By Village Missionary Movement
Friday, 01-Jul-2022இன்றைய தியானம்(Tamil) 02-07-2022
நீதி செய்கிற கர்த்தர்
“...நீதிமானுக்கு பூமியில் சரிக்கட்டப்படுமே; துன்மார்க்கனுக்கும் பாவிக்கும் எத்தனை அதிகம்” – நீதிமொழிகள் 11.31
மனுநீதிச் சோழன் என்ற அரசனைக் குறித்து நாம் அறிவோம். அவரது இந்த பெயருக்கு காரணமாயிருந்தது அவரின் நீதி செய்யும் திறன். ஒருமுறை அவரது தேரினை அவரது மகன் ஓட்டிச் சென்றபோது, எதிர்பாராமல் ஒரு கன்றுக்குட்டியின் மீது ஏற்றிவிட்டான். அப்போது அந்தத் தாய்ப்பசு கண்ணீர் விட்டது. அந்த அரசன் சற்றும் சிந்திக்காமல், தன் மகன் என்றும் நினைக்காமல் தன் மகனை தேர்ச்சக்கரத்தின் கீழ்ப்படுக்கச் செய்து அவன் மீது தேரை ஏற்றிக் கொன்றார். இதன் காரணமாகவே “மனு” என்ற அவரது பெயர் “மனுநீதி” என்று தமிழ் வரலாற்றில் எழுதப்பட்டது.
2தீமோ.4:8-ல் பவுல் “நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர்” என குறிப்பிடுகிறார். ` தீத்து 1:3-ல் அவர் “பொய்யுரையாத தேவன்” என்று வேதம் கூறுகிறது. லூக்கா16-ஆம் அதிகாரத்தில், லாசரு மற்றும் ஐசுவரியவானாகிய ஒரு மனுஷனைக் குறித்து நாம் காண முடியும். அதில் லாசரு உலகில் மிகவும் தரித்திரனாகவும், பருக்கள் நிறைந்து உடலளவில் பெலவீனமானவனாகவும் இருக்கின்றார். ஆனால் ஐசுவரியவான் சகல இன்பமும் குறைவில்லாதவராய் இருக்கின்றார். ஆனால் இவர்கள் மரிக்கும்போது லாசரு ஆபிரகாமின் மடியில் தேற்றப்பட்டு, ஐசுவரியவான் நித்திய அக்கினிக்கு இரையாகவும் மாற்றப்படுகின்றனர். லூக்கா 16:25 –ல் ஆபிரகாம் ஐசுவரியவானைப் பார்த்து “ உயிரோடிருக்குங்காலத்தில் உன் நன்மைகளை அனுபவித்தாய். இப்போது வேதனைப்படுகிறாய்” என்றும், “லாசரு தீமைகளை அனுபவித்தான், இப்போது தேற்றப்படுகிறான்” என்றும் கூறினார். ஆம், நம்முடைய தேவன் நீதியுள்ள நியாயாதிபதி.
ஆம் பிரியமானவர்களே, அவர் நீதியுள்ள நியாயாதிபதி. அவரிடம் அநியாயம் இல்லை. பிர.11:9-ல் கூறியுள்ளபடி “ நம் இஷ்டப்படி நடக்க நமக்கு உரிமையுண்டு. ஆனால் அவையெல்லாவற்றையும் குறித்து நாம் நியாயம் தீர்க்கப்படுவோம். ஒருவேளை உலகக் கண்களை மறைத்து நாம் அந்தரங்கமாய் பாவம் செய்யலாம். யாருக்குத் தெரியப்போகிறது என்று கூட நினைக்கலாம். நாம் செய்வது மட்டுமே சரி என்று கூடத் தீர்மானிக்கலாம். ஆனால் நியாயத்தீர்ப்பின் நாளில் கற்களும், சுவர்களும் கூட நமக்கு எதிராய் சாட்சி கூறும். தேவன் நீதியாய் நியாயம் செய்வார். கிருபையின் காலம் முடியும் நாட்களில், மனுநீதிச் சோழன் தன் மகனென்றும் பாராததுபோல, தேவனும் ஒருவருக்கும் பாரபட்சமின்றி நியாயந்தீர்ப்பார். எனவே ஜாக்கிரதையோடு நடப்போம், நித்திய ஜீவனை சுதந்தரிக்கப் பிரயாசப்படுவோம்.
- Mrs.ஸ்டெபி ராக்சன்
ஜெபக்குறிப்பு:
ஈரோடு பணித்தளத்தில் இன்று நடைபெறும் எழுப்புதல் விரும்புவோர் முகாமில் தேவ வல்லமை வெளிப்பட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250