By Village Missionary Movement
Monday, 18-Jul-2022இன்றைய தியானம்(Tamil) 19-07-2022
ஒப்பிடமுடியாத மகிமை
“ஆதலால் இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன்” - ரோமர் 8:18
ஒரு கிராமத்தில் தண்ணீருக்குப் பயங்கரத் தட்டுப்பாடு, கஷ்டம் இருந்தது. எல்லோரும் 2 மைல் தூரம் சென்று தண்ணீர் எடுத்து வருவர். அப்போது அக்கிராமத்தில் உள்ள ஒரு தகப்பன் தன் இரண்டு மகன்களிடம் “நம் வீட்டுத்தோட்டத்தில் ஒரு பெரிய புதையல் இருக்கிறது” என்று சொன்னார். வேலைக்குப்போய் வந்த உடனே இரண்டு மகன்களும் மிகவும் முயற்சிசெய்து தோண்ட ஆரம்பித்தனர். ஆனால் ஒரு புதையலும் கிடைக்கவில்லை. உடனே தகப்பன் “புதையலைப் பெற வேண்டுமென்றால் இன்னும் தோண்ட வேண்டும்”, என்று சொல்லி அவர்களை உற்சாகப்படுத்தவும் செய்தார். இருவரும் பாறைகளையெல்லாம் உடைத்து தோண்டினர். அதைக் கண்ட ஊரார் சிரித்தனர், “பைத்தியம்” என்றனர். இருவரும் பொருட்படுத்தாமல் தோண்டினர். ஒருநாள் அதில் ஒரு நீருற்று வந்தது. குடித்துப்பார்த்தபோது அது நல்ல தண்ணீராக இருந்தது. அவர்களுக்கு அந்த ஊற்று நீண்ட நாளைக்குத் தண்ணீரையும், அதிக சந்தோஷத்தையும் தந்தது. அவர்கள் இதற்காக பட்ட கஷ்டம் தெரியாமல் சந்தோஷம் உண்டானது.
அப்.பவுலும் ரோமர் 8: 17,18 –ல், “அவருடனே கூடப் பாடுபட்டால் மகிமையையும் பெறுவோம்” எனக்கூறி “அந்த மகிமையோடு ஒப்பிடும்போது நம் பாடுகள் ஒன்றுமேயில்லை” என்று கூறுகிறார். பந்தயத்தில் ஓடும் வீரன் பரிசுப் பொருளையே நோக்கமாகக் கொண்டு ஓடினால், அந்தப் பந்தய தூரம் கொஞ்சமாக இருக்கும். அதேபோல் ஜெயங்கொள்ளுகிறவன் என்று வெளிப்படுத்தின விசேஷத்தில் சபைகளுக்குச் சொல்லப்பட்ட மகிமை, சோதனையை ஜெயங்கொண்டவர்களுக்குச் சொந்தமாகும். அவ்வளவு பெரிய மகிமைக்கு சுதந்தரராக மாற நாம் என்ன கஷ்டம் வேண்டுமானாலும் படலாம் எனத் தோன்றும். நாம் அதிகமாக நொறுக்கப்படும்போது, தாங்கொண்ணா துயரப்படும் போது நாம் நினைக்க வேண்டிய சத்திய வசனங்கள், “மனுஷனுக்கு நேரிடுகிற சோதனையே நமக்கும் நேரிடுகிறது”, “நம் திராணிக்கு மேல் நாம் சோதிக்கப்பட தேவன் விட மாட்டார்” (1கொரி.10:13) உலகத்திலுள்ள எல்லோருக்கும் உபத்திரவம் உண்டு. ஜெயங்கொள்ள, ஜெயக்கிறிஸ்துவைப் பிடித்துக் கொள்ள வேண்டும். (யோவான் 16:33) நாம் அவரைப் போல பாடுகளைச் சகித்தால் அவரைப் போல் மகிமைப்படுவோம்.
இதனை வாசிக்கிற நீங்களும் சில பாடுகளின் ஊடாகச் செல்லலாம். அதை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டு இலக்கை நோக்கிப் பொறுமையோடு ஓடி, அந்த நித்திய மகிமையை சுதந்தரிப்போம். நாம் அதை மனதில் கொண்டால், அதுவே நம்மை உற்சாகப்படுத்தும். நம் பாடுகளைச் சகிக்க பெலப்படுத்தும்!
- Mrs .அன்பு ஜோதி ஸ்டாலின்
ஜெபக்குறிப்பு:
“ஜெபக்குழு தலைவர்கள் கையேடு” மூலம் 7000 ஜெபக்குழுக்கள் உருவாக்கப்பட; தேசத்தில் எழுப்புதல் உண்டாக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250