By Village Missionary Movement
Tuesday, 09-Feb-2021இன்றைய தியானம்(Tamil) 09-02-2021
மனம் திரும்புதலும் இரட்சிப்பும்
“...கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்...” – அப். 16:31
ஒரு திருச்சபை போதகர் தன் சபையின் தசமபாகங்கள் மற்றும் காணிக்கைகளை எடுத்துக் கொண்டு, மிஷன் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தார். செல்லும் வழியில் 4 வழிப்பறிக்கொள்ளையர்கள் பணத்தைப் பறித்துக் கொண்டனர். இது தேவனின் ஊழியத்திற்கான பணம் என எவ்வளவோ கெஞ்சியும் அவரை தாக்கிவிட்டு சென்றுவிட்டனர். போதகர் இதை அலுவலகத்திற்கு தெரிவித்து ஜெபிக்கும்படி கூறினார். 6 நாட்களுக்குப் பின்பு போதகரிடம் அவர்கள் வந்து, “எங்களை மன்னியுங்கள் ஐயா, இந்த பணத்தை நாங்கள் மது அருந்தவும், தவறான காரியத்திற்கு பயன்படுத்தவும் முற்பட்டபோது எங்கள் கைகள் செயலிழந்து ஒன்றும் செய்ய முடியாமல் போய்விட்டது. அப்போதுதான் நாங்கள் செய்தது தவறு என்பதை புரிந்து கொண்டோம். நாங்கள் இனி திருடாமல் இருக்க என்ன செய்யவேண்டும்” என்று மனந்திரும்பும் இருதயத்தோடு கேட்டனர். போதகர் இயேசு கிறிஸ்துவின் தியாக அன்பையும் அவரது மன்னிக்கும் தன்மையையும் எடுத்துச் சொல்லி கிறிஸ்துவுக்குள் வழிநடத்தினார். அவர்கள் முழு மனதோடு ஆண்டவரை விசுவாசித்தார்கள். மிக விரைவிலேயே முழு குடும்பமும் இரட்சிக்கப்பட்டு அந்த தொழிலையே விட்டு விட்டனர்.
வேதத்தில், பவுலும் சீலாவும் சிறையில் அடைக்கப்பட்ட நடுராத்திரியிலே தேவனை துதித்து பாடினர். அப்பொழுது அவர்கள் இருந்த சிறையின் அஸ்திபாரம் அசைந்தது. இதை கண்ட சிறைச்சாலைக்காரன் அவர்கள் தப்பி ஓடி விட்டார்களோ என்று பயந்து தன் உயிரை மாய்த்துக் கொள்ள துணிந்தான். உடனே, பவுல் அவனை தடுத்து நிறுத்தி, நாங்கள் இங்கே தான் இருக்கிறோம் என்றனர். பின்பு, அந்த சிறைச்சாலைக்காரன் அவர்களிடம் வந்து நான் இரட்சிக்கப்பட என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான். அப்போது அவன் மாத்திரமல்ல, அவன் குடும்பம் முழுவதும் இயேசுவை விசுவாசித்து, உடனே ஞானஸ்நானம் பெற்றார்கள்.
எனக்கன்பானவர்களே! இரட்சிப்பு கர்த்தருடையது! எந்த மனிதனையும் மாற்ற அவரால் கூடும். எத்தனை கடின மனம் படைத்தவரையும் மாற்றுவது அவருக்கு லேசான காரியமே! இப்படி இரட்சிக்கப்பட்ட ஒருவர் மூலம் முழுக்குடும்பமும் ஆண்டவரண்டை வர முடியும் என்பதற்கு இன்றைய இரு உண்மை சம்பவங்கள் உதாரணம். ஒரு வேளை நீங்கள் இவ்வாறு எண்ணலாம், “நான் ஆண்டவரை ஏற்றுக் கொண்டு அவரது அன்பை ருசிபார்த்து வருகிறேன். ஆனால் என் குடும்பம் இன்னும் வரவில்லையே, வருவதற்கேற்ற சூழ்நிலையும் இல்லையே” என்று கலங்காதீர்கள். தேவனால் கூடாதது ஒன்றுமில்லை. எல்லோரும் இரட்சிக்கப்பட வேண்டுமென்பதே அவரது திட்டம். நிச்சயம் அது உங்கள் குடும்பத்தில் நிறைவேறும்.
- Mrs. சரோஜா மோகன்தாஸ்
ஜெபக்குறிப்பு:
பைபிள் காலேஜில் படிக்கும் பிள்ளைகள் அமருவதற்கான இருக்கைகள் வாங்க, தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.
இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள
Whats app:
தமிழில் பெற - +91 94440 11864
ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002
ஹிந்தியில் பெற - +91 93858 10496
தெலுங்கில் பெற - +91 94424 93250
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.vmmorg.template.msmapp
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250