By Village Missionary Movement
Sunday, 25-Sep-2022இன்றைய தியானம்(Tamil) 26-09-2022 (Youth Special)
சத்தமில்லா சுவிசேஷம்
“...தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்.” - பிலிப்பியர் 4:19
ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்! இந்த உலக காதுகேளாதோர் தினத்தன்று என்னுடைய சாட்சியை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், இயேசுவுக்கு நன்றியை செலுத்துகின்றேன். நான் பிறவியிலிருந்தே காது கேட்காதவனாய், பேசமுடியாதவனாய் இருந்தேன். என்னுடைய குடும்பம் மிகவும் ஏழ்மையான குடும்பம், பெற்றோர் மிகவும் கஷ்டப்பட்டு என்னை வளர்த்தார்கள். நான் மற்ற பிள்ளைகளைப் போல் படிக்கமுடியாது என்பதால் காதுகேளாதோர் பள்ளியிலே சேர்த்தார்கள். இயேசுவும் ஒரு கடவுள் தான் என்று நான் நினைத்துக்கொண்டிருந்தேன். மிகவும் கஷ்டத்தின் மத்தியில் படித்து முடித்து வேலைக்குச் சென்றேன். எனக்குக் காது கேளாததினால், நான் வேலை செய்யும் இடங்களில், மோசமான வார்த்தைகளால் என்னைத் திட்டினார்கள். நான் மட்டும் ஏன் இப்படிப் பிறந்தேன் என்று நினைத்து அழுவேன். எனக்குத் திருமணமும் முடிந்தது. என்னுடைய மனைவியும் என்னைப்போலவே பிறவியிலேயே காதுகேட்க பேச முடியாதவள். ஆனால் எங்களுக்குப் பிறந்த இரு பிள்ளைகளும் பூரண ஆரோக்கியத்துடன் பிறந்தனர்.
நான் சரீரத்தின் இயலாமையினால் கஷ்டப்பட்டது ஒரு பக்கமிருந்தாலும், என் ஆத்துமாவும் பாவத்தில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தது. அப்போது என்னைப் போலவே வாய்பேச, காது கேட்க முடியாத நண்பரைச் சந்தித்தேன். அவர், “நம்மைப்போல இருக்கிறவர்களுக்காக ஒரு கூட்டம் இருக்கிறது. அதில் கலந்து கொள்ள முடியுமா?” என்று கேட்டார். சரி என்று நான் போய் கலந்துகொண்டேன். அந்தக் கூட்டத்தில் நான் எவ்வளவு பாவியாய் இருக்கிறேன் என்றும், இயேசு என்னுடைய பாவங்களை மன்னிக்க வல்லவராய் இருக்கிறார் என்றும் அறிந்து கொண்டேன். அப்பம் பிட்கும் வேளையில் “அவர் என்னுடைய பாவத்திற்காய் அடிக்கப்பட்டார்“ என்றும், ரசத்தைப் பரிமாறும் போது “அவர் எனக்காய் இரத்தம் சிந்தினார்” என்றும் அவர்கள் சொன்னபோது நான் மிகவும் அழுதேன். என்னுடைய வாழ்க்கையை முழுவதும் ஆண்டவர் இயேசுவுக்கு ஒப்படைத்தேன். என்ன ஒரு சந்தோஷம்! நான் இரட்சிக்கப்பட்டேன். எனக்குச் சொல்லிமுடியாத சந்தோஷம் உண்டாயிற்று! பின்பு என்னை ஆண்டவர் ஊழியத்திற்கென்று அழைத்தார். நான் சந்தோஷத்துடன் கீழ்ப்படிந்து குடும்பமாய் 16 வருடங்கள் ஊழியம் செய்து வருகிறேன் இதுவரை சுமார் 350 –க்கும் மேற்பட்ட, என்னைப்போல வாய்பேசாத, காது கேட்காதவர்களை ஆண்டவரிடம் வழிநடத்தி அவர்கள் ஞானஸ்நானம் எடுக்கவும், கிறிஸ்துவின் மந்தையில் சேர்க்கவும் ஆண்டவர் உதவி செய்தார். என்னுடைய மகனும் ஆண்டவரின் ஊழியத்தை செய்கிறான் என்பது எனக்குப் பெரிய மகிழ்ச்சி. நான் மரிக்கும் வரை அல்லது ஆண்டவருடைய வருகை வரை அவருக்காக சாட்சியாக வாழவும், ஆண்டவர் உதவி செய்வார்.
எனக்கன்பனவர்களே! காதுகேளாத, வாய்பேச முடியாத என்னையும் அவர் பயன்படுத்துகிறார். உங்கள் வாழ்க்கையையும் ஆண்டவரிடம் ஒப்புக்கொடுங்கள். ஆண்டவர் இயேசுவுக்காக ஏதாவது ஒரு காரியத்தை செய்யுங்கள். ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார்.
- D. தனராஜ்
ஜெபக்குறிப்பு
தமிழ்நாட்டில் ஆலயமில்லாத கிராமங்களில் 1,௦௦௦ திருச்சபைகள் கட்டப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250