By Village Missionary Movement
Saturday, 15-Oct-2022இன்றைய தியானம்(Tamil) 15-10-2022
அறிக்கை செய்தல்
“தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான். அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.” - நீதி. 28:13
John –ம் Mary –ம் உடன் பிறந்தவர்கள். விடுமுறை நாட்களில் பாட்டி இருக்கும் கிராமத்திற்கு செல்வார்கள். பாட்டியின் வீட்டில் கோழி, ஆடு, வாத்து போன்ற பல விலங்குகளும் உண்டு. விடுமுறைக்கு இவர்கள் போகும் போது, பாட்டி விதவிதமான, ருசியான உணவுகளை இருவருக்கும் செய்து தருவார்கள். ஒருநாள் இருவரும் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது John ஒரு வாத்தின் கழுத்தைப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தான். அப்பொழுது எதிர்பாராத விதமாக வாத்து இறந்து போயிற்று. உடனே John பயந்துபோய் சுற்றிலும் பார்த்தான். யாரையும் காணவில்லை. ஒரு குழியைத் தோண்டி அதில் இறந்து போன வாத்தைப் புதைத்தான். “அப்பாடா யாரும் பார்க்கவில்லை” என்று கூறி திரும்பியவனுக்கு அதிர்ச்சி, பின்னால் Mary நின்று கொண்டிருந்தாள். உடனே அவள் “பாட்டியிடம் கூறப்போகிறேன்.” என்றாள். John அவளிடம் அழுதபோது அவள் அதை பாட்டியிடம் கூறவில்லை.
அன்று இரவு பாட்டி நல்ல சுவையான முட்டை பலகாரம் செய்து இருவருக்கும் கொடுத்தார்கள். Mary –சாப்பிட்டுப் பார்த்த போது ருசி நன்றாயிருந்தது. உடனே அவள் John –ன் தட்டில் இருந்த அனைத்து பலகாரங்களையும் எடுத்துக்கொண்டாள். John –க்கு கோபம் வந்து “பாட்டியிடம் கூறுவேன்” என்றான். Mary-யோ “வாத்தைப்பற்றி கூறுவேன்” என்று பயமுறுத்தினாள். இப்படியே Mary ஒவ்வொருநாளும் வாத்தைப் பற்றிச் சொல்லியே John-ஐ மிரட்டி வந்தாள். அன்று இரவு John நடந்த எல்லாவற்றைப் பற்றியும் பாட்டியிடம் கூறி மன்னிப்புக் கேட்டான். பாட்டியும் மன்னித்து விட்டார். பின்னர் John, Mary -க்கு பயப்படவே இல்லை.
வேதத்தில் கூட 2 சாமுவேல் 11ம் அதிகாரத்தில் தாவீது ஒரு பெரிய பாவத்தை செய்ததைப் பார்க்கிறோம். உரியாவைக் கொன்று அவன் மனைவி பத்சேபாளை தனக்கு மனைவியாக்கிக் கொண்டான். இது கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பாய் இருந்தது. கர்த்தர் அந்த பாவத்தை தீர்க்கத்தரிசி நாத்தான் மூலமாய் உணர்த்தியபோது, தாவீது மன்னிப்புக் கேட்டார். அதோடு இன்று வரை நாம் அனைவரும் வாசித்து அறியும்படி சங்கீதமாய்ப் பாடி வெளிப்படையாகத் தன் தவறை ஒத்துக்கொண்டார்.
ஆம் பிரியமானவர்களே! நாமும் அப்படித்தான் பாவத்தோடு வாழ்ந்து கொண்டிருந்தால் பயமும், அழுகையும், இழப்பும் தான் நேரிடும். பாவங்களை அறிக்கை செய்தால், மன்னிக்க கிறிஸ்து அதிகாரம் உடையவராய் இருக்கின்றார். ஆனால் நாம் அதைச் செய்யாமல் நமது பாவங்களாகிய பாரங்களை நாம் மறைத்து வைத்து நாமே நம் பாரங்களை சுமந்து கொண்டிருப்போமானால், அது நம் இருதயத்தைத் துளைத்துக் கொண்டேயிருக்கும். பிசாசும் அதனைப் பயன்படுத்தி நம்மைக் குற்றப்படுத்தி, தேவனிடம் இருந்து நம்மைப் பிரிக்க முயற்சி செய்வான். எனவே, நமக்காய் இரத்தம் சிந்தி மரித்த இயேசுவின் பாதத்தில் நமது பாவபாரங்களை இறக்கி வைப்போம். தேவ சமாதானம் பெற்று சந்தோஷமாய் வாழ்வோம். நம்மைச் சுற்றி உள்ளவர்களுக்கும் இந்த இரட்சிப்பின் சந்தோஷத்தை அறிவித்து, அவர்களும் பரம கானானுக்குள் வர வழிவகுப்போம். அல்லேலூயா!
- Mrs. திவ்யா அலெக்ஸ்
ஜெபக்குறிப்பு:
இன்று அரியலூர் பணித்தளத்தில் நடைபெறவுள்ள ’’எழுப்புதல் விரும்புவோர் முகாம்’’ ல் தேவன் முன் குறித்திருக்கிற நபர்களை தடையில்லாமல் அழைத்துவர ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250