By Village Missionary Movement
Sunday, 04-Sep-2022இன்றைய தியானம்(Tamil) 05-09-2022 (Youth Special)
கிறிஸ்துவுக்குள் நல்லாசிரியர்
“என் ஆடுகளை நான் மேய்த்து, அவைகளை நான் மடக்குவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.” - எசேக்கியேல் 34:15
இன்றைய காலக்கட்டத்தில் நல்லாசிரியர் என்ற நற்பெயரை உலகப் பிரகாரமாக பெறுவதே சவால் நிறைந்ததாயிருக்கிறது. அதிலும் குறிப்பாக கிறிஸ்துவுக்குள் நற்பெயருடன் சாட்சியுள்ள நல்லாசிரியராக, எதிர்காலத் தலைமுறைகளாகிய மாணவ சமுதாயத்தை கிறிஸ்துவின் அன்பினால் ஆதாயப்படுத்தும் பணி மிகவும் சவால் நிறைந்ததே! கடந்த 12 வருட மாணவர்களுடனான எனது பயணம் ஆசிரியையாக, தலைமையாசிரியையாக, நிர்வாகியாக அநேகப் பாடங்களை கற்றுக்கொடுத்துள்ளது. கர்த்தர் நித்தமும் என்னை நடத்திய விதத்தை திரும்பிப் பார்க்கும் போது அது ஆச்சரியமாய் இருக்கிறது. இன்னும் அவருக்காக பல சாதனைகளை புரியத் தூண்டுகிறது எனக்கு தேவன் கொடுத்த அழைப்பின் படி நான் இந்த பணியில் கற்றுக்கொண்டவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
நம்மிடத்திலுள்ளது தேவனுடைய மந்தை ;-
1பேதுரு 5: 2 -ன் படி நாம் எந்த வகை நிறுவனத்தில் பணிபுரிந்தாலும், நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிற மாணவர்கள் (அ) பணியாளர்களை தேவனுடைய மந்தைகளாகப் பாவிக்க அறிய வேண்டும். அப்பொழுதுதான் நமக்கு அவர்களை பற்றின ஆத்தும பாரமும், அவர்களின் தேவையறிந்து செயல்படுவதும் அவர்களது உணர்வு மற்றும் மனரீதியான அழுத்தங்களை புரிந்து நடந்துகொள்ளுகிற தன்மை வெளிப்படும்.
நல்ல மேய்ப்பனின் நல் இயல்புகள் வெளிப்பட வேண்டும் ;-
1பேதுரு 5:2-4 வரை சொல்லப்பட்டுள்ளபடி நாம் நம்முடைய அதிகாரிகளின் கட்டாயத்தின் பேரிலோ, நிர்ப்பந்தத்திலோ, இறுமாப்பாய் அதிகாரம் செலுத்தும் நோக்கிலோ மற்றும் அவலட்சணமான உலகப் பிரகாரமான ஆதாயத்திற்காகவோ (பணம், இச்சை மற்றும் சுய லாபத்திற்கு) மாணவர்களை நிச்சயமாகப் பயன்படுத்த கூடவே கூடாது. நல்ல மேய்ப்பர் இயேசு கிறிஸ்துவைப் போல மனப்பூர்வமாய் மந்தைக்கு மாதிரிகளாய் எல்லா செயல்களிலும் நல்ல முன்மாதிரியை காண்பித்து கண்காணிப்பு செய்ய வேண்டும். அதிகாரம் செலுத்த எவ்வளவேனும் கூடாது. அதற்குரிய பிரதான மேய்ப்பர் வரும் போது மகிமையுள்ள வாடாத கிரீடத்தைப் பெற்றுக்கொள்வோம் என்று விசுவாசித்து வீரநடை போட வேண்டும்.
நசல்கொண்டதில் தனிக் கவனம் செலுத்தும் ஆவியின் அபிஷேகம் :-
இதை செயல்படுத்த ஆவியானவரின் விசேஷித்த ஞானம் தேவை. எசேக்கியேல் 34: 4 -ன் படி பலவீனமானவர்களைப் பலப்படுத்த வேண்டும். நசல் கொண்டவர்களை குணமாக்க வேண்டும், எலும்பு முறிந்தவர்களைக் காயங்கட்ட வேண்டும். துரத்துண்டவர்களையும், காணாமல் போனவர்களையும் தேடிக் கண்டுபிடித்து அடைக்கலப்படுத்த வேண்டும். இப்படி நீதியாய் மேய்க்கும் நல்ல மேய்ப்பனைப் போல நாமும் எவ்வித பாகுபாடுகளுக்கும் இடமின்றி வேதத்தின் அடிப்படையில் கரிசனையுள்ள ஆசிரியராக செயல்படும் போது கிறிஸ்துவுக்குள் நல்லாசிரியராவது சாத்தியமே! இதற்கு வேதவாசிப்பும் ஜெபமுமே அஸ்திபாரம்!
- Mrs. மெர்சி ஜெஸிந்தா
ஜெபக்குறிப்பு:
மிஷனெரிகளின் குடும்பம், பிள்ளைகளின் சரீர சுகம் மற்றும் படிப்பிற்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250