்தூண் பலகை வைக்கப்பட்டுள்ளதை புதுதில்லியில் காணலாம். இது மட்டுமல்ல, பெயர் சொல்லப்படாத ஏராளம் காவலர்கள், ராணுவ வீரர்கள் தங்கள் வாழும் நாட்களிலும், பனியின் போதும், பசியை, தாகத்தை, தூக்கத்தை மறந்து, மக்களின் பாதுகாப்பில் தங்கள் வாழ்வை தியாகம் செய்திருக்கின்றனர். இன்றைக்கு அத்தனை வீரர்களையும் நினைவுகூருவோம்! கர்த்தருக்கு நன்றி செலுத்துவோம்!
வேதத்திலும் கூட மொர்தெகாய் என்னும் வாயிற்காவலர் ராஜாவின் ஜீவனைக் காப்பாற்றியதும், யூத ஜனத்தை அழிவிலிருந்து காக்கப் போராடி வெற்றி பெற்றதும் நாமறிந்ததே! (எஸ்தர்6: 1-11).
நெகேமியா எருசலேமின் அலங்கத்தைக் கட்டும்போது, ‘’இரவும் பகலும் காவல் காத்தோம், வஸ்திரங்களைக் களைந்து போடாதிருந்தோம் (நெகே. 4:23), கிழக்கு வெளுக்கும் நேரம் தொடங்கி, நட்சத்திரம் காணும்வரை ஈட்டிகளைப் பிடித்திருந்தோம். ஒரு கையினாலே வேலை செய்து, மறு கையினால் ஈட்டியைப் பிடித்துக் காவல் செய்தோம் என தன் சொந்த தேசத்திற்காய் அர்ப்பணிப்போடு செயல்பட்டதை வாசிக்கிறோம். இவைகளெல்லாம் நம் உள்ளத்தில் தேசத்தின் மேல் வைராக்கியம் கொள்ளச் செய்கின்றன.
எனக்கன்பானவர்களே, இப்படி தங்களது தேசத்திற்காக தியாகம் செய்தவர்களின் பட்டியல் வரலாற்றில் உண்டு. எல்லாவற்றிற்கும் மேலாய் முழு உலகத்திற்காக இயேசுகிறிஸ்து சிலுவையில் தியாக பலியானார். இன்னும் சுவிசேஷத்தினிமித்தம் எத்தனையோ பரிசுத்தவான்கள் இரத்த சாட்சிகளாய் மரித்துள்ளனர். இப்படி இரத்த சாட்சியாய் மரிக்கும் அழைப்பு நம் அனைவருக்கும் இல்லாவிட்டாலும், தேசத்திற்குக் காவலாளனாயிருக்கும்படி ஆண்டவர் நம் ஒவ்வொருவரையும் அழைக்கிறார். நாம் ஆயத்தப்பட்டு நம்மோடு கூடிய கூட்டத்தையும் ஆயத்தப்படுத்த வேண்டும். அதற்கு நீங்கள் ஆயத்தமா?
- Mrs.மஞ்சுளா
ஜெபக்குறிப்பு:
‘’ஜெபக்குழு தலைவர் கையேடு’’ – அச்சடிக்கத் தேவையான பணத்தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250