By Village Missionary Movement
Thursday, 01-Sep-2022இன்றைய தியானம்(Tamil) 01-09-2022
அன்பே பெரியது
“.. விசுவாசம், நம்பிக்கை , அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது: இவைகளில் அன்பே பெரியது.” - 1கொரி. 13:13
பெல்ஜியம் நாட்டைச் சார்ந்த ஜோசப் டேன்யன் என்பவர் ஹவாய் தீவிலுள்ள தொழுநோயாளிகள் மத்தியில் ஊழியம் செய்யச் சென்றார். தொழுநோயாளிகளிடம் நட்பை வளர்த்துக் கொள்ள எண்ணினார். அவர்களோ விலகிச் சென்றனர். ஒரு சிற்றாலயம் கட்டி ஆராதனை நடத்தினார் ஒருவரும் ஆண்டவரை ஏற்றுக்கொள்ளவில்லை. தன் முழு பெலத்தோடு அவர்களுக்குத் தொண்டு செய்தார். 12 ஆண்டுகள் தன் முழு அன்பையும் தொழுநோயாளிகள் மேல் ஊற்றியும் ஒன்றும் பயனில்லை; எல்லாம் வீணாயிற்று. கடைசியில் தீவை விட்டு வெளியேற எண்ணி கப்பல் ஏற வந்தபோது தன் உள்ளங்கையை உற்றுப்பார்த்தால் வெள்ளைப் புள்ளிகள் உணர்ச்சியற்று இருந்தன.
தனக்கும் தொழுநோய் வந்தது என அறிந்ததும் மீண்டும் அவர்களிடமே திரும்பிச் சென்று ஊழியம் செய்தார். ஆனாலும் அன்பும் சேவையும் குறையவில்லை. ஜோசப் டேன்யனுக்கும் தொழுநோய் என்ற செய்தி ஹவாய் தீவு மக்களிடம் பரவியது. அந்த வாரம் ஆராதனைக்கு ஆலயம் நிரம்பியது. தங்கள் வியாதி தொற்றியும் அன்பையும், பாசத்தையும் குறையாமல் காட்டுவதை எண்ணியே அத்தனை கூட்டம். ஆலயத்திற்கு வந்த அனைவரும் ஆண்டவரை எற்றுக்கொண்டனர்.
இந்த அன்பைத்தான் கிறிஸ்துவும் நம்மில் எதிர்பார்க்கிறார். ஆகவே கற்பனைகளையும், நியாயப்பிரமாணத்தையும் சுருக்கி அன்பிலே கொண்டு வருகிறார். “உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழுமனதோடும் அன்புகூருவாயாக; உன்னிடத்தில் நீ அன்புகூருவது போலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக “( மத் 22:37-39 ) என்கிறார். தேவனிடத்திலும் மனிதர்களிடத்திலும் அன்பு கூர, நம் சுயம் சாகடிக்கப் பட்டால் தான் முடியும், சுயம் மேலோங்கி இருக்கும் போது அகங்காரம், பொறாமை தான் வரும், அன்பு வராது. தேவனிடத்தில் அன்புகூரும் போது அவர் மீது விசுவாசமும், நம்பிக்கையும் தானாய் வரும். கிறிஸ்து நம் வாழ்வில் நிறைந்துவிடுவார். நாம் மனிதர்களிடத்தில் அன்புகூரும்போது அன்பு நம் வாயில் நம் செயலில் வரும். குறைவான நாம் நிறைவான கிறிஸ்துவால் நிரப்பப்படும் போது அன்பு நம் வாழ்வாய் மாறும்.
“அன்பில்லாமல் கொடுக்க முடியும்; ஆனால் கொடுக்காமல் அன்பு செலுத்த முடியாது “ என்று கூறினார் ஏமிகார்மைக்கேல் அம்மையார், பிரியமானவர்களே! நம் வாழ்வில் எது பெரிதாய் உள்ளது? “அன்பே பெரியது“ என்று ஆவியானவர் சொல்கிறார். ஜோசப் டேன்யன் என்ற மிஷனெரி வாழ்வைப் பார்க்கும்போதும் “அன்பே பெரியது“ என நாம் உணரலாம். அன்பு நம் வாழ்வில் வெளிப்படும் போது நாம் ஒளியாய் ஒளி வீசுவோம். நம் ஒளியினிடத்திற்கு ராஜாக்களும் வருவார்கள், வந்து நம் ஒளிக்குக் காரணமான கிறிஸ்துவை அறிந்து கொள்வார்கள்.
- P. ஜேக்கப் சங்கர்
ஜெபக்குறிப்பு:
இம்மாதம் முழுவதும் நடைபெற உள்ள ஊழியங்களில் தேவக்கரம் உடனிருக்க ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250