By Village Missionary Movement
Wednesday, 22-Jun-2022இன்றைய தியானம்(Tamil) 23-06-2022
அவருக்கு தெரியும்
”…உங்களுக்கு இன்னது தேவை என்று அவர் அறிந்திருக்கிறார்.” – மத்தேயு 6:8
ஒரு மாலை வேளையில் காற்று இதமாக வீசிக்கொண்டிருந்தது. இந்த நேரத்தில் படகு சவாரி செய்தால் நன்றாயிருக்கும் என்று எண்ணிய நபர் ஒருவர் boat ஐ எடுத்துக்கொண்டு கடலுக்குள் சென்றார். அவர் நடுக்கடலை அடைந்தபோது காற்றின் வேகம் குறைந்ததால், படகை செலுத்துவது அவருக்கு மிகவும் சிரமமாக இருந்தது. சூரியன் அஸ்தமிக்கிற வேளையிலே, கஷ்டப்பட்டு படகை இயக்கிக்கொண்டே அவர் ஜெபிக்கத் தொடங்கினார், “இயேசப்பா காற்றின் வேகத்தை மட்டும் அதிகரித்து கொடுங்கள், நான் எப்படியாவது கரை சேர்ந்துவிடுவேன்” என்று ஜெபித்தார். ஆனால் எந்த பதிலும் இல்லை. மிகவும் சோர்வுற்று களைப்படைந்தவராய் இருந்தவர், தூரத்தில் ஒரு கப்பல் வருவதைக் கண்டார். அந்தக் கப்பலில் இருந்தவர்கள் அருகில் வந்து, இவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்து, உணவளித்து, தங்கள் கப்பலில் ஏற்றிக்கொண்டு படகை கப்பலோடு இணைத்துக் கட்டி பயணத்தைத் தொடர்ந்து கரை சேர்த்தனர். கரையிறங்கியவர் இவ்வாறு ஜெபித்தார், “ஆண்டவரே, எனக்கு எது எப்பொழுது தேவை என்பது உமக்கு நன்றாய்த் தெரியும். அதை எனக்கு ஏற்ற நேரத்தில் தந்து உதவினதற்காய் நன்றி” என்றார்.
இன்றைய வேதபகுதியில் 38 வருஷமாய் வியாதியஸ்தனாக இருந்தவனைக் குறித்து நாம் வாசிக்கிறோம். தன் வாழ்க்கையில் மிகவும் நம்பிக்கையற்றவனாக, இனி அவ்வளவுதான், நான் வாழ்ந்து என்ன பிரயோஜனம் என்று அவன் எண்ணியிருக்கலாம். சுயபலத்தினாலும் ஒன்றும் முடியவில்லை, மற்றவர்களை நம்பியும் பிரயோஜனமில்லை என்று புலம்பியிருக்கலாம். இப்படிப்பட்ட அவனிடம் இயேசு, “நீ சொஸ்தமாக வேண்டுமென்று விரும்புகிறாயா?” என்று கேட்ட போது, ஆஹா! எனக்கு உதவி செய்து குளத்தில் இறக்கிவிட ஒருவர் வந்துவிட்டார் என்று அவன் எண்ணியிருக்கலாம். ஆனால் இயேசுவோ அவன் விரும்பிய வழியில் அல்ல தனது சித்தத்தின்படி பதிலளித்தார். “எழுந்திரு, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட” என்ற போது, அவன் சொஸ்தமாகி தன் படுக்கையை எடுத்துக் கொண்டுநடந்தான்.
பிரியமானவர்களே! நம்மில் எத்தனை பேர் “என் வாழ்க்கை நடுக்கடலில் திக்கற்று இருப்பது போல் இருக்கின்றது; ஊழியம் செய்யவேண்டும் என்ற ஆசை இருக்கின்றது. ஆனால் செய்யமுடியவில்லை. என் மகளின் திருமணம் நல்லபடியாக முடிய வேண்டுமே…” இப்படி பல காரியங்களில் ஆண்டவர் பதிலளிக்கும்படி காத்திருக்கிறோம். நாம் விரும்புகிறபடி பதிலளித்தால் நன்றாயிருக்குமே என்று எண்ணுகிறோம். உங்களுக்கு இன்னது தேவை என்று கர்த்தர் அறிந்திருக்கிறார். அவர் தமது தீர்மானத்தின்படி சரியாய் பதிலளிப்பார். அவர் ஒரு வார்த்தை சொன்னால் போதும், உங்கள் வாழ்வு மாறுவது உறுதி. உங்களது தேவைகளை அவருக்குத் தெரியப்பண்ணி, உங்களை முழுவதும் அவரிடம் அர்ப்பணித்து, அவர் உங்களுக்கு என்ன செய்யப்போகிறார் என்று எதிர்பாருங்கள். அற்புதம் நிச்சயம்.
- Sis. ஐடா
ஜெபக்குறிப்பு:
ஊழியர்களுக்கென்று வெளியிடப்படும் ‘’கழுதைகள் கையேடு’’ என்ற பத்திரிக்கைக்கு Postal permit கிடைக்கப்பெற ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250