By Village Missionary Movement
Thursday, 04-Aug-2022இன்றைய தியானம்(Tamil) 05-08-2022
ஏற்றுக்கொள்
“நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்” - ரோமர் 5:8
இன்று நம்முடைய சமுதாயம் பல சீரழிவுகளுக்கு மத்தியில் இருக்கிறது. அதில் ஒன்று விபசாரம். விபசாரம் என்பது பாவம் என நம் வேதம் நமக்கு கூறுகிறது. அது தேவனுக்குப் பிரியமில்லாத செயல். விபசாரம் என்பது ஆண், பெண் என இருபாலினத்தவர் சம்பந்தப்பட்டது. ஆனால் அதை நம் சமூகம் பெண்கள் மீது மட்டுமே திணித்து பெண்களை மட்டுமே குற்றவாளிகளாக தீர்கின்றது. அப்படிப்பட்ட பெண்களை ஒதுக்கிவைப்பது, அருவருப்பாய் பார்ப்பது என அவர்களை மட்டுமே தண்டனைக்குள்ளாக்கி வருகிறது. ஆனால் அதில் பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் கடத்தப்பட்டும் தங்கள் சொந்த விருப்பம் இல்லாமலும் உறவினர்களாலும், குடும்பத்தினராலும் விற்கப்பட்டும் விபசாரத்திற்குள் தள்ளப்படுகிறார்கள் என்பதை நாம் எத்தனை முறை யோசித்துள்ளோம்!
விபசாரம் நிச்சயமாய் பாவம்தான். அதில் மாற்றுக்கருத்தில்லை. நம் தேவன் பாவத்தை வெறுக்கிறவர். ஆனால் பாவிகளையோ நேசிக்கிறார். வேதத்தில் யோவான் 8ம் அதிகாரத்தில் நாம் விபசாரத்தில் பிடிக்கப்பட்ட ஒரு பெண்ணைக் குறித்து வாசிக்கிறோம். அங்கு வேதபாரகரும், பரிசேயரும் அந்த பெண்ணைக் கல்லெறியும்படி இயேசுவினிடத்தில் கொண்டு வருகிறார்கள். ஆனால் இயேசுவின் பதில் அவர்கள் இருதயங்களைக் குத்தியது, ”உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன்“ என்று இயேசு கூறியதும், அவர்கள் ஒவ்வொருவராய் அங்கிருந்து கலைந்து செல்கின்றனர். இயேசுவும் அவர்களைத் தண்டியாமல் “இனி பாவம் செய்யாதே” எனக்கூறி அனுப்பிவிடுகிறார். “நாம் யாவரும் பாவம் செய்து தேவ மகிமை அற்றவர்களானோம்“ என்று வேதம் கூறுகிறது. அப்படியானால் மனிதராய் பிறந்த அனைவரும் பாவிகளே! நம்மை பாவத்திலிருந்து மீட்கவே இயேசு சிலுவையில் தொங்கினார்.
ஆம், பிரியமானவர்களே! இயேசு நாம் பாவிகளாய் இருக்கையில் நம்மை ஏற்றுக்கொண்டது போல, நாமும் பிறருடைய குற்றங்களை மன்னிக்க கடமைப்பட்டுளோம். மற்றவர்களை குற்றவாளிகளாய்த் தீர்க்க நாம் சற்றேனும் தகுதியற்றவர்கள். விபசாரக்காரர்கள் பாவிகளாய் நம் கண்களுக்கு காணப்பட்டாலும், தேவன் அவர்களை விலையேறப்பெற்ற ஆத்துமாவாகவே பார்க்கிறார். இயேசு அவர்களை ஏற்றுக்கொண்டதைப் போல நாம் அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்.. ஆறுதலான வார்த்தைகளைப் பேசி, அவர்களுக்கு தேவ சத்தியத்தைக் கூறும்போது அவர்களும் இரட்சிக்கப்படுவார்களே! எனவே பாவிகளை நேசிப்போம். தேவ அன்பை வெளிப்படுத்துவோம்! ஆத்துமாக்களை ஆதாயம் செய்வோம் .
- Mrs. ஸ்டெபி ராக்சன்
ஜெபக்குறிப்பு
தேசத்திற்காக திறப்பிலே நிற்கக்கூடிய புதிய, புதிய ஜெபக்குழுக்களை கர்த்தர் எழுப்பித் தர ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250