Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 18-07-2022 (Youth Special)
Share:

By Village Missionary Movement

Monday, 18-Jul-2022

இன்றைய தியானம்(Tamil) 18-07-2022 (Youth Special)

 

வேலி அடைத்து காத்துகொள் 

 

“எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக் கொள், அதினிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்.” – நீதிமொழிகள் 4:23

 

இரண்டு விவசாய நண்பர்கள் இருந்தனர். தரிசாய்க் கிடந்த விளைநிலத்தில் அந்த நண்பர்கள் தக்காளி பயிரிடலாமென யோசித்து மறுநாளே அதற்குரிய வேலையைத் தொடங்கி விதை விதைத்தனர். செடிகள் சற்று வளர்ந்தன. முதல் விவசாயி தன் தோட்டத்தைச் சுற்றிலும் வேலியடைத்தான். அவ்வப்போது செடிகளின் நடுவில் வளரும் களைகளைப் பிடுங்கிப் போட்டான். இரண்டாம் விவசாயி “இவனுக்கு வேலை இல்லை. இதற்கெல்லாம் வேலிபோட வேண்டுமா? தண்ணீர் பாய்ச்சினால் போதாதா?” என்று கிண்டலாக முதல் விவசாயியிடம் கூறினான். கனிதரும் காலத்தில் இரண்டு தோட்டங்களும் காய்கள் காய்த்துக் குலுங்கியது. தினமும் மாலை இருவரும் தோட்டத்தைப் பார்வையிடும் போது, இரண்டாம் விவசாயி, “நான் வேலியடைக்கவில்லை, களை பிடுங்கவில்லை ஆனாலும் என்னுடைய தோட்டம் நன்றாகக் காய்த்திருக்கிறது தானே! நீ வேலி அடைத்து உன் பணத்தையும், களை பிடுங்கி உன் நேரத்தையும் வீணாக்கி விட்டாய்” என்று ஏளனம் செய்தான். தக்காளிகளெல்லாம் நன்றாக விளைந்து விட்டது. “நாளை பறித்தால் சரியாக இருக்கும்” என்று பேசிக்கொண்டார்கள். சாக்குகளோடு மறுநாள் அதிகாலமே தோட்டத்துக்கு வந்தனர். வேலியடைக்காத தோட்டத்திலுள்ள காய்களெல்லாம் பறிக்கப்பட்டு, தோட்டமே அலங்கோலமாகக் கிடந்தது. 

 

எனக்கன்பான வாலிபர்களே! எல்லாக் காவலோடும் உங்கள் இருதயத்தைக் காத்துக் கொள்ளுங்கள். அதினிடத்தினின்று ஜீவ ஊற்றுப் புறப்படும் என்று வேதம் சொல்கின்றது. நாம் இருதயத்தைக் காத்துக்கொள்வது எப்படி? கர்த்தருடைய வார்த்தைகளை நம் இருதயத்தில் வைத்து சோதனை வரும்போதும், பிரச்சனைகள் வரும்போதும். அவற்றை உபயோகித்து நம்மைக் காத்துக்கொள்ள வேண்டும். நாம் கர்த்தருக்குப் பயந்து தீமையை விட்டு விலகுகிறவர்களாய், கர்த்தரை அதிகமாய் நேசிக்கிறவர்களாய் இருக்கும் பட்சத்தில் நம்மைக் கேலி செய்கிறவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். அப்படிக் கேலி செய்பவர்களின் வாழ்க்கையை வெளியரங்கமாக பார்த்தால் எல்லாமே நன்றாக இருப்பதைப் போலத் தெரியும். ஆனால் அது வேலியடைக்கப்படாத வாழ்க்கை!

 

வேதத்தில் யோசேப்பு, சிம்சோன் என இரண்டு நபர்களைப் பார்க்கிறோம். இதில் யோசேப்பு தன் பரிசுத்தத்தை தேவ பயத்தினால், `வேலியடைத்துக் காத்துக் கொண்டார். அவர் தேவனுடைய பார்வையில் மட்டுமல்லாமல் மனுஷர் முன்பாகவும் உயர்த்தப்பட்டார். ஆனால் சிம்சோன் தன் பரிசுத்தத்தை வேலியடைக்க மறந்துபோனதால், மற்றவர்களுக்கு முன்பாக வேடிக்கைப் பொருளாக மாறிப்போனான். நாம் உலகத்திற்கு ஒத்த வேஷம் தரித்து வாழும்போது, என்னதான் ஆசீர்வாதமான வாழ்வாய் காணப்பட்டாலும், இறுதியில் அது அழிவைத்தரும். அந்த தக்காளித் தோட்டம் போல் நமக்கும், கனிகொடுக்கும் காலம் உண்டு. நாம் நம் மனதை வேத வசனங்களைக் கொண்டு வேலி அடைக்கும்போது மட்டுமே, அது மகிழ்ச்சியாய் இருக்கும். இல்லையெனில் இறுதியில் அழிவே மிஞ்சும். எனவே மற்றவர்கள் பேசும் கேலிப்பேச்சைத் தள்ளி விட்டு, உங்கள் ஆத்துமாக்களை வேலி அடைத்துப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். நல்ல கனிகள் கொடுக்கும் மரங்களாய் வாழுங்கள்! ஆமென்.             

-C.பால் ஜெபஸ்டின் ராஜ்

 

ஜெபக்குறிப்பு:

கண்மணியே கேள் – வாலிப பிள்ளைகளுக்கென பிரத்யேகமாக வெளியிடப்படும் இந்த இதழின் மூலம் நடைமுறை ஆலோசனைகளைப் பெற்று பிள்ளைகள் ஆவிக்குரிய வாழ்வில் வளர ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al