By Village Missionary Movement
Wednesday, 28-Sep-2022இன்றைய தியானம்(Tamil) 29-09-2022
கவலை வேண்டாம்
“நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை... தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்” - பிலிப்பியர் 4:6
நான் அதிகாலையிலே என் தோட்டத்தில் அமர்ந்திருந்தபோது திடீரென “கீச்கீச்” என்ற சத்தம் வந்தது. நான் அருகில் சென்று பார்த்தபோது மரத்தில் கூட்டிலுள்ள குருவிக்குஞ்சுகளின் சத்தம் என அறிந்தேன். சிறிது நேரம் அதையே நோக்கி அமர்ந்திருந்தபோது ஒரு அருமையான காட்சியைக் கண்டேன். கண்விழியா சிறு குஞ்சுகள், தாய்ப்பறவை கிளையில் வந்து அமர்ந்த சத்தம் கேட்டதும், ஒலியெழுப்பாமல் வாயைத் திறந்தன. தாய்ப்பறவை இரையை வைத்ததும் அப்படியே சாப்பிட்டன.
இதில் நமக்கு ஒரு பாடம் உண்டு. அந்த குஞ்சுகள் தம் அருகில் தாய்ப்பறவை அமர்ந்ததும், கொடுப்பதை பெற்றுக்கொள்ள தன் வாயைத் திறக்கின்றன. தாய்ப்பறவை தருவது நமக்குத் தேவையான ஆகாரம் என நம்பி வாங்கி உட்கொண்டன. ஆனால் மனிதர்களாகிய நாமோ தேவன் நம்முடன் இருந்தும், நம் தேவைகளை அவர் சந்தித்தும் பல வேளைகளில் நாளைய தினத்தை நினைத்தும், எதிர்காலத்தை நினைத்தும் கவலைப்பட்டுப் புலம்புகிறோம். நாளைய தினத்தை நினைத்து இன்றைய தினத்தை இழந்துவிடுகிறோம். ஆண்டவர் இயேசுகிறிஸ்து இவ்வாறு கவலைப்படுபவர்களைப் பார்த்து “பறவைகளைக் கவனித்துப் பாருங்கள்” என்றார். அவை எறும்புகளைப் போல சேமித்து வைக்காவிட்டாலும் தேவன் ஒவ்வொருநாளும் அவைகளைப் போஷிக்கிறார். ஆனால் நாம் “இதைவிட அது கிடைத்தால் நன்றாக இருக்கும். இப்போது இது தேவையில்லை” என தேவன் தருவதை அலட்சியப்படுத்துகிறோம். இதனால் தேவனும் வருத்தப்படுகிறார். அவர் நம் பரமபிதா. நம் தேவைகள், நம் இருதய விருப்பங்கள் யாவையும் அறிந்திருக்கிறவர். எல்லாவற்றையும் ஏற்றவேளையும், நேரமும் வரும்போது தர வல்லவர். தருகிறவைகளை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டு தேவ துணையோடு வாழும்போது நாம் சந்தோஷமாக இருக்கலாம். நாம் கவலைப்படும்போது சந்தோஷம் சமாதானத்தை நாம் இழந்து விடுவோம்.
பிரியமானவர்களே! பல நேரங்களில் நாம் நம் தேவன் தந்த ஆசீர்வாதங்களை மறந்து, அவருக்கு நன்றி சொல்லுவதை விட்டு, முறுமுறுத்து அவர் நமக்காய் வைத்திருக்கும் ஆசீர்வாதங்களை இழந்து விடுகின்றோம். நம் தேவன் சூழ்நிலைகளுக்கு மேலானவர். அவர் நம்மை உருவாக்கிய தேவன். அவர் நம் எண்ணங்கள் ஏக்கங்களை அறிந்தவர். எனவே அவர் தரும் காரியங்களை சந்தேகப்படாமல் அப்படியே ஏற்றுக்கொண்டு “தேவனே உமக்கு ஸ்தோத்திரம்” எனக் கூறும்போது அவர் மகிழ்ச்சியாய் நமக்கான காரியங்களை நடத்தித் தருவார்.
- Mrs. அன்புஜோதி ஸ்டாலின்
ஜெபக்குறிப்பு
தேசத்திற்காக திறப்பிலே நிற்கக்கூடிய புதிய ஜெபக்குழுக்களைக் கர்த்தர் எழுப்பித் தர ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250