Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 24-08-2022
Share:

By Village Missionary Movement

Wednesday, 24-Aug-2022

இன்றைய தியானம்(Tamil) 24-08-2022

 

பிச்சைக்காரர்கள்

 

“உங்களுக்கு உண்டானவைகளில் பிச்சை கொடுங்கள்,...” – லூக்கா 11:41

 

கர்நாடகா மாநிலத்தில் பெல்லாரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் 45 வயதான மன வளர்ச்சி குன்றிய பிச்சைக்காரர் ஹீச்சா பஸ்யா. இவர் அப்பகுதியில் பிரபலமான பிச்சைக்காரர். இவருக்கு யாராவது பிச்சை கொடுத்தால், அவர்களிடமிருந்து ஒரு ரூபாய் மட்டும் எடுத்துக்கொள்வார். மீதமுள்ள பணத்தை அவர்களிடமே திருப்பிக் கொடுத்துவிடுவாராம். வற்புறுத்தி அதிக பணம் கொடுத்தாலும் அவர் வாங்க மறுத்துவிடுவாராம். மக்கள் அவருக்கு பணம் கொடுக்கும் போதெல்லாம் அவர் சிரித்துக்கொண்டு அவர்களை ஆசீர்வதித்துள்ளார். அவர் யாரையும் தொந்தரவு செய்ய மாட்டாராம். அவர் கடந்த சில மாதங்களுக்கு முன் பேருந்து மோதி இறந்துவிட்டார். அந்தப் பகுதியிலுள்ள பல்வேறு அமைப்புகள், கடைக்காரர்கள், தனி நபர்கள் தானாக முன் வந்து பணம் திரட்டி, இறுதி ஊர்வலத்தை ஏற்பாடு செய்தனர். பஸ்யாவின் இறுதிச்சடங்கு ஊர்வலத்தில் சுமார் 4000 பேர் கலந்து கொண்டது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பிச்சையெடுக்கும் மன வளர்ச்சி குன்றிய பிச்சைக்காரருக்கு அப்பகுதி மக்கள் காட்டிய கரிசனை, மிகவும் வியக்கத்தக்கது. பரிசுத்த வேதத்திலும் ஆண்டவர் இயேசுவின் காலத்தில் வாழ்ந்த ஒரு குருடன் வழியருகே உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான், (மாற்கு.10:46) அவன் ஆண்டவர் இயேசு அவ்வழியாக வருகிறாரென்று கேள்விப்பட்டு “இயேசுவே, தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும்” எனக் கூப்பிடத் தொடங்கினான். அவனைப் பேசாதிருக்கும்படி அநேகர் அவனை அதட்டினார்கள். அவனோ “தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும்” என்று முன்னிலும் அதிகமாய்க் கூப்பிட்டான். ஆண்டவர் இயேசு அவனைப் பிச்சைக்காரன் என்று ஒதுக்கவோ உதாசீனப்படுத்தவோ இல்லை. மாறாக, அவனிடம் கரிசனையோடு விசாரித்து அவனுக்கு என்ன செய்ய வேண்டுமென்று கேட்டார். அவன் “பார்வையடைய வேண்டும்” எனக் கூறியதும் அவனைப் பார்வையடையச் செய்கிறார். இதுவே ஆண்டவர் இயேசுவின் அன்பு.

 

இதை வாசிக்கின்றதான பிரியமானவர்களே! பிச்சையெடுப்பவர்களை அற்பமாக எண்ணவேண்டாம். அதே சமயத்தில் பிச்சைக்காரர்களை காத்திருக்கவும் வைக்காதீர்கள். “அனைத்தும் இழந்த நிலையில் கை நீட்டுகிறான் ஒருவன். அனைத்தும் இருந்தும் கை நீட்டித் தர மறுக்கும் ஒருவன்” இதில் யார் பிச்சை எடுப்பவர்? சற்று யோசிப்போம்.

 

அநேக நேரங்களில் நாம் அவர்களைப் பார்த்தவுடன் வெளிப்படுத்தும் கோபமான வார்த்தைகள் சமூகத்தில், பெற்றோரால், குடும்பத்தினரால் அவர்களுக்கு ஏற்பட்ட காயத்தை மேலும் அதிகரிக்கும். ஆண்டவர் இயேசுவின் போதனை அதுவன்று. அவர் இப்படிப்பட்ட ஒதுக்கப்பட்டவர்களைத் தேடிச் சென்றே ஊழியம் செய்தார். நாமும் அதைப் பின்பற்ற அவர் விரும்புகிறார். நாம் இப்படிப்பட்ட மனிதர்களோடு எத்தனை முறை கரிசனையாக பேசியுள்ளோம்? சிந்திப்போம். நம்மால் முடியாவிட்டாலும் அன்பான சில வார்த்தைகள் காயப்பட்ட அவர்கள் இருதயத்துக்கு மருந்தாய் அமையும். நாம் நமது பிறந்தநாள், திருமணநாள் போன்ற நாள்களில் வீணாய்ச் செலவிடும் பணத்தைக் கொண்டு இவர்களுக்கு உதவலாம். இதுவே கர்த்தர் எதிர்பார்க்கும் அன்பு.

- Mrs. சக்தி சங்கர்ராஜ்

 

ஜெபக்குறிப்பு:

“கழுதைகள் கையேடு” என்று ஊழியர்களுக்காக பிரத்தியேகமாக வெளியிடப்படும் இதழின் மூலம் கடைசிக்கால ஊழியர்கள் எழுப்புதலடைய ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)



hacklink satın al