By Village Missionary Movement
Sunday, 02-Oct-2022இன்றைய தியானம்(Tamil) 03-10-2022 (Youth Special)
காந்தியும் கிறிஸ்தவமும்
“....இடறல்கள் வராமல்போவது கூடாதகாரியம், ஆகிலும் அவைகள் எவனால் வருகிறதோ, அவனுக்கு ஐயோ!” - லூக்கா 17:1
அக்டோபர் 2 என்றாலே நம் நினைவிற்கு வருவது நமது பாரதத் தந்தை மகாத்மா காந்திஜி தான். இந்திய தேசத்தின் விடுதலைக்காக அநேகர் போராடிய போதும், இவரை மட்டும் தனியாக நாம் மகாத்மா என்று அழைக்கக் காரணம் அவருடைய அகிம்சை வழிதான். இந்த அகிம்சை வழியை அவர் தெரிந்து கொள்ள அடித்தளமாக அமைந்தது வேதாகமம் தான் என்பதை எத்தனை பேர் அறிவோம்!.
காந்தி வேதாகமத்தை ஒரு புனித புத்தகமாக ஏற்றுக் கொண்டு அதை கவனத்தோடு வாசித்தார், அவர் மலைப்பிரசங்கத்தைப் படித்த போது “ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால் அவனுக்கு மறுகன்னத்தையும் திருப்பிக்கொடு” (மத்5:39 ) என்ற வசனம் அகிம்சை அல்லது சத்தியாகிரகம் வழியாக பகைவரோடு போராடவேண்டும் என்ற எண்ணத்தை அவருக்குள் தூண்டியது. வேதாகமத்தைப் படித்து அதை தன் வாழ்வின் எல்லா நிலையிலும் கடைப்பிடிக்க விரும்பி, செயலிலும் செய்து காட்டினார். இயேசு மனிதகுலத்திற்குக் கிடைத்த மிகச் சிறந்த போதகர் என்றும், புதிய ஏற்பாடு எனக்கு மகிழ்ச்சியையும் ஆறுதலையும் கொடுத்தது என்றும் அவர் கூறியுள்ளார். இவ்வளவு தூரம் கிறிஸ்துவை அறிந்தும் வேதத்தை வாழ்வாக மாற்றியும் இவர் இரட்சிக்கப்படவில்லை! இதற்கு காரணம் “கிறிஸ்தவர்கள் இந்து மக்களையும் அவர்கள் தெய்வங்களையும் சாடுவதை நான் பார்த்தேன். என்னால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே கிறிஸ்தவர்களை நான் வெறுத்தேன். நான் கிறிஸ்தவனாகவில்லை“ என்று கூறினார். ஆம் , கிறிஸ்தவர்களாகிய நாம் இதை சிந்திக்க வேண்டும்.
பிரியமானவர்களே! வேதாகமம் தேவன் நமக்குக் கொடுத்த மிகப்பெரிய பொக்கிஷம். இதை வாசித்து தியனித்தோமானால் நாம் அநேக ஆலோசனைகளைப் பெற்று சிறப்பாக வாழலாம். இதில் எழுதப்பட்ட வார்த்தைகளை பின்பற்ற வேண்டுமே ஒழிய அதை பின்பற்றுபவர்களை பார்த்து அவர்கள் சரியில்லாததால் இது எனக்கு தேவையில்லை என்போமானால் நமக்குத்தான் நஷ்டம். அதே நேரம் இதன் மறுபக்கத்தையும் நாம் பார்க்கவேண்டும். தேவனை பின்பற்றுபவர்களாகிய நம்முடைய செயலோ, சொல்லோ நம்மை சுற்றியுள்ளவர்கள் கிறிஸ்துவண்டை வருவதற்கோ அல்லது வந்தவர்கள் பின்வாங்குவதற்கோ காரணமாயிருக்கிறதா என்று சிந்திப்போம். அப்படி இருக்குமானால் நாமே இடறலுண்டாக்குகிறவர்கள். இப்படிப்பட்டவர்களைப் பார்த்து இயேசுகிறிஸ்து “ஐயோ“ என்று சொல்லுகிறார். அவர்களுடைய கழுத்தில் எந்திரக்கல்லைக் கட்டி சமுத்திரத்தின் ஆழத்தில் போடுவது நலம் என்கிறார். மேலும் இன்றைய தியானம் இன்னொரு காரியத்தையும் நமக்கு உணர்த்துகிறது . அது என்ன? வேதத்தின் சில பகுதிகளை மாத்திரம் படித்து அதை அப்பியாசித்த மகாத்மா வெற்றியடைவாரானால், பலமுறை வேதாகமத்தை வாசித்த நாம் வசனத்தை விசுவாசித்து ஜெயம் பெற்றிருக்கிறோமா என்று சிந்திப்போம். வசனத்தின் மேன்மையை இன்றைய நாளில் உணர்வோம். வேதம் நம் வாழ்வாக மாறட்டும்
- Sis. ஏஞ்சலின்
ஜெபக்குறிப்பு
Philip Gospel Team மூலம் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் சந்திக்கப்படும் கிராமங்களுக்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250