By Village Missionary Movement
Friday, 22-Jul-2022இன்றைய தியானம்(Tamil) 23-07-2022
எனது வாஞ்சை
“இல்லாமற்போகும் பொருள்மேல் உன் கண்களைப் பறக்க விடுவானேன்? அது... ஆகாயமார்க்கமாய்ப் பறந்துபோம்” - நீதிமொழிகள் 23:5
நான் ஒரு மொபைல் போன் வேண்டுமென்று அநேக நாட்களாக ஜெபித்துக் கொண்டே இருக்கிறேன். ஆனால் எனக்குக் கிடைக்கவில்லை. மறுபடியும் ஜெபித்துக்கொண்டே இருக்கிறேன். அப்பொழுது எனக்குள் ஒரு எண்ணம் வந்தது. ஒரு மொபைல் போன் வேண்டுமென்று ஜெபித்த எனக்கு ஏன் ஆவிக்குரிய வரமோ, கனியோ அல்லது தேவ பிரசன்னத்தை இன்னும் பெற வேண்டும், தேவ மகிமையைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையோ வரவில்லை என்று என்னிடம் நானே கேள்வி கேட்டேன். அழியும் ஒரு பொருளுக்குக் கொடுக்கக் கூடிய முக்கியத்துவத்தை, ஆவிக்குரிய வரத்திற்கோ, கனிக்கோ கொடுக்க முடியாமல் என் இருதயம் பொருள்மேல் அதிக வஞ்சையாய் இருகிறதே என்றுணர்ந்து வெட்கப்பட்டேன்.
அநேக நேரங்களில் கிறிஸ்தவர்களாகிய நாமும் குறிப்பாக ஊழியம் செய்துகொண்டிருப்போர் கூட, எலிசாவைப் போல வாஞ்சை கொள்ளாமல் கேயாசியைப்போல யோசித்துக் கொண்டிருக்கிறோம். நாம் உலகத்திலுள்ள பொருட்களுக்காக, காரியங்களுக்காக அதிக பிரயாசம் எடுக்கிறோம். அதை பாதுகாப்பதற்காக அதிகக் கவனம் செலுத்துகிறோம். ஆனால் அப்போஸ்தலனகிய பவுல் கூறும் போது, “ எனக்கு லாபமான உலக காரியங்கள், செல்வாக்குகள், புகழ் அனைத்தையும் நஷ்டமும் குப்பையுமாக எண்ணுகிறேன் “ என்று கூறுகிறார். மேலும் அவர் கூறும் போது “கீழானவைகளையல்ல மேலானவைகளையே நாடவேண்டும்” என்று ஆலோசனை தருகிறார். பவுலடியார்க்கு தேவனை பிரியப்படுத்துவதும் அவரை முக்கியப்படுத்துவதுமே குறிக்கோளாய் இருந்தபடியால் உலகம் அவருக்குக் குப்பையாகத் தெரிந்தது.
ஆம், நாம் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதுவே நம் வாஞ்சையாக மாறிவிடுகிறது. எலிசாவிற்கு எலியாவின் மேலிருந்த ஆவியின் வரமும், அவர் மேலிருந்த அபிஷேகமுமே பெரியதாகத் தெரிந்ததால் அவருடைய எண்ணமெல்லாம் அதன் மேலேயே இருந்து, விடாமுயற்சியோடு போராடி அதை பெற்றுக்கொண்டார் என்பது எத்தனை ஆச்சர்யம்! இவையெல்லாம் தெரிந்தும் கேயாசியின் மனதில் தேவ காரியத்தைக் குறித்து ஒரு சதவீதம் கூட நாட்டமில்லை. பிரியமானவர்களே! உலகக் காரியங்களுக்காகவும், பொருள்களுக்காகவும் முக்கியத்துவம் கொடுத்து ஜெபிக்கிறீர்களா? நமக்கு இன்னது தேவை என்று அறிந்திருக்கும் பரமபிதா தேவையை சந்திக்க வல்லவர். ஆகவே தேவனுக்கடுத்த காரியங்களுக்காக ஜெபியுங்கள். பூமிக்குரியவைகளையல்ல, மேலானவைகளையே தேடுங்கள். மேலான ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளுங்கள்!
- Mrs. பேபி காமராஜ்
ஜெபக் குறிப்பு:
சேலத்தில் இன்று நடைபெறுகிற எழுப்புதல் விரும்புவோர் முகாமில் கலந்து கொள்கிற நபர்களைக் கொண்டு தேவன் பெரிய காரியங்களைச் செய்ய ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250