By Village Missionary Movement
Monday, 25-Jul-2022இன்றைய தியானம்(Tamil) 26-07-2022
புதைத்திருக்கிற பொக்கிஷம்
“…பரலோக ராஜ்யம் நிலத்தில் புதைத்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது....” - மத்தேயு 13: 44
இங்கிலாந்தில் பீட்டர் வார்ட்லிங் என்ற விவசாயி வசித்து வந்தார். ஒருநாள் இவர் தனது விவசாயப் பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்த போது வயல்வெளியில் சுத்தியல் ஒன்றைத் தொலைத்துவிட்டார். அதை அப்படியே விட்டுவிட்டால் உழவு எந்திரங்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படலாம் என்று நினைத்து அதை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அந்த பரந்து விரிந்த பண்ணையில் தனது நண்பர் எரிக்குடன் இணைந்து கருவி ஒன்றின் மூலம் சுத்தியலை தேட ஆரம்பித்தார், தேடின சுத்தியல் கிடைக்க வில்லை. ஆனால் 24 வெண்கலக் காசுகள், 565 தங்கக் காசுகள், 15,000 வெள்ளிக் காசுகள் மற்றும் 200 வகையான நகைகள் கிடைத்தன
சட்டப்படி முதலாவது அவர் இதை காவல்துறைக்குத் தெரியப்படுத்தினார். மறுநாள் நிபுணர்கள் குழு ஒன்று, அங்கே வந்து ஆராய்ச்சி மேற்கொண்ட போது தொலைந்துபோன சுத்தியலும் கிடைத்தது. இது போன்ற புதையலை கண்டுபிடிப்போருக்கு, கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களின் சந்தைமதிப்பை சன்மானமாகக் கொடுக்க வேண்டும். அவ்வாறு கிடைத்த கோடி ரூபாயை பீட்டரும், அவருக்கு உதவி செய்த எரிக்கும் சரி சமமாகப் பங்கிட்டுக் கொண்டனர்.
இந்தப் புதையலைக் கண்டுபிடித்தவர்கள் அடைந்த சந்தோஷத்திற்கு அளவேயில்லை அல்லவா? இதைக் காட்டிலும் மேலான புதையலை தேவன் நமக்காக வைத்திருக்கின்றார். பரலோக ராஜ்யம் நிலத்தில் புதைத்திருக்கிற பொக்கிஷத்துக்கு ஒப்பாயிருக்கிறது என்று இயேசு கிறிஸ்து கூறினார். அதை கண்டுபிடிப்பவர்கள் அந்தப்புதையலைப் பெற்ற சந்தோஷத்தை விட 1000 மடங்கு சந்தோஷம் அடைவார்கள். இந்தப் புதையலைப் பெற ஒரே ஒரு கண்டிஷன் மாத்திரமே உண்டு. அது இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தால் பாவம் நீங்க கழுவப்பட்டிருக்க வேண்டும் அப்படி கழுவப்பட்டால் அவருடைய கிருபையின் மகா மேன்மையான ஐசுவர்யத்தைக் கண்டுபிடித்து விட்டால் இந்த உலகமும், அதன் பணமும் , சொத்தும் , எல்லாச் செல்வாக்குகளும் நமக்குக் குப்பையாகத் தோன்றும். அவை யாவற்றிற்கும் மறுமையில் எந்த மதிப்புமில்லை என்கிற உண்மை புரியும்.
இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தினால் நீங்கள் கழுவப் பட்டிருக்கிறீர்களா? அவருடைய இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும். அவருடைய மாசில்லாத இரத்தமே நம்மைப் பாவங்களற சுத்திகரிக்க முடியும். பரலோக ராஜ்யத்திற்கு நம்மைத் தகுதிப் படுத்தும். இன்றைக்கே நம்மைக் கழுவிவிட அர்ப்பணிப்போம். அவர் நம்மை சுத்தப்படுத்துவார். பரலோக ராஜ்யத்தின் பொக்கிஷத்தைத் தருவார்!
- Bro. ஹனீஸ் சாமுவேல்
ஜெபக்குறிப்பு:
ஊழியத்தை ஜெபத்தாலும், காணிக்கையினாலும் தாங்கி வரும் பங்காளர்களுடைய பிள்ளைகளின் படிப்பு, வியாபாரம் மற்றும் வேலை ஆசீர்வதிக்கப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250