By Village Missionary Movement
Tuesday, 18-Oct-2022இன்றைய தியானம்(Tamil) 19-10-2022
இதுவும்.... அதுவும்.... இருந்தால்
“விசுவாசம் அவனுடைய கிரியைகளோடேகூட முயற்சிசெய்து, கிரியைகளினாலே விசுவாசம் பூரணப்பட்டதென்று காண்கிறாயே.” – யாக்கோபு 2:22
ஒரு ஏழை சலவைத்தொழிலாளியிடம் ஒரு வயதான கழுதை இருந்தது. அவருக்கு வேலைப்பளு அதிகம், அதில் அந்தக் கழுதை அவருக்கு மிகவும் உதவியாக இருந்தது. ஒருநாள் தண்ணீருக்காக அவர் வெட்டியிருந்த கிணற்றினுள் கழுதை விழுந்துவிட்டது. சலவைத்தொழிலாளி அதைப் பல இடங்களில் தேடியும் கிடைக்காமல், பின்பு கிணற்றிற்குள் இருப்பதைப் பார்த்துக் கவலைப்பட்டார். என்ன செய்வதென்றறியாமல் அதை மண்ணைப் போட்டு மூடிக் கொன்றுவிட்டு, தான் வேறே வேலைசெய்து பிழைத்துக் கொள்ளலாம் என்று எண்ணினார். ஆனால் கழுதைக்கு “தன் எஜமான் வந்துவிட்டார், என்னை எப்படியும் காப்பாற்றிவிடுவார்” என்ற எண்ணம் உற்சாகப்படுத்தியது. கழுதையின் எண்ணத்தில் மண் விழுந்தது. ஆம், சலவைத்தொழிலாளி தள்ளிய மண் தன் மேல் விழுந்ததை, உதறி அதன் மேல் ஏறி ஆங்காங்கே உள்ள கற்களை மிதித்து, துள்ளிக்குதித்து ஏறி சலவைத் தொழிலாளியின் வீட்டிற்குச் சென்றது. இந்த சலவைத்தொழிலாளிக்குக் கழுதை கற்றுக்கொடுத்த பாடத்தைப் பார்த்தீர்களா? “இருப்பதில் முயற்சி செய்து முன்னேற வேண்டியதுதான்” என்று சொல்லிக்கொண்டே வீட்டிற்குச் சென்றார்.
நமக்குத் தேவனிடம் விசுவாசம் உண்டு, ஆனால் நாம் சோம்பேறிகளாய் நம் மனதில், “ஆபிரகாமிற்குப் பலியிட ஆட்டுக்கடாவைத் தந்தவர் எனக்கும் தருவார்” என்று அமர்ந்துவிடுகிறோம். எலியாவைப் பாருங்கள், அவரை காகம் போஷித்ததல்லவா! என்று பேசியே ஏமாந்துபோகிறோம். தன் மகனை மோரியா தேசத்தின் மலைகள் ஒன்றில் தகனபலியாக பலியிடக் கர்த்தர் சொன்னபோது, தன் மனைவியிடம் கூட அதை அறிவிக்காமல் செயலில் இறங்கினார் ஆபிரகாம். அதிகாலமே எழுந்து பலியிட தன் மகனை அழைத்துச் சென்றார், ஏனென்றால் யார் நிமித்தமாகவும் தேவத் திட்டம் தடைபட்டு விடக்கூடாது என்பதே அவரது நோக்கம்.
எனக்கன்பானவர்களே! விசுவாசத்தில் துணிச்சலோடு செயல்பட்ட ஆபிரகாம், தன் வயதான காலத்தில் தனக்குப் பிறந்த மகனை கர்த்தருக்காக இழக்கத் தயாராயிருப்பதினால் அதைவிடச் சிறந்த கீழ்ப்படிதல் வேறெதுவும் இருக்கமுடியுமா? தன் மகனை அழைத்துச் செல்லும்போதும், தன் குமாரனைக் கயிற்றினால் கட்டும்போதும், கட்டைகளை பலிபீடத்தில் அடுக்கும்போதும், கட்டைகள் மேல் கிடத்தி வெட்ட தன் கையை உயர்த்தும் வரையில் தன் மகன் மட்டுமே பலி என்பது மட்டும்தான் அவனது சிந்தையில் இருந்தது. மனிதனாய்ப் பிறந்த ஆபிரகாம் தன் சொந்த மகனை இழக்கத் தயாராயிருப்பாரானால், நம் பரமப் பிதாவும் தன் சொந்தக்குமாரனை நமக்காக சாகக் கொடுத்தது எத்தனை உண்மை. நாம் நம்முடைய கிரியையினால் விசுவாசத்தைக் காத்துக்கொள்ள எதை இழக்கத் தயாராயிருக்கிறோம் என்று சிந்திப்போமா? நம்மிடம் இருப்பதை வைத்து முயற்சிசெய்து, நமக்குத் தேவன் குறித்ததை அடையப் பிரயாசப்படுவோம்.
- Mrs. அன்புஜோதி ஸ்டாலின்
ஜெபக்குறிப்பு:
சங்கிலித்தொடர் ஜெப ஊழியத்தில் இணைந்து ஜெபிக்கும் ஜெபவீரர்கள் - ஜெபவீராங்கனைகளை தேவன் எலியாவின் ஆவியினால் நிரப்ப ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250