By Village Missionary Movement
Thursday, 14-Jul-2022இன்றைய தியானம்(Tamil) 15-07-2022
உறுதியான விசுவாசம்
“உன்னை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே; உன் வாயை விரிவாய்த் திற, நான் அதை நிரப்புவேன்” - சங்கீதம் 81:10
ஆண்டவர் இயேசுகிறிஸ்துவை விசுவாசித்தால் ஏற்படும் விளைவு என்னவென்று தெரியுமா? இரட்சிப்பு உண்டாகிறது. எத்தனை சந்தோஷம்! சகேயு இரட்சிக்கப்பட்டவுடன் செய்ததென்ன? தன் ஆஸ்தியில் பாதியை ஏழைகளுக்கு கொடுக்கிறேன் என்றான். ஒருவன் இரட்சிக்கப்பட்டவுடன் தேவன் சிருஷ்டித்த மனிதனிடம் அன்பு கூருகிறான். ஜார்ஜ் முல்லர் என்ற தேவ மனிதன் இயேசுவின் நாமத்தில் விசுவாசம் வைத்ததால் ஆயிரக்கணக்கான ஏழை சிறார்களுக்கு தகப்பனானார். அவர்களைப் பராமரிக்க ஆண்டவரைத் தவிர வேறு யாரிடமும் கேட்டதில்லை. பிரிஸ்டாலில் அனாதைக் காப்பகங்களை ஆரம்பிக்கும் முன்னர் தனது தனி தியானத்தில், வேதம் வாசித்த போது, “உன் வாயை விரிவாய்த்திற, நான் அதை நிரப்புவேன்” என்ற வாக்குத்தத்தம் கொடுக்கப்பட்டது. இதுவே அவர் வாழ்வின் எக்காலத்துக்குரிய அடிப்படை ஆதாரமாகிவிட்டது. இவ்வசனம்தான் விண்ணக வங்கியில் காசோலையாக (Cheque) முல்லருக்கு காணப்பட்டது. தேவைப்பட்ட போதெல்லாம் தேவனிடமிருந்து வந்த உதவி, அவரை விசுவாசத்தில் உறுதிப்படுத்தியது.
முல்லர் எப்போதும் ஒரு குறிப்பேடு வைத்திருப்பார். அந்த இரண்டு பக்கங்களில் ஒன்றில் அவர் தேவனிடம் ஏறெடுக்கும் விண்ணப்பங்களும், அதன் எதிர்ப்பக்கத்தில் அவருக்கு கிடைத்த பதில்களையும் குறித்து வைத்திருப்பார். இதன்படி அவருடைய விண்ணப்பங்களுக்கும், குறிப்பாய் திட்டவட்டமாய்க் கிடைத்த பதில்களும் பற்றிய நல்ல ஆதாரக் குறிப்புகள் இருந்தன. இந்தப் பழக்கத்தைப் பின்பற்றி தேவனின் வழிநடத்துதலைக் கண்டு, நன்றியுடன் வாழ விசுவாசிகளுக்குக் கற்பித்தார்.
“...கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள்” – யோவான் 16:24. ஆம், விசுவாச வீரர் என்று முல்லர் அழைக்கப்பட்டார்! நாம் விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண முடியும். விசுவாசத்தின் வெளிப்பாடாய் நாம் வாயைத் திறக்க வேண்டும். வேதத்தில் அந்தப் பார்வையற்ற மனிதர், “தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும்” என்று தன் வாயை விரிவாய்த் திறந்ததுபோல நாமும் தேவனை அழைக்க வேண்டும். பெரும்பாடுள்ள ஸ்திரீ தன் உள்ளத்திலுள்ள விசுவாசத்தின் வெளிப்பாடாய் கூட்டத்தில் முன்னாகச் சென்று இயேசுகிறிஸ்துவின் வஸ்திரத்தின் ஓரத்தைத் தொட்டு சுகம் பெற்றது போல, நாமும் விசுவாசத்தை செயல்படுத்தும்போது நிச்சயம் அற்புதத்தைக் காண்போம். விசுவாசத்தை வர்த்திக்கச் செய்கிற இயேசுவை நீங்கள் நோக்கிப் பார்க்க ஆயத்தமா?
- Mrs.பியூலா செல்வராஜ்
ஜெபக்குறிப்பு:
12 மிஷனெரிகள் மூலமாக அந்தந்த மாநிலங்களில் அர்ப்பணிக்கப்பட்ட 500 மிஷனெரிகளை தேவன் எழுப்பித்தர ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250