By Village Missionary Movement
Saturday, 30-Jul-2022இன்றைய தியானம்(Tamil) 30-07-2022
நன்றியை எதிர்பாராதிருங்கள்
“நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக;...” – கலாத்தியர் 6:9
நாம் வாழும் இந்த மாறுபட்ட உலகில் (Broken World) பல விதமான எதிர்மறையான குணங்களைக் கொண்ட மக்கள் இருக்கிறார்கள். நாம் தேவ கிருபையை சார்ந்தவர்களாய், சாட்சியுள்ளவர்களாய் அவர்கள் மத்தியில்தான் வாழ்ந்தாக வேண்டும்.
வேதத்திலே நியாயாதிபதிகள் புஸ்தகத்தில் நன்றியறியாதவர்களைக் குறித்துப் பார்க்கிறோம். நியா.6:1,2ல் மீதியானியரால் மிகவும் சிறுமைப்பட்டு உறைவிடத்திற்கும், உணவிற்கும் 7 வருடம் மிகவும் கஷ்டப்பட்ட இஸ்ரவேலரை மீதியானியரின் கைக்கு நீங்கலாக்கி விட்ட கிதியோனுக்கு இஸ்ரவேல் புத்திரர் உரிய நன்றியை செய்யாமல் மாறாக கிதியோனுடைய கர்ப்பப் பிறப்பான 70பேர் கொலை செய்யப்பட துணை நின்றார்கள். (நியா.8:34,35)
மோசே தான் பார்வோனுடைய குமாரத்தியின் மகன் எனப்படுவதை வெறுத்து தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அனுபவிப்பதைத் தெரிந்துகொண்டு தன் சகோதரரை கண்டு சந்திக்க வந்தபோது இஸ்ரவேல் புத்திரர் அவனுக்கு உரிய அங்கீகாரம் கொடுக்காமலும் அவனுக்கு நன்றியுள்ளவர்களாய் இல்லாமலும் இருந்தார்கள்.
பிரியமானவர்களே! உங்களுடைய வாழ்க்கையிலும் உங்களால் நன்மை பெற்றவர்கள், உங்களுக்கு எதிர்த்து நிற்பார்கள். ஆண்டவர் உங்கள் மூலம் ஒருவரையோ, ஒரு குடும்பத்தையோ புழுதியிலிருந்து சிங்காசனம் போன்ற உயர்வுக்கு உயர்த்தியிருக்கலாம். அவர்களோ ஆண்டவரை மறந்து உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் அவமானப்படுத்துகிறவர்களாய் மாறியிருக்கலாம்.
இப்படியெல்லாம் இருந்தாலும் நாம், நன்மை செய்கிறதில் சோர்ந்து போகாமல் இருப்போம். (கலா.6:9) ஏனென்றால் மற்றவர்கள் நம்மைத் துன்பப்படுத்துகிற காரியத்தில் நாம் வருத்தப்பட்டு ஒரு மூலையில் இருப்போமென்றால் நாம் தளர்ந்து போய்விட்டோம் என்பதாகும். ஆனால் வேதம் சொல்கிறது, நாம் தளர்ந்து போகாதிருந்தால் ஏற்ற காலத்தில் அறுப்போம்.
ஆகவே மனிதர்களிடத்தில் நன்றியையோ, பாராட்டையோ எதிர்பாராதிருப்போம். நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்து போகாதபடிக்கு, தமக்கு விரோதமாய் பாவிகளால் செய்யப்பட்ட இவ்விதமான விபரீதங்களைச் சகித்த கர்த்தரையே நினைத்துக்கொள்ளுங்கள்.
- K. பெஞ்சமின்
ஜெபக்குறிப்பு:
சிவகாசியில் இன்று நடைபெறும் எழுப்புதல் விரும்புவோர் முகாமிற்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250