By Village Missionary Movement
Monday, 01-Aug-2022இன்றைய தியானம்(Tamil) 01-08-2022 (Youth Special)
கேடான சிந்தை
“தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனதில்லாதிருந்தபடியால்... கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார்” - ரோமர் 1:28
தேவன் நம்மை ஆணும் பெண்ணுமாக சிருஷ்டித்து, தமது அருமையான சித்தத்தின்படி குடும்பமாக அமைத்து, இந்த உலகை ஆளும்படியாகவும், தேவனுடைய பரிசுத்த சந்ததியை உருவாக்கும் படியாகவும் அவர்களை உருவாக்கினார் என்று வேதம் கூறுகிறது. அப்படியானால் திருமண வாழ்வில் ஆணும் பெண்ணுமாக இணைக்கப்பட்டு அவர்கள் கர்த்தருக்கென்று பிள்ளைகளைப் பெற்று வளர்க்க வேண்டும் என்பது நமக்குக் கொடுக்கப்பட்ட கடமை. அதுவே தேவனின் நியமம். ஆனால் சமீப காலமாக மனிதர்கள் இதை மாற்றி வருகின்றனர். திருமணத்திற்கு அப்பால் உறவு வைத்துக்கொள்ளுவது, திருமணம் செய்யாமல் Live in Relationship என்ற பெயரில் விரும்பும்வரை வாழ்ந்து விட்டு, பின்னர் பிரிந்து விடுவது, ஓரினச்சேர்க்கை என இப்படி பல பாவங்களில் மனித குலம் சிக்கி வருகிறது. தற்போது மேலை நாடுகளில் இந்த நிலை உள்ளது. அது ஊடுருவி நம் நாட்டிலும் சர்வ சாதாரண விஷயமாக வந்து விட்டது. ஆனால் இவை தேவனுக்கு அருவருப்பானவை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
வேதத்தில் இதற்குப் பல எடுத்துக்காட்டுகள் உண்டு. பழைய ஏற்பட்டு காலங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணம் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தாலும் அவை தேவனுக்குப் பிரியமானவை அல்ல. தாவீது பத்சேபாளிடம் பாவம் செய்ததன் விளைவை நாம் அறிவோம். அதுபோல புதிய ஏற்பாட்டின் காலத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்பதே நியமனம். அதுமட்டுமல்லாமல், திருமணத்திற்குப் பின் பிரிந்து வேறு திருமணம் செய்வதும் தேவனுடைய பார்வையில் ஏற்றுக் கொள்ளப்படத்தக்கதல்ல. ஓரினச்சேர்கை என்னும் பாவத்தினால் சோதோம் கொமோராவிற்கு ஏற்பட்ட நிலையும் நாம் அறிந்ததே! இப்படிப்பட்ட மக்கள் தங்கள் ஆத்துமாக்களையும் சரீரங்களையும் இழிவான இச்சைக்கு ஒப்புக்கொடுத்தவர்கள். தேவனை அறியும் அறிவைப் பற்றிக் கொண்டிருக்க மனதில்லாமல் இருக்கின்றபடியால் தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார் என வேதம் கூறுகிறது.
அன்பு வாலிபப் பிள்ளைகளே! இப்படிப்பட்ட மரணக் கண்ணிகளுக்குள் சிக்கிவிடாமல் தேவனைப்பற்றி பிடித்துக்கொள்ளுங்கள். தற்போது உள்ள Social Media, வலைதளங்கள் மூலமாக எதிர்பாலினத்தவரிடம் எளிதில் பழக முடிகிறது. ஆனால் தேவனின் நியமம் என்பது திருமணத்திற்குப் பின்னுள்ள சிநேகத்தைத்தான். அவனவன் தன் சொந்த மனைவியையும் அவளவள் தன் சொந்த புருஷனையும் பற்றிக்கொண்டிருக்கவும் வேதம் நம்மை எச்சரிக்கின்றது. எனவே வேதத்தைத் தியானித்து தேவனைப் பற்றிக் கொள்ளுங்கள். உங்கள் இருதயங்களை கேடான சிந்தைக்கு விலக்கிப் பாதுகாத்துக்கொள்ளுங்கள். ஆமென்.
- Mrs. புவனா தனபாலன்
ஜெபக்குறிப்பு:
இம்மாதம் முழுவதும் நடைபெறுகிற ஊழியங்களில் கர்த்தர் தம்முடைய வல்லமையை விளங்கப் பண்ண ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250