By Village Missionary Movement
Friday, 26-Aug-2022இன்றைய தியானம்(Tamil) 27-08-2022
கலாச்சார சீர்கேடு
“...பிற்காலத்திலே அவபக்தியாய் நடப்பவர்களுக்கு அவைகளைத் திருஷ்டாந்தமாக வைத்து;...” – 2 பேதுரு 2:6
நம் இந்தியக் கலாச்சாரம், கலாச்சாரங்களில் உயரிய பண்புகள் நிறைந்தது. கொஞ்சம் கொஞ்சமாக மேற்கத்தியக் கலாச்சாரம் நுழைந்து நம் நாடும் சீர்குலைய ஆரம்பித்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாக சமூக வலைதளங்கள் மூலம் தொடர்பு நட்பு ஏற்பட்டு, ஆணுக்கு ஆண், பெண்ணுக்குப் பெண் திருமணம் செய்து கொள்ளல், சிறு பச்சிளம் குழந்தைகளுக்கும் பாலியல் துன்புறுத்தல், இணைய தளங்களில் வாழ்வினைத் தொலைக்கும் இளைய தலைமுறை, கீழ்ப்படிய மனமில்லாத குழந்தைகள், படிக்காமலே வெற்றி தேட வழிகள், குறுக்கு வழியில் வேலை தேடுதல் – பணம் சேர்த்தல், சாலை விபத்துக்களைக் கண்டு பதறுகிற காலம் போய், அதனை வீடியோ எடுக்கிற சமூகம் என்று நம் கலாச்சாரம் சீரழிந்துப் போனதை நினைத்து நாம் துயரப்படுவது உண்டா? இது எப்போது சீரடையும் என்று நாம் நினைத்ததுண்டா? இப்பிரச்சனைகள் சமுதாயத்தோடு நின்றுவிடாமல், சமுதாயத்தில் இரட்சிப்பின் முக்கியப் பங்காற்றும் சபைக்குள்ளும் நுழைந்துவிட்டது மிகவும் வேதனைக்குரியது.
இவையனைத்தும் சமுதாயப் பிரச்சனை என்பதைத் தாண்டி, தனி மனித ஒழுக்கமின்மையின் ஆரம்பமாகவே கருதப்படவேண்டும். வேதத்தில் இப்படி சீரழிந்த சமூகங்களைக் குறித்தும், அவைகள் ஆண்டவரால் அழிக்கப்பட்ட விதத்தைக் குறித்தும் நாம் வாசிக்க முடியும். எடுத்துக்காட்டாய் ஆதி.11-ஆம் அதிகாரத்தில் ஜனங்களின் பெருமை என்னும் ஒரு நிலை, கர்த்தர் அவர்களின் பாஷைகளைப் பிரிக்கவும் காரணமாயிற்று. நோவாவின் காலத்தில் வாழ்ந்த மக்களின் பாவம், கர்த்தர் அவர்களை ஜலப்பிரளயத்தினால் அழிக்கக் காரணமாயிற்று. லோத்தின் காலத்தில் நடந்த சமுதாயச் சீர்கேடுகள் (ஓரினச் சேர்க்கை) கர்த்தர் அவர்களை அக்கினியால் அழிக்கச் செய்தது.
புதிய எற்பாட்டிலோ இயேசு நமக்காக மரித்து உயிர்த்ததினால் இப்படிப்பட்ட அழிவுகள் இல்லாவிட்டாலும், 2 பேதுரு கூறுகின்றது, “இப்படிப்பட்ட அசுத்தங்களுக்கு நாம் தப்பின பின்பு மீண்டும் இவற்றில் அகப்பட்டால், நமது முன்னிலைமையிலும் பின்னிலைமை அதிக கேடுள்ளதாயிருக்கும்” என்று.
ஆம் பிரியமானவர்களே, முதலில் தோமா பின் அநேக மிஷனெரிகளின் விலையேறப்பெற்ற தியாகத்தினால் தேவ அன்பை அறிந்து, மொத்த மொத்தமாய் ஆண்டவர் இயேசுவை இரட்சகராய் ஏற்றுக்கொண்ட நாம், நம் இந்திய தேசத்தில் இன்று இத்தனை பெரிய சீர்கேடுகள் நடந்து கொண்டிருப்பதற்கு நடுவில் நம் சமுதாயத்தின் பின்னிலைமை என்ன? 2பேதுரு.1:5-7 வரை உள்ள வசனங்கள் நம்மை ஜாக்கிரதையுள்ளவர்களாய் இருந்து, இந்தச் சீர்கேடுகளுக்கு விலகி ஓடச் சொல்கின்றது. நாம் மாறும்போது நம்மைச் சுற்றியுள்ள சமுதாயமும் மாறும் என்பதில் சந்தேகமில்லை. எனவே தேவ பக்தியோடு விலகி ஓடுவோம். நம்மால் இயன்ற வரை நம் சமுதாயத்தை மாற்றம் செய்வோம்!!
- Mrs. மஞ்சுளா
ஜெபக்குறிப்பு:
ஒவ்வொரு மாதமும் நாம் வெளியிடும் பத்திரிக்கைகளை அச்சடிப்பதற்கும், அஞ்சலில் கொடுக்க ஆகும் தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250