By Village Missionary Movement
Thursday, 08-Sep-2022இன்றைய தியானம்(Tamil) 09-09-2022
நல்ல போர்ச்சேவகன்
“நீயும் இயேசுகிறிஸ்துவுக்கு நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவி” - 2 தீமோத்தேயு 2:3
யூன் என்ற தேவ ஊழியர் இயேசுவைப் பற்றி சீன மக்களுக்கு அறிவித்ததால், அங்குள்ள சீன சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு பல பாடுகளையும் உபத்திரவங்களையும் சந்தித்தார். அநேக நேரங்களில் யூனின் வாயிலிருந்து இரத்தம் வடியும் அளவிற்கு சிறைக்காவலர்களால் தாக்கப்பட்டார். ஊமைக் காயங்களின் விளைவாக அவரது முகம் முழுவதும் கருத்து வீங்கி அடையாளம் கண்டுகொள்ள முடியாத அளவிற்கு சிதைக்கப்பட்டிருந்தது. சிறையில் நிலவும் பயங்கர குளிரின் காரணமாக அவருடைய கைகள் இரத்தச் சிவப்பாக மாறிவிடும். பல நேரங்களில் அவரது கரங்களில் விலங்கிட்டு இறுக்கப்பட்ட காரணத்தால் மணிக்கட்டிலுள்ள சதையானது கிழிக்கப்பட்டு இரத்தம் வழிந்து கொண்டேயிருக்கும். ஒருநாள் யூன் வேதனையை தாங்க முடியாமல் தேவனை நோக்கி அழுதார். அப்பொழுது அவருக்கு ஒரு வசனம் நினைவுக்கு வந்தது. “சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார். யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர் “ (சங். 46:11) இந்த வசனமானது அவரை
உற்சாகப்படுத்தவே யூன் தன்னுடைய சரீரத்தில் புதுபெலன் அடைந்தார். கிறிஸ்துவினிமித்தம் வந்த அத்தனை பாடுகளையும் சகிக்க தேவன் பெலன் தந்தார். இவர் மூலம் இரட்சிக்கப்பட்டோர் அநேகர்.
இதே போல் வேதத்தில் கூட ஸ்தேவான் என்கிற வாலிபனைக் குறித்து பார்க்கிறோம். சபையில் பந்தி விசாரணை செய்யும் பொறுப்பில் இருந்த போதிலும் அவர் இயேசுவுக்கென்று ஊழியமும் செய்து வந்தார். அவரைக் கொண்டு. தேவன் பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தார். ஸ்தேவான் இயேசு கிறிஸ்துவை குறித்து பேசினதை கண்டவர்களில் ஒரு சில பட்டணத்தை சேர்ந்தவர்கள் ஸ்தேவானுக்கு விரோதமாக சாட்சி சொல்லும்படிக்கு மனுஷரை ஏற்படுத்தினார்கள். அவர்கள் ஸ்தேவானை நகரத்துக்கு புறம்பே தள்ளி அவனைக் கல்லெறிந்து கொலை செய்தார்கள். ஆனால் ஸ்தேவானோவென்றால் தன்னை கொலை செய்ய கல்லெறிந்தவர்களுக்காக முழங்காற்படியிட்டு “பிதாவே, இவர்கள் செய்த பாவத்தை மன்னியும் “ என்று ஜெபம் செய்தான். ஸ்தேவானை கொலை செய்ய சவுல் என்கிற வாலிபனும் உடன்பட்டு உதவி செய்தான். இந்த சவுலை தேவன் பவுலாக மாற்றி ஆசியாக் கண்டம் முழுவதிலும் ஊழியம் செய்யும்படிக்கு பவுலை பயன்படுத்தினார்.
எனக்கன்பானவர்களே! தேவனுக்காக நாம் படும் பிரயாசமோ பாடுகளோ அது ஒருநாளும் வீணாய் போகாது. அன்று யூன் இயேசுவுக்காக இரத்தம் சிந்தினார். கிறிஸ்துவுக்குப் பின் ஸ்தேவான் ஆண்டவருக்காக முதல் இரத்த சாட்சியாக மரித்தார். இன்று நாம் தேவனுக்காக என்ன செய்து கொண்டிருக்கிறோம்? எண்ண செய்ய போகிறோம்? என்று சிந்தியுங்கள் செயல்படுங்கள்!
- Mrs.ரூபி அருண்
ஜெபக்குறிப்பு:
இராக்லாந்து மிஷனெரிப் பயிற்சி மையத்தின் மூலம் அநேக ஆயிரக்கணக்கான மிஷனெரிகள் உருவாக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250