By Village Missionary Movement
Wednesday, 29-Jun-2022இன்றைய தியானம்(Tamil) 30-06-2022
எலியாவின் தேவன்
“எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்.” - சங்கீதம் 121:1
இஸ்ரவேலின் இராஜாவாகிய ஆகாப், கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான். சமாரியாவிலே பாகாலுக்கு கோவிலையும், பலிபீடத்தையும் கட்டி கர்த்தருக்கு கோபமூட்டினான். அப்போது கர்த்தர், எலியா தீர்க்கதரிசி மூலம் தேசத்தில் வரப்போகும் வறட்சியைக் குறித்து ஆகாபிடம் கூறியபின், எலியாவை கேரீத் ஆற்றண்டையிலே ஒளிந்திருக்கும்படி கூறினார்.
ஆற்றண்டையிலே ஒளிந்திருக்கும் எலியாவின் நிலை என்ன என்பதை சற்று யோசித்துப் பார்ப்போம். அங்கே மனிதர்களின் நடமாட்டமேயில்லை. குடிக்க தண்ணீரைத் தவிர வேறுபானங்கள் அதாவது திராட்சை ரசமும் கிடையாது. படுக்க கட்டிலோ, போர்வையோ இல்லை. வயிறு பசிக்கும் போது சாப்பிட முடியாது. எப்போது காகம் வரும் என்று வானத்தையே அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்திருப்பார். தனக்கு ஆகாரம் கிடைத்ததோ இல்லையோ அந்த காகம் அப்பத்தையும் இறைச்சியையும் தவறாமல் எலியாவுக்கு கொண்டுவந்து கொடுக்கிற பொறுப்பை ஏற்று உத்தமமாய் செய்தது. யாரும் நுழைய முடியாத இடத்திலும் கிரியை செய்து, எலியாவை போஷித்த தேவன் அதிசயமானவரன்றோ!.
அதுபோல நீங்களும் எந்த சாதகமான சூழ்நிலையும் இல்லாமல் தனிமையாக ஆதரவற்று தவிக்கிறீர்களோ? பிள்ளைகளை எப்படி வளர்ப்பேன்? இந்த மாத குடும்ப செலவுக்கு என்ன செய்வேன்? திருமண வயதிலிருக்கும் பிள்ளைகளுக்கு காரியங்கள் கைகூடி வர யார் உதவுவார்? வியாதிக்கு தொடர்ந்து சிகிச்சை பெற பணம் வேண்டுமே என்றெல்லாம் கவலைப்படுகிறீர்களா? ஆண்டவரை நோக்கிப்பாருங்கள். உற்றார், உறவினர், நண்பர்கள் உதவிசெய்வார்கள் என்று மனுஷரைப் பாராதேயுங்கள். காகங்களைப் போன்று அவர்கள் நமக்கு உதவி செய்யலாமே என்று எதிர்பார்க்க வேண்டாம். எலியாவைப் போஷித்தது காகங்களல்ல; காகங்களை அனுப்பின தேவனே அதைச் செய்தார்.
பிரியமானவர்களே! இன்றும் நாம் நமக்கு உதவி செய்யக்கூடிய காகங்களைத் தேடுகிறோமா அல்லது காகத்தை அனுப்பின தேவனை விசுவாசிக்கிறோமா? தேவன் கட்டளையிட்டாலொழிய காகம் பறந்து வராது. ஆகவே நமக்கு ஒத்தாசை செய்கிற தேவனையே நோக்கிப் பார்ப்போம். என் கணவர் மூளைப்புற்று நோயால் சுகவீனப்பட்டபோது சிகிச்சைக்காக பணம் தொடர்ந்து தேவைப்பட்டது. எங்கும் ஒத்தாசையே இல்லை. அந்த கடினமான சூழ்நிலையில் எதிர்பாராத விதங்களில் காகங்களைப் போல் மனிதர்களை தேவன் அனுப்பி எலியாவின் தேவைகளை சந்தித்தது போல என்னையும் சந்தித்தார். ஆம் அன்று எலியாவைப் போஷித்தவர், என்னை நடத்தியவர், உங்களையும் அதிசயமாய் நடத்துவார். கலங்காதீர்கள்.
- Mrs.புவனா தனபாலன்
ஜெபக்குறிப்பு:
வட மாநிலங்களில் புதிய பணித்தளங்கள் ஆரம்பிக்கப்பட தேவன் கிருபை பாராட்ட ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250