Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 09-10-2022
Share:

By Village Missionary Movement

Sunday, 09-Oct-2022

இன்றைய தியானம்(Tamil) 10-10-2022

 

மனம் புதிதானால்...                                  

 

‘’தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்‘’ – 2 தீமோ. 1:7 

 

எந்தவொரு மனிதனுடைய மனமும் பலவிதமான சிந்தனைகளினாலே ஆட்கொள்ளப்பட்டு அந்த சிந்தனைகளே செயல்வடிவம் பெறுகிறது. எனவே மனிதர்களின் மனநலன் காக்கப்பட்டால்தான், மனுக்குலத்தின் செயல்கள் அனைத்தும் ஏற்புடையவைகளாய் அமையும். மனத்தெளிவற்றவர்களை பிசாசானவன் எளிதில் தாக்கி, தன்னுடைய நோக்கத்தை செயல்படுத்தும் கருவிகளாக மாற்றிவிடமுடியும். எனவே நாம் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருந்து விசுவாசத்தினால் ஜெயிக்கிறவர்களாகக் காணப்படவேண்டும். ‘’மனநல தினமான’’ இன்று இது குறித்து சிந்திப்பது பொருத்தமாக இருக்கும். 

 

இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம். ஆனால் திருடனாகிய பிசாசு கொல்லவும் அழிக்கவும் வருகிறவனாதலால் தனிமனிதனுடைய மனநிம்மதியை, சமாதானத்தை, சந்தோஷத்தை குலைத்துவிடுகிறான். அதுவே ஒருவரது மனநலனை பாதித்துவிடுகிறது. மாம்சத்தின் கிரியைகள் பெருகும்போது சாத்தான் மனித மனதை ஆட்கொண்டு அவன் செயல்படுத்த நினைக்கும் யாவற்றையும் செய்கிற கைப்பொம்மைகளாக மனிதர்களை மாற்ற முடியும். பெரும்பாலும் மனநலம் பாதிக்கப்படுகிறவர்கள் 1.குற்ற மனசாட்சி, 2. பிறரால் அவமதிக்கப்படுதல், 3. பிரச்சனைகளை எதிர்கொள்ளமுடியாமை மற்றும் 4. ஏவல், மாந்திரீக பில்லிசூனிய வல்லமைகள் போன்றவற்றால் அந்த நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். என்னை நேசிக்க, அப்படியே ஏற்றுக்கொள்ள, தகப்பன் இயேசு இருக்கிறார் என்கிற ஒரு சிந்தையே மனித மனதைப் புதிதாக்கி விடமுடியும். கிறிஸ்துவுக்குள் மாம்ச சிந்தை சாகும்போது மனிதர்கள் நல்ல மனநலம் (ரோமர் 8.10) பெற்று தீமையை நன்மையினாலே வென்றுவிடுகிறார்கள்.       

 

பிரியமானவர்களே, புதிதும் ஜீவனுமான மார்க்கம் என்று எபிரெயருக்கு எழுதின நிருபம் விவரிக்கிறது. இதற்குள் பிரவேசிக்க இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் மாத்திரமே முடியும். உலகத்திலுள்ள எத்தனையோ மனநலமருத்துவர்களால் குணப்படுத்தமுடியாத மனநலக் கோளாறுகளை ஆட்டுக்குட்டியானவரின் இரத்தமும், சாட்சியின் வசனங்களும் குணப்படுத்தமுடியும். நாம் திரும்பவும் பழைய சுபாவத்தின் படி நடப்பதற்கு அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், ‘’அப்பா பிதாவே’’ என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றிருகிறோம். இந்த ஆவியின் நடத்துதல் நம்மை மனதின் அனைத்துக் கட்டுகளிருந்தும் விடுவித்து நமது இலக்கை நோக்கி சிறந்த மனநலனுடன் ஓடச் செய்கிறது. எனவே எதையும் எதிர்கொள்ளும் தைரியத்தை தரும் தேவ ஆவியைப் பெற்றுக்கொண்டு, அவர் பெலனோடு நம் வாழ்க்கைப் பயணத்தில் ஓடுவோம்.

- Mrs. மெர்சி அலெக்சாண்டர் 

 

ஜெபக்குறிப்பு: 

ஆந்திரா மற்றும் ஓடிஸா மாநிலங்களில் நம்மோடு இணைந்து ஊழியம் செய்யும் 86 மிஷனெரிகளின் குடும்பங்களுக்காக ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al