By Village Missionary Movement
Sunday, 31-Jul-2022இன்றைய தியானம்(Tamil) 31-07-2022 (Kids Special)
இயன்றதைச் செய்
“...நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்” - மாற்கு 16:15
சரண் என்ற குட்டித் தம்பிக்கு இரண்டு கால்களும் ஊனம். நடக்கமுடியாத அவனை பிரயோஜனமற்றவன் என்று எண்ணி குடும்பத்தினர் தெரியாத ஒரு ஊரின் பஸ் ஸ்டாண்டிலே போட்டு விட்டு சென்றனர். யாராவது இரக்கப்பட்டு சாப்பாடு கொடுத்தால்தான் அன்று அவன் வயிறு நிறையும். வெயில், மழை, குளிர் இவைகள்தான் அவனுக்குத் துணை. சில வாரங்கள் இவ்வாறு கழிந்தன. அவன் வாழ்வில் ஒரு நாள் உதயம் தோன்றியது. குப்பையிலுள்ள பொருட்களை விற்று பிழைக்கிற ஒரு வயதான தாய் அவனைப் பார்த்து, இரக்கப்பட்டு தன் சிறிய கூரை வீட்டிற்கு கொண்டு போனார்கள். தினமும் அன்போடு அவனுக்கு சாப்பாடு கொடுத்தார்கள். உண்மையான கரிசனையோடு கவனித்தார்கள். இவர்கள் இயேசுவின் பிள்ளையானதால் அனுதினமும் வேதம் வாசித்து ஜெபம் செய்வார்கள். சரணுக்கும் ஜெபிக்கக் கற்றுக் கொடுத்தார்கள். எழுதப் படிக்கத் தெரியாத அவனுக்கு, எழுத்துக்களைச் சொல்லிக் கொடுத்து வேதம் வாசிக்கக் கற்றுக் கொடுத்தார்கள். நாம் ஆண்டவருக்காக எதையாவது செய்ய வேண்டுமென்ற பாரத்தையும் அடிக்கடி அவனிடம் பகிர்ந்து கொள்வார்கள். ஒரு நாள் அந்த தாயார் மரித்துப் போனார்கள். துக்கத்தின் மத்தியில் இருந்த சரண், மனிதாபிமானமுள்ள ஒருவரால் ஒரு அரசு காப்பகத்திற்கு மாற்றப்பட்டான். அவனுக்கு கொடுக்கப்பட்ட இடம் முதல் மாடியின் ஜன்னல் ஓரம். அந்த இடத்திலும் அவன் எப்பொழுதும் போல ஒவ்வொரு நாளும் வேதம் வாசித்து ஜெபம் செய்து வந்தான்.
அவனது உள்ளத்தில் ஆண்டவருக்காக எதையாவது செய்யவேண்டுமென்ற எண்ணம் வந்து கொண்டேயிருந்தது. ஆனாலும் இந்த நிலைமையில் நான் கிறிஸ்துவுக்காக என்ன செய்யமுடியும் என்று எண்ணி சோர்ந்து போனான். ஒரு நாள் தன்னை கவனிக்க வரும் நபரிடம் ஒரு நோட்டும் பேனாவும் கேட்டு வாங்கினான். ஒவ்வொரு நாளும் ஒரு துண்டு பேப்பரில் வேதத்திலுள்ள ஒரு வசனத்தை எழுதி சுருட்டி ஜன்னல் வழியாக கீழே போட்டான். அதுவே அவன் செய்த ஊழியம். ஒருநாள் அந்த வாழியாக ஒரு வாலிபப் பெண் தனிமையுணர்வினால் பாதிக்கப்பட்டு தற்கொலைக்கு நேராய் சென்றாள். அந்த நேரத்தில் சரண் எழுதிப்போட்ட வசனம் அந்தப் பெண்ணின் தலையில் விழவே அவள் அதை எடுத்து பிரித்து படித்தாள். அதிலே, “பயப்படாதே, நான் உனக்குத் துணை நிற்கிறேன்” என்ற வசனம் எழுதியிருந்தது. அதை வாசித்து அவள் தைரியப்பட்டு தன் மனதை மாற்றிக் கொண்டு வீட்டுக்குப் போனாள். அவள் வாழ்வு மாற்றப்பட்டது. யாருக்கும் உதவாத சரண் இப்படி எத்தனையோ பேருக்கு ஆசீர்வாதமாயிருந்தான்.
அன்பு தம்பி, தங்கச்சி நீ இயேசப்பாவுக்கென்று ஏதாவது செய்திருக்கிறாயா சிந்தித்துப் பார். நடக்கவே முடியாத சரண் இயேசப்பாவிற்கு ஊழியம் செய்ய முடியுமானால், நீ சும்மா இருக்கலாமா? உன்னால் இயன்ற ஊழியத்தைச் செய்யத் துவங்கு, சரியா!
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250