By Village Missionary Movement
Tuesday, 26-Jul-2022இன்றைய தியானம்(Tamil) 27-07-2022
எரிச்சல்
“அப்பொழுது கர்த்தர் காயீனை நோக்கி: உனக்கு ஏன் எரிச்சல் உண்டாயிற்று? உன் முகநாடி ஏன் வேறுபட்டது?” – ஆதியாகமம் 4:6
பெல்ஜியம் நாட்டில் அண்ட்வெர்ப் நகரத்தில் வயதான ஒருவர் கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்டிருந்தார். போலீசார் விசாரணையில் அவரது பெயர் மரியா வெர்லின்டன் என்பதும், ஓய்வு பெற்ற ஆசிரியர் என்றும் அடையாளம் கண்டு கொண்டார்கள். 2020 நவம்பர் மாதம் நடைபெற்ற இந்தக் கொலையில் அநேக நாட்களுக்குப் பிறகு, உவெண்ட்ஸ் என்ற கொலையாளியை கைது செய்தனர், கொலையாளியின் வாக்குமூலமானது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
கொலை செய்யப்பட்ட வெர்லின்டன் தன்னுடைய முதலாம் வகுப்பு ஆசிரியரென்றும் ஒரு முறை வகுப்பு நேரத்தில் சக மாணவர்கள் மத்தியில் தன்னைக் கடுமையாகத் திட்டி பரிகாசம் செய்ததை தன்னால் சகிக்க முடியவில்லை என்று உவெண்ட்ஸ் கூறினான். ஆசிரியரைப் பழி தீர்க்க வேண்டுமென்ற எண்ணம் எனக்குள் துடித்துக் கொண்டிருந்தது. ஒரு சமயம் சாலையில் சென்று கொண்டிருந்த அவரை கண்டவுடன் என்னால் என்னை கட்டுப்படுத்த முடியவில்லை. கத்தியினால் அவரது உடலில் 101 முறை குத்திக் கொலை செய்தேன் என்று வாக்குமூலம் கூறினான். இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் “உவெண்ட்ஸ் பக்தியுள்ள கிறிஸ்தவனென்றும், வீடற்ற எளிய மக்களுக்கு தன்னால் இயன்றதைக் கொடுத்து உதவுவார் “ என்றும் உவெண்ட்ஸின் வீட்டருகில் உள்ளவர்கள் சொல்கிறார்கள். 30 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற பழி தீர்க்கும் இந்தச் சம்பவமானது நமக்கு ஒரு பாடத்தைக் கற்றுத் தருகிறது.
பரிசுத்த வேதாகமத்தில் ஆதியாகமம் 4-ம் அதிகாரத்தில் நடைபெற்ற கொலையை அங்கு வாசிக்கின்றோம். தன்னுடைய செயல்பாடுகள் பொல்லாதவைகள் என்று அறிந்தும் தன் சகோதரனாகிய ஆபேலை வன்மம் வைத்து காயீன் கொலை செய்தான். எந்தவொரு மனுஷனுக்குள்ளும் எரிச்சல் என்னும் சுபாவத்திற்கு இடங்கொடுப்போமென்றால் அங்கு கொலை பாதகங்கள் நிரம்பிக் காணப்படும். கசப்பு, எரிச்சல் , வன்மம் இது போன்ற சுபாவங்கள் பிசாசினுடையவைகளாகும். அப். பவுல் எபேசியருக்கு நிருபம் எழுதும் போது “பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள்” என்று எழுதுகிறார். சுபாவங்களில் தவறு செய்கிறவர்கள் தங்கள் ஆயுள் நாட்களை இழந்துபோகிறார்கள். வேதாகமத்தில் அதற்கு அநேக சம்பவங்களைக் கூறலாம். கலாத்தியர் 5:22, 23 ல் சொல்லப்பட்டுள்ளபடி ஆவியின் கனியாகிய 9 சுபாவங்களையும் பெற்றுக் கொண்டு அதில் பெருகும்படி விழிப்புடன் இருப்போம். ஆண்டவர் நமக்கு உதவி செய்வாராக ! ஆமென்!
- P.ஜேக்கப் சங்கர்
ஜெபக்குறிப்பு:
நம்பிக்கை டிவி, சத்தியம் டிவி மற்றும் லோக்கல் சேனல்களில் வெளிவரும் நமது “கிராமிய நேரம் “ நிகழ்ச்சியின் மூலமாக கர்த்தருக்கென்று செயல்படும் நபர்களை தேவன் எழுப்ப ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250