By Village Missionary Movement
Thursday, 11-Aug-2022இன்றைய தியானம்(Tamil) 11-08-2022
வரம்பற்ற தவறுகள்
“என் மகனே, உன் இருதயத்தை எனக்குத்தா; உன் கண்கள் என் வழிகளை நோக்குவதாக.” - நீதி. 23:26
மேற்கு வங்க மாநிலத்தில் முர்ஷிதாபாத்தில் சில வாரங்களுக்கு முன்பாக வெளிநாட்டில் வேலை செய்துகொண்டிருக்கும் தன் கணவர் இறந்துபோனார் என்று இறப்புச் சான்றிதழ் பெற்று பெரியதொரு மோசடியில் ஈடுபட்ட ஒரு வழக்கு காவல் நிலையத்திற்கு வந்தது. வெளிநாட்டில் வேலைசெய்யும் அந்த நபர் தன் மனைவி தன்னிடம் தொலைபேசியில் சரிவர பேசாமல் குறைத்துக்கொண்டதை அறிந்து இந்தியா திரும்பினார். அப்பொழுதுதான் தன் மனைவி வீட்டில் இல்லையென்பதையும் வேறு ஒருவருடன் முறை தவறிப் பழகி தன்னை விட்டுச் சென்று விட்டதை அறிந்துகொண்டார். மேலும் தான் உயிரோடு இருக்கும்போதே கணவர் இறந்துவிட்டதாக இறப்புச்சான்றிதழ் பெற்று தன்னுடைய இன்ஷ்யூரன்ஸ் பணம் ரூ. 25 இலட்சத்தை அபகரித்து கொண்டதையும் குறித்து வேதனையடைந்தார். இதைப் போன்ற விசித்திரமான மோசமான சம்பவங்கள் எல்லா இடங்களிலும் இப்பொழுதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
நீதிமொழிகள் புத்தகம் ஒரு மனிதனுடைய கண்களும், இருதயமும் கட்டுப்படுத்தப்படாத பொழுது, எவ்வளவு மோசமான நிலைக்குத் தள்ளப்படுவோம் என்பதை அநேக இடங்களில் எச்சரித்துக் கூறுகிறது. இன்றைக்கு நாம் வாசித்த வேதபகுதியில் “என் மகனே உன் இருதயத்தை எனக்குத் தா” என்று ஆண்டவர் நம்மிடம் சொல்கின்றார். “ஒருவன் கிறிஸ்துவுக்குள் இருந்தால் புதுச் சிருஷ்டியாக இருக்கின்றான், பழையவைகள் ஒழிந்துபோயின, எல்லாம் புதிதாயின” என்று பவுல் கொரிந்தியருக்கு எழுதுகின்றார்.
கிரமமாக தனி ஜெபம் செய்து வேதத்தை வாசிக்கின்ற பழக்கம் இல்லாதவர்கள் வாழ்க்கையில் பல விஷயங்களில் வழி தவறிப் போய்விடுகின்றனர். தனி ஒரு மனிதனுடைய பாதுகாப்பும் – ஒரு குடும்பத்தின் மொத்தப் பாதுகாப்பும் அவர்கள் எந்த அளவிற்கு ஆண்டவர் இயேசுகிறிஸ்துவைச் சார்ந்து வாழ்கின்றனர் என்பதைப் பொருத்தே காணப்படுகின்றது.
ஆண்டவர் இயேசுகிறிஸ்துவில் பிரியமானவர்களே! என்றும் இல்லாத அளவிற்கு பாவம் இன்றைக்கு ஜனங்களின் மத்தியில் அவிழ்த்து விடப்பட்டு கட்டுக்கடங்காமல் அநேகர் தறிகெட்டுப் போய் காணப்படுகின்றனர். அன்றியும் பாலியத்திற்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடு, சுத்த இருதயத்தோடு கர்த்தரைத் தொழுது கொள்கின்றவர்களோடே நீதியும், விசுவாசத்தையும், அன்பையும், சமாதானத்தையும் அடையும்படி நாடு என்று வேதாகமம் நமக்கு ஆலோசனை சொல்கின்றது. கண்களையும், இருதயத்தையும் சரியாக வைத்துக் கொள்ளத் தெரியாதவர்கள் வாழ்க்கையில் திசைகெட்டுப்போவது நிச்சயம். கர்த்தருடைய உதவியை நாடுங்கள். கவனமாயிருங்கள். வெற்றியோடு வாழ ஆண்டவர் உதவி செய்வார்.
- P.ஜேக்கப் சங்கர்
ஜெபக்குறிப்பு:
மருத்துவமனை ஊழியங்கள் மூலம் சந்திக்கப்படுகின்ற நோயாளிகள் ஆண்டவர் இயேசுவை ஏற்றுக்கொள்ள, சுகம் பெற ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250