By Village Missionary Movement
Wednesday, 24-Aug-2022இன்றைய தியானம்(Tamil) 25-08-2022
இதற்குத் துரிதப்படு
“நன்மைசெய்யும்படி உனக்குத் திராணியிருக்கும்போது, அதைச் செய்யத் தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே.” – நீதிமொழிகள் 3:27
முரளி என்ற ஒருவர் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, அநேகர் கூட்டமாக நிற்பதைக் கண்டார். என்ன என்ற ஆவலுடன் இவரும் கூட்டத்தின் நடுவில் சென்றார். ஒருவர் விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிக்கொண்டு இரத்த வெள்ளத்தில் கிடந்தார். முரளியின் இருதயம் கலங்கியது. ஏன் யாரும் உதவாமல் வேடிக்கை பார்க்கிறீர்கள் எனக் கேட்டார். 108 ற்கு அழைப்பு விடுத்துள்ளோம். அவர்கள் வருவார்கள் என்றனர் சிலர். சிலரோ இதில் தலையிட்டு யார் Court – Case என்று அலைவது. நமக்கு எதற்கு வம்பு என்று அலட்சியமாகக் கூறினர். முரளி உதவ முன்வந்தபோது அந்தக் கூட்டத்தார் அவரையும் உதவ விடவில்லை. இறுதியில் அந்த நபர் மரித்தே போனார்.
வேதத்தில் இதே போன்றதொரு உவமையை லூக்கா எழுதின சுவிசேஷத்தில் இயேசு கூறுகிறார் (லூக்கா 10:30 – 35). எருசலேமிலிருந்து எரிகோவிற்குப் பிரயாணப்பட்டிருந்த மனிதன் கள்ளர்களால் தாக்கப்பட்டு குற்றுயிராய்க் கிடக்கிறார். அந்த வழியாய் வந்த ஆசாரியனும் லேவியனும் அவனுக்கு உதவாமல் பக்கமாய் விலகிச் செல்கின்றனர். ஆனால் சமாரியன் ஒருவன் அப்பக்கமாய் வருகையில், அந்த மனிதனைக் கண்டு அவனுக்கு உதவி செய்து, அவனை சத்திரத்தில் சேர்த்ததோடு, தன்னிடமிருந்த பணத்தையும் அவனுக்காக செலவழிக்கின்றான். இவர்களில் இந்த ஒதுக்கப்பட்டவனாக அக்காலத்தில் கருதப்பட்ட சமாரியனே மேலானவன் என்று இயேசு கூறியதை நாம் காண்கிறோம். வேதம் அவனை நல்ல சமாரியன் என அழைக்கிறது.
இன்று நம்முடைய சமுதாயத்திலும் இதுபோன்ற காட்சிகளைப் பார்க்கும்போது பக்கமாய் விலகிச் செல்கிற ஆசாரியரும் லேவியருமே அதிகம் உள்ளனர். முரளியைப் போன்று யாராவது உதவ முன்வந்தாலும் அவர்களையும் தடுக்கும் அவலநிலையே நம் சமூகத்தில் உள்ளது. அதிலும் குறிப்பாக, கிறிஸ்துவின் அன்பை பிரதிபலிக்கவேண்டிய கிறிஸ்தவர்களே நமக்கு எதற்கு என விலகிச்செல்லும் சோகம்! என்னவென்று சொல்ல! நம்மால் செய்யமுடிந்த ஒரு உதவியை நாம் மற்றவர்களுக்கு செய்யாமல் இருப்பதும் பாவம்தான் என வேதம் நம்மை எச்சரிக்கிறது. நம் சுயநல யோசனையினால் ஒரு உயிர் பறிபோகுமானால் நாமே அதற்கு பொறுப்பு. எனவே இதுபோன்ற சமூக நிலை மாற நம்மால் இயன்றதை செய்வோம். மாற்றத்தை நம்மிலிருந்து தொடங்குவோம்.
- Mrs. ஸ்டெபி ராக்சன்
ஜெபக்குறிப்பு:
“கண்மணியே கேள்” என்று வாலிபப்பெண் பிள்ளைகளுக்காக பிரத்தியேகமாக வெளியிடப்படும் இதழின் மூலம் வாலிபப்பெண் பிள்ளைகள் தங்கள் வாலிபத்தைக் காத்துக்கொள்ள ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250