By Village Missionary Movement
Tuesday, 11-Oct-2022இன்றைய தியானம்(Tamil) 11-10-2022
முடிவு நிரந்தரமில்லை
‘’...நீ உனக்குக் கெடுதி ஒன்றுஞ் செய்துகொள்ளாதே...’’ - அப்போஸ்தலர் 16.28
தென்கொரிய தேசத்தில் எழுப்புதலுக்கு தேவனால் பயன்படுத்தப்பட்ட போதகர் பால் யாங்கி சோ. இவருடைய சபையில் பல இலட்சக்கணக்கான விசுவாசிகள் இருக்கின்ற காலகட்டத்திலும் தனக்கு இருக்கின்ற பிரச்சனைகளைத் தாங்கிக்கொள்ள முடியாமல் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொள்ள நினைத்தார். தேவன் அவருடன் இடைபட்டு “ நீ மாடியிலிருந்து கீழே குதிப்பதற்கு உனக்குள்ள தைரியத்தை, ஊழியத்தில் பயன்படுத்து “ எனக் கூறினார். அப்பொழுது தற்கொலை எண்ணத்தை விட்டுவிட்டார். இன்னொரு முறை அவருடைய சபை கட்டுவதற்கு பல இலட்சக்கணக்கான பணத்தைக் கடனாகப் பெற்று சபையைக் கட்டி முடித்துவிட்டார். அவருக்குக் கடன் கொடுத்தவர்கள் நெருக்கவே, தான் லைசன்ஸ் பெற்று வாங்கிவைத்த துப்பாக்கியினால் தன்னை தாக்கிக் கொல்ல முற்பட்ட சூழ்நிலையில், ஒரு போன் கால் அவருக்கு வரவே, அதில் ஒருவர் “உங்களுடைய செய்தியை நான் காரில் சென்று கொண்டிருக்கும் போது கேட்டேன், நீங்கள் சபைக்கு இவ்வளவு ரூபாய் பணத்தேவை என்று சொன்னீர்கள், உங்களுடைய முழுத்தேவையான அவ்வளவு பணத்தையும் நாளை எடுத்துக்கொண்டு உங்களை சந்திக்க வருகிறேன் “ எனக் கூறினார். உடனே பால் யாங்கி சோ, துப்பாக்கியை கீழே போட்டுவிட்டு, “ஆண்டவரே கோழைத்தனமாக முடிவு எடுத்ததற்காக மன்னியும்“ என ஜெபித்தார்.
அப்போஸ்தலர் 16 –ம் அதிகாரத்தில் காவலில் வைக்கப்பட்டிருந்த பவுலும் சீலாவும் தேவனைத் துதித்த போது சிறைச்சாலைக் கதவுகள் திறவுண்டது. இதனைக் கண்ட சிறைச்சாலைக்காரன், சிறையிலிருந்தவர்கள் ஓடிப்போனார்களென்று எண்ணி பட்டயத்தை உருவி தன்னைக் கொலை செய்து கொள்ளப் போனான். பவுல் உடனே மிகுந்த சத்தமிட்டு “நீ உனக்குக் கெடுதி ஒன்றுஞ் செய்துகொள்ளாதே, நாங்கள் எல்லோரும் இங்கேதான் இருக்கிறோம்”
என்றான். உடனே சிறைச்சாலைக்காரனுக்கு பவுல் நற்செய்தியை கூறி,
இரட்சிப்புக்கு நேராய் அவனை வழி நடத்தினார் என்று வாசிக்கிறோம்.
இதை வாசிக்கின்ற பிரியமானவர்களே! நாம் அனுதினமும் கேள்விப்படுகின்ற ஒரு செய்தி, வாலிபப் பிள்ளைகளின் தற்கொலைகளும், தற்கொலை எண்ணமும் நாள்தோறும் பெருகிக்கொண்டே இருக்கிறது. எந்த ஒரு சகிக்க முடியாத பிரச்சனைகளுக்கும், சூழ்நிலைகளுக்கும் தற்கொலை முடிவல்ல! எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு உண்டு பண்ணுகிற ஒரே இடம், அது ஆண்டவர் இயேசுவின் பாதம் மட்டுமே! நாம் கோபத்திலும் , வீண் வைராக்கியத்திலும் எடுக்கும் பலவிதமான முடிவுகள் வேதனையையே தரும். இது நிரந்தரமும் இல்லை. தற்கொலை செய்ய எடுக்கும் உங்கள் தைரியத்தையும், உங்கள் துணிச்சலையும் வாழ்க்கை வாழ்வதற்கு பயன்படுத்துங்கள். ஆண்டவர் இயேசு உங்களுக்கு உதவி செய்வதற்கு ஆயத்தமாயிருக்கிறார். அல்லேலூயா!
- Mrs. சக்தி சங்கர்ராஜ்
ஜெபக்குறிப்பு
ஆந்திராவில் 6 இடங்களில் ஆலயம் கட்டி ஆராதனை நடைபெற்று வருகிறது. பங்குபெறும் நபர்கள் தேவனுக்காக செயல்படும் செயல்வீரர்களாய் மாற ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250