By Village Missionary Movement
Wednesday, 10-Aug-2022இன்றைய தியானம்(Tamil) 10-08-2022
மன்னிப்பின் மகத்துவம்
“நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன்வேலைக்காரனுக்கு இரங்க வேண்டாமோ...” - மத்தேயு 18:33
அதிநவீன உலகில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எங்கு பார்த்தாலும் CCTV Camera-க்கள் குறிப்பாக ரயில் நிலையம், அலுவலகம், நெடுஞ்சாலைகள் மற்றும் தற்போது வீடுகளில் கூடப் பொருத்தப்பட்டுள்ளது. அதில் நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், அதின் பதிவுகள் நாம் திரும்பவும் பார்த்து நடந்த காரியங்களை நினைவுபடுத்திக்கொள்ள முடியும். அதன் பதிவை நாம் மறுக்கவும் முடியாது – மறைக்கவும் முடியாதல்லவா?
வேதத்தில் மத்தேயு 18 – ஆம் அதிகாரத்தில் ஒரு உவமை சொல்லப்பட்டுள்ளது. ஒரு வேலைக்காரன் தன் எஜமானிடத்தில் 10,000 தாலந்து கடன்பட்டிருந்தான். அதைத் திருப்பிக் கொடுக்க அவனுக்கு வசதி வாய்ப்பில்லை. ஆகவே அவன் தன் எஜமானிடம் சென்று தான் பட்ட கடனை மன்னிக்க வேண்டுமென்று மிகவும் வருந்திக் கேட்கும்போது, அவரும் அவனுக்கு மன்னித்துவிட்டார். என்ன ஒரு நல்ல எஜமான்! மன்னிப்பைப் பெற்றுக்கொண்ட அந்த வேலைக்காரன் தன்னிடம் 100 வெள்ளிக்காசுக்காக கடன்பட்டிருந்த தன் உடன் வேலைகாரனிடத்தில் மிகவும் கடுமையாக நடந்துகொண்டது வேதனைக்குரியதாகும். மிகவும் சொற்பக் காசுகள் கடன்பட்டிருந்த உடன் வேலைக்காரனை தொண்டையைப் பிடித்து, நெரித்து அவனை காவலில் போடுவித்தான். எத்தனை பெரிய அநியாயம். இதைப் பார்த்த இன்னொரு வேலைக்காரன் அதை எஜமானுக்கு அறிவிக்க, அவர் அவனை சிறைச்சாலைக்காரர்களிடத்தில் ஒப்புக்கொடுத்தார் என்று மத்தேயு 18:23-25 ல் பார்க்கின்றோம்.
பிரியமானவர்களே, நம் கர்த்தர் மன்னிக்கும் மனதுடையவராய் இருக்கின்றார். நாமும் அவரைப் போலவே இருக்கவேண்டும் என்று விரும்புகிறார். அது நியாயம்தானே. மத்தேயு.18:33 – ல் கர்த்தர் சொல்கிறார், “நான் உனக்கு இரங்கினது போல நீயும் உன் உடன் வேலைக்காரனுக்கு இரங்க வேண்டாமோ?” நாம் சமுதாயத்தில் சீராக சமாதானமாக வாழ வேண்டுமென்றால் மன்னிப்பின் சுபாவம் மிகவும் முக்கியம். இதில் யார் யாரை மன்னிப்பது என்பது குறிப்பிடத்தக்கது. நம்மை மன்னித்தவரை நேசிப்பது போலக் காண்பித்து, நம்மிடம் கடன்பட்டவரிடம் மன்னியாமல் எரிச்சல் கொள்ளும் போது நம்மை மன்னித்து ஏற்றுக்கொண்ட கர்த்தரை மறந்து விடுகிறோம். நாம் மறந்தாலும், மறைத்தாலும் கர்த்தர் அறிந்திருக்கிறார். நாம் மற்றவர்களை மன்னிக்கவும், அவர்கள் நம்மிடம் பட்ட கடனை மறக்கவுங்கூடிய சுபாவம் உடையவர்களாய் மாறும்போது நாம் வாழும் சமுதாயத்திலே ஒரு சிறிய மாற்றம் நம் மூலம் உண்டாகும்.
- Mrs. சங்கர்ராஜ்
ஜெபக்குறிப்பு:
பசித்தோருக்கு உணவளிக்கும் திட்டத்தின் மூலம் அநேகர் போஷிக்கப்பட ஆண்டவரை அறிந்துகொள்ள ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250